|
பாரதியார் பாடல்கள்
உலகத்தை நோக்கி வினவுதல்
நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? - பல
தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? - உம்முள்
ஆழ்ந்த பொருளில்லையோ? 1
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம்
கானலின் நீரோ? - வெறுங்
காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? - இந்த
ஞாலமும் பொய்தானோ? 2
காலமென்றே ஒருநினைவும்
காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? - அங்குக்
குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? - இதைச்
சொல்லொடு சேர்ப்பாரோ? 3
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே - நித்தம்
விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம்,
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக்
காட்சி நித்தியமாம். 4
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|