நினைவுகளை அசைபோட உணர்வுகளில் நடைபோட...
வடுவூர் சிவ.முரளி
சங்ககாலம் முதல் இன்றுவரை நீண்ட நெடுங்காலமாகக் காதலைப் (காதலர்களை அல்ல) போற்றிவரும் சமூகம் நம்முடையது. ரசிப்பதற்கும் அனுபவித்து மகிழ்வதற்கும் ஏற்றது காதல் மட்டுமல்ல, காதல் கவிதைகளும்தான். கவிஞர் பாப்பனப்பட்டு முருகன் ரசித்து அனுபவித்து நமக்கும் தருகிறார் கூந்தல் முதல் கொலுசு வரை தொகுப்பு மூலம் அழகாகவும் ஆழமாகவும்.
விதவிதமான கற்பனைகளில் காதலைப் பாடும் கவிதைகள் தொகுப்பு முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. பின்அட்டையில் இடம்பெற்றுள்ள கவிதையே நூலின் இயல்பைச் சொல்லிவிடுகிறது. காதலனுக்குக் காதலியின் மௌனத்தைவிடப் பெரிய சொற்கள் கிடையாது. அவளது சொற்களைவிடப் பெரிய கவிதை கிடையாது. அவளது கையெழுத்தைவிடப் பெரிய ஓவியம் கிடையாது. அவளது காலடிச் சுவட்டைவிடப் பெரிய கோலம் கிடையாது. அதைக் கவிஞர் கேட்கிறார் இப்படி...
இரண்டாவது முறையில்
எதற்கடி கோலம்?
ஈரவாசலில் பதிந்த
உன் பாதச்சுவடுகள்
போதாதா?
போலீசுக்காரருக்கு யாரைப் பார்த்தாலும் திருடனாகத்தான் தெரியுமாமம். காதலனுக்கு யாரைப் பார்த்தாலும் இயற்கைப் பொருட்களைப் பார்த்தால்கூட தன் காதலியின் அழகில் மயங்குவதாகவே படுகிறது.
உன் கால்களின்
அழகில் மயங்கி
கடல்கூட
அலைகளை அனுப்பி
நுரைக் கொலுசு மாட்டி
அழகு பார்க்கிறது பார் என்கிறார்.
காதல் என்பது வெறும் இச்சை மட்டுமோ அழகை ஆராதிப்பது மட்டுமோ அல்ல. அது ஒருவர் மீது ஒருவர் காட்டும் உண்மையான அக்கறை. அது இத்தொகுப்பின் பல கவிதைகளில் அழகாக வெளிப்படுகிறது, ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு காதலியின் தலையில் விளையாட்டாய்க் குட்டியதற்கு இன்றுவரை ரணமாய்க் கிடக்கிறது காதலனின் மனசு. காரணம் அவன் மனசு வலிக்குமே என்பதால் அல்ல. அவள் விரல்கள் வலிக்குமே என்பதற்காக. மார்பில் படுத்துறங்கும் காதலிக்கு வலது பக்கத்தைத்தான் தருகிறான் காதலன். காரணம்
இடது பக்கம் படுத்தால்
உன் பெயர் சொல்லியே
துடிக்கும் என் இதயத் துடிப்பு
உன் உறக்கத்தைக்
கலைத்துவிடும் என்பதுதான்
காதல் கொண்ட மனதின் மெல்லுணர்வுகளையும் காதலின் மேன்மை பொருந்திய அழகையும் ஆழத்தையும் சிக்கலில்லாத எளிமையோடு பேசுகின்றன இக்கவிதைகள். வள வளா தன்மை இல்லாமல் பளிச்சிடும் மின்னல் கீற்றுகளாய்ச் சின்னச் சின்ன கவிதைகளாய் இருப்பதும் பக்கத்துக்குப் பக்கம் புகைப்படங்களோடு வடிவமைத்திருப்பதும் அழகு.
காதலைக் கடந்து வந்தவர்களுக்கு நினைவுகளை அசை போடவும், காதலைக் கடந்து கொண்டிருப்பவர்களுக்கு உணர்வுகளில் நடைபோடவும் வாய்ப்பளிக்கும் வசந்தக் கவிதைகள் இவை.
கூந்தல் முதல் கொலுசு வரை (கவிதைகள்)
பாப்பனப்பட்டு வி. முருகன்
வெளியீடு : நந்தனா பதிப்பகம், பாப்பனப்பட்டு, பனையபுரம் (அஞ்சல்), விழுப்புரம் - 605 601 / பக்கங்கள் : 64 / விலை : ரூ.25.00
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|