கட்டுரை
திருப்பூர் புத்தகக் காட்சியில் குறும்படம் - தி.மு.ராசாமணி
திருப்பூர் புக் டிரஸ்டும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்திய இந்த புத்தகக்காட்சி திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெற்றது. இப்புத்தகக் காட்சியில் 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்றன. தினசரி மாலை நிகழ்ச்சிகளில் உரை வீச்சுகளும், எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழாக்களும், திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது வழங்கும் விழாவும், பட்டிமன்றங்களும் நடைபெற்றன.
புத்தகக் காட்சி மேடை நிகழ்வுகளில் ஒன்றாக குறும்பட ஆவணப்பட திரையிடல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இவைகளின் வீச்சு புதிய புதிய இளம் தலைமுறையினரைப் புத்தகக் காட்சிகளை நோக்கி ஈர்க்கின்றது.
மதுரை புத்தகக் காட்சியில் திரு உதயசந்திரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இவ்வியக்கம் அடுத்ததாகச் சென்னை, கோவை இவ்வாண்டு முதல் திருப்பூரில் என பற்றி பரவத் தொடங்கிவிட்டது.
ஜனவரி 30 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெற்ற திருப்பூரில் புத்தகக் காட்சியில் திருப்பூர் மாவட்ட இளம் படைப்பாளிகள் இயக்குநர்களின் 10 படங்களும் இதர இயக்குநர்களின் 8 படங்களும் திரையிடப்பட்டன.
ஊமை சிறுவனும் உடல்தானம் மூலம் இச்சமூகத்திற்குப் பயன்படுவான் என்ற இயக்குநர் தாண்டவக்கோனின் ‘பூக்குட்டி’ பாலித்தீன் பரவலால் வரும் ஆபத்தை உணர்த்திய அவரின் ‘பாலிபேக்ஸ்’ ஊனக்கை ஆயினும் நம்பிக்கையால் அதை ஈடு செய் எனச் சொன்ன ‘கை’ ஆகிய 3 குறும்படங்களும் இயக்குநர் கோவை சதாசிவத்தின் மண்ணை வசமாக்கி மண்டலத்தை சுடுகாடாக்குவதை உள்ளம் நோகச் சொன்ன “மண்’ பறவைகளை மறந்த மனிதர்களை அது பற்றிச் சிந்திக்கத் தூண்டிய “ஓட்டு’ ஆகிய 2 ஆவணப்படங்களும்
தானும் கற்க முடியாமல் கற்கத் துடிக்கும் நண்பனுக்கு உதவமுடியாத வறுமை படுகுழியில் சிக்கிய வாழ்வைப் பேசிய ரவிகுமாரின் ‘எட்டா(ம்) வகுப்பு’ குறும்படமும்
கந்துவட்டிக் கொடுமையை நெஞ்சு பதறிடச் சொன்ன இயக்குநர் ஜோதிகுமரனின் ‘வறுமையின் கனவு’ குறும்படமும்
இயக்குநர் பாரதிவாசனின் வறுமையால் வாழ்வை தொலைத்துவிட்ட பெண் குழந்தை தொழிலாளிகள் பற்றி பேசிய ‘ஒரு நாள்’ குறும்படமும், பாரதிவாசன் ஒரு கவிதையையே படமாக்கிய இயக்குநர் ‘குணா’ வின் “காதலாய்’ குறும்படமும்
மதுவால் தடம் புரளும் மனிதனை கண்டித்த இயக்குநர் ராமின் ‘உருமாற்றம்’ கார்ட்டுன் படமும் என 7 இயக்குநர்களின் தயாரிப்பில் திரையிடப்பட்ட 10 படங்களும் ‘முத்துக்கள் பத்து’ என போற்றிப் பாராட்டப்பட்டன.
நமது அன்றாட வாழ்வில் பல்வேறு வடிவிலே நம்மைக் கொத்த வரும் கோட்டைக்கழுகுகளின் மூக்கைத் துளைக்கின்ற சிற்றுளிகளாக இப்படங்கள் விளங்குகின்றன.
மக்களிடமிருந்தே கற்று அதை மக்களுக்கே கலை வடிவில் எடுத்துச் சென்று அவர்களின் சிந்தனையையும், செயலையும் தூண்டும் குறும்படங்கள் ஆவணப்படங்கள் ஓர் அற்புதமான மக்கள் தொடர்புச் சாதனங்கள் ஆகும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|