Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelBharathidasan
பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள்

             மக்கள் நிலை

சிட்டு

         தென்னை மரத்தில் - சிட்டுப்
         பின்னும் அழைக்கும் - ஒரு
புன்னை மரத்தினில் ஓடிய காதலி
'போ போ' என்றுரைக்கும்
         வண்ண இறக்கை - தன்னை
         அங்கு விரித்தே - தன்
சென்னியை உள்ளுக்கு வாங்கிஅச் சேவலும்
செப்பும் மணிவாயால்:
         'என்னடி பெண்ணே - உயிர்
         ஏகிடும் முன்னே - நீ
என்னிடம் வா, எனையாகிலும் கூப்பிடு.
தாமதம் நீக்கிவிடு'
         என்றிது சொல்லப் - பெட்டை
         எண்ணம் உயர்ந்தே - அத்
தென்னையிற் கூடிப்பின் புன்னையிற் பாய்ந்தது
பின்னும் அழைக்கும் சிட்டு.

அணில்

         கீச்சென்று கத்தி - அணில்
         கிளையொன்றில் ஓடிப் - பின்
வீச்சென்று பாய்ந்து தன் காதலன் வாலை
வெடுக்கென்று தான் கடிக்கும்
         ஆச்சென்று சொல்லி - ஆண்
         அணைக்க நெருங்கும் - உடன்
பாய்ச்சிய அம்பென கீழ்த்தரை நோக்கிப்
பாய்ந்திடும் பெட்டை அணில்!
         மூச்சுடன் ஆணோ - அதன்
         முதுகிற் குதிக்கும் - கொல்லர்
காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளி ஆகக்
கலந்திடும் இன்பத்திலே.
         ஏச்சுக்கள் அச்சம் - தம்மில்
         எளிமை வளப்பம் - சதிக்
கூச்சல் குழப்பங்கள் கொத்தடி மைத்தனம்
கொஞ்சமும் இல்லை அங்கே!

வானும் முல்லயும்

         எண்ணங்கள் போலே - விரி
         வெத்தனை! கண்டாய் - இரு
கண்ணைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள்
கூடிச் சுடர்தரும் வான்!
         வண்ணங்களைப் போய்க் - கரு
         மாமுகில் உண்டு - பின்பு
பண்ணும் முழக்கத்தை, மின்னலை, அம்முகில்
பாய்ச்சிய வானவில்லை,
         வண்ணக் கலாப - மயில்
         பண்ணிய கூத்தை - அங்கு
வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தனள்!
மேல்முத்தை வான் சொரிந்தான்!
         விண்முத் தணிந்தாள் - அவள்
         மேனி சிலிர்த்தாள் - இதைக்
கண்ணுண்ண உண்ணக் கருத்தினி லின்பக்
கடல்வந்து பாய்ந்திடுதே!

மனிதர்

         மஞ்சம் திருத்தி - உடை
         மாற்றி யணிந்தே - கொஞ்சம்
கொஞ்சிக் குலாவிட நாதன் வரும்படி
கோதை அழைக்கையிலே,
         மிஞ்சிய சோகம்-மித
         மிஞ்சிய அச்சம்-'என்
வஞ்சியும் பிள்ளையும் நானிறந்தால் என்ன
வாதனை கொள்வாரோ'
         நெஞ்சிலிவ் வாறு - நினைந்
         தங்குரைக் கின்றான்: - 'அடி
பஞ்சைப் பரம்பரை நாமடிக் பிள்ளைகள்
பற்பலர் ஏதுக்’ கென்பான்.
         கஞ்சி பறித்தார் - எழுங்
         காதல் பறித்தார் - கெட்ட
வஞ்சகம் சேர்சின்ன மானிடச்சாதிக்கு
வாய்ந்த நிலை இதுவோ!'

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com