இலவச சட்ட உதவி
வழக்கறிஞர். பி. விஜயகுமார்
இலவச சட்டம் குறித்து குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 304-ல் குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வழக்கறிஞர் வைத்து தன் வழக்கை வாதாடுவதற்கு உரிமை வழங்க வேண்டும் என வற்புறுத்துவதன் நோக்கம்தான் இலவச சட்டத்தின் அம்சமாகும்.
வழக்கறிஞர்கள் வைத்து வழக்கு நடத்தமுடியாதவர்களுக்கு அரசாங்கமே வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்திக் கொள்வதற்கு வழிவகைகள் செய்துகொடுக்கிறது. இதற்குண்டான செலவுகளை அரசாங்கமே இவ்வழக்கறிஞர்களுக்கு கொடுக்கிறது. இதுதான் இலவச சட்ட உதவி.
பிறக்கும்போது மனிதர்கள் எவரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சில சூழ்நிலைகளின் காரணமாகத் தான் மனிதர்கள் பெரும்பாலும் குற்றவாளியா கிறார்கள். அதனால்தான் சிறைச் சாலைகளில் இந்த வாசகம் “Hate crime and not criminals” என்று எழுதி வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். இதன் அர்த்தம் என்னவென்றால் “குற்றத்தை வெறு, குற்றவாளிகளை வெறுக்காதே” என்பதாகும்.
உதாரணமாக இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 302 கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது தூக்குத் தண்டனையோ கொடுக்கலாம் என விவரிக்கிறது. அதேசமயம் இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 100 சில சூழ்நிலைகளில் கொலை குற்றம் செய்பவர்களுக்கு சுத்தமாக தண்டனை ஏதும் வழங்கக்கூடாது எனவும் வற்புறுத்துகிறது.
அதாவது ஒருவனால் தன் உயிருக்கு ஆபத்து வருகிறது, அவனை கொன்றால் மட்டுமே தாம் தப்பிக்கலாம் என்ற சூழ்நிலை ஒருவனுக்கு ஏற்பட்டால் அவன் மற்றவனை கொன்று தான் தப்பித்துக்கொண்டால் அவன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட மாட்டாது. அதே போல் கொடுங்காயம் ஏற்படுத்துவதிலிருந்து தப்பிக்கவோ, பெண் ஒருத்தி தன் கற்பை காப்பாற்றுவதற்காக ஒருவனை கொலை செய்தாலோ, இயற்கைக்கு மாறாக காம இச்சையை தீர்ப்பதற்கு முயல்கிறவனை கொன்றாலோ, ஆட்கடத்தல் செய்தாலோ, வெளி உலகை தொடர்பு கொள்ள முடியாமல் அடைத்து வைக்கும்போதோ அதி லிருந்து தப்பிக்க ஒருவனை கொலை செய்தால் அது கொலை குற்றம் ஆகாது.
இந்த கொலை குற்றம் சில சூழ்நிலையின் காரணமாக ஏற்படுவது. ஆதலால் இப்படிப் பட்ட சூழ்நிலை கைதிகளோ அல்லது மற்ற கைதிகளோ வசதியற்றவர்களாக இருந்தால் அரசாங்கம் கண்டிப்பாக இவர்களுக்கு அரசு செலவில் வழக்கறிஞர் வைப்பதற்கு அனைத்து வசதியும் செய்து தரும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச சட்ட உதவி மையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. வசதியற்றவர்கள் தம் வழக்குகளை நடத்த அரசு தரப்பில் வழக்கறிஞர் வைத்துத் தரவேண்டும் என விருப்பப்பட்டால் இந்த இலவச சட்ட மையத்திற்கு இது குறித்து மனு கொடுக்க வேண்டும். உடன்தானே உங்கள் வழக்குகளை அரசுத்தரப்பில் நடத்தித்தர உடனடி நடவடிக்கை எடுத்துத் தரப்படும். பாதிக்கப்பட்ட ஏழ்மையான முதியவர்களும், பெண்களும் ஜீவனாம்ச வழக்கு, வரதட்சணை வழக்குப் போன்றவைகளை எந்த ஒரு செலவும் இல்லாமல் இலவச சட்ட உதவி மையம் மூலமாக செய்துமுடித்து பயன்பெறலாம்.
குற்றவியல் (Criminal) வழக்குகள் மட்டுமல்லாமல் உரிமையியல் (Civil) வழக்குகளும் கூட இலவச சட்ட உதவி மையம் மூலமாக தொடர்ந்து பயன்பெறலாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|