எழுத்தாளர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டறிக்கை
தமிழக சிறையிலிருக்கும் கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென சமீபத்தில் வெளியிடப்பட்ட எழுத்தாளர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில், கடந்த 1998 மே மாதம் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், மதானியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கடுமையான நீரிழிவு நோய், மூட்டு வலி, முதுகுத் தண்டு பாதிப்பு எனப் பல்வேறு வகையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டபோது 108 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, தற்போது 54 கிலோவாக குறைந்துள்ளது. அவரது வலது காலுக்கு பொருத்தப்பட்டுள்ள செயற்கை கால் மாற்ற வேண்டி உள்ளதால், அவர் எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில் உள்ளார்.
மதானிக்கு சிகிச்சை அளிக்க சிறையில் போதிய வசதிகள் இல்லை. தற்போது சிகிச்சை அளித்து வரும் கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும் கூட, சிறையில் சிகிச்சை அளிக்கப் போதிய வசதியில்லை என சான்று அளித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு நவீன வசதிகள் கொண்ட சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மக்கள் ஜனநாயக கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். இது, வன்முறையை நோக்கமாகக் கொண்ட கட்சி அல்ல. மதானி இதுநாள் வரையிலும் எந்த வழக்கிலும் தண்டனை அடைந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், கடந்த ஆட்சியின் போது மதானியை பிணையில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அண்மையில்கூட கேரள முதல்வர் அச்சுதானந்தன், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மதானியை விடுதலை செய்யக் கோரியுள்ளார். கேரளாவிலுள்ள அரசியல் கட்சியில் எதுவும் மதானிக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, கேரளாவின் மக்கள் செல்வாக்குடைய அரசியல் தலைவரான அப்துல் நாசர் மதானியை அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு, உடனடியாக பிணையில் விடுதலை செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
பா. செயப்பிரகாசம், கவிஞர், சிறுகதை ஆசிரியர் - அ.மார்க்ஸ், எழுத்தாளர், விமர்சகர் - கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுவை - டாக்டர் ப.சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் - பொ. இரத்தினம், மூத்த வழக்கறிஞர், சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம்- சி.நீலகண்டன், ஆசிரியர், ‘அநிச்ச’- இருமாத இதழ் - சுகிர்தராணி, தலித் கவிஞர், பெண்ணுரிமையாளர் - வெளி.ரங்கராஜன், எழுத்தாளர், அரங்க விமர்சகர் - சாரு நிவேதிதா, நாவலாசிரியர், பத்தி எழுத்தாளர் - சுகுணா திவாகர், எழுத்தாளர், பத்திரிகையாளர் - ஆ.இரமேசு, தமிழ் ஆய்வு மாணவர் - வசுமித்ரா, கவிஞர் - புனிதபாண்டியன், எழுத்தாளர், ஆசிரியர் ‘தலித் முரசு’ - வீராச்சாமி, எழுத்தாளர் - கே.எம்.வேணுகோபால், எழுத்தாளர், பத்திரிகையாளர் - ஜெ. ஹாஜஹான் கனி, கவிஞர் - இன்குலாப், கவிஞர் - கவிக்கோ அப்துல் ரகுமான் - வ.கீதா, விமர்சகர், வரலாற்றாசிரியர், பெண்ணுரிமையாளர் - சே.கோச்சடை, தலைவர், தமிழ் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் சங்கம் - கோணங்கி, நாவலாசிரியர் - குட்டி ரேவதி, கவிஞர் - மதிவண்ணன், கவிஞர் - ச.பாலமுருகன், நாவலாசிரியர், பொதுச் செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (P.U.C.L) - கடற்கரய், கவிஞர், பத்திரிகையாளர் - இரத்தின கரிகாலன், கவிஞர் - சு.தமிழ்ச்செல்வி, நாவலாசிரியர் - அழகிய பெரியவன், தலித் நாவலாசிரியர் - விடியல் சிவா, பதிப்பாளர் - லட்சுமி மணிவண்ணன், கவிஞர், நாவலாசிரியர், ஆசிரியர் ‘சிலேட்’ - தளவாய் சுந்தரம், எழுத்தாளர், பத்திரிகையாளர் - கவிதா சரண், எழுத்தாளர், ஆசிரியர் ‘கவிதா சரண்’ - ஜெயந்தன், எழுத்தாளர் - யூமா வாசுகி, நாவலாசிரியர், ஓவியர் - சி.மோகன், எழுத்தாளர், விமர்சகர் - கண்மணி, எழுத்தாளர் - ஓடை துரை அரசன், விமர்சகர் - சுதாகர் கத்தக், தலித் எழுத்தாளர் - கண்ணன். எம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் - சிவக்குமார், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர் - வெ.கோவிந்தசாமி, மொழிபெயர்ப்பாளர் - பெரம்பூர் கந்தன், எழுத்தாளர், ஆசிரியர் ‘அறிவுக் கொடி’
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|