Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2009

ஈழத் தமிழர் மறுவாழ்வுத் திட்டங்களை சர்வதேச அமைப்புகள் வழியே நிறைவேற்ற வேண்டும்!
தா. பாண்டியன்

ஈழத் தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை இலங்கை அரசு மூலம் நிறைவேற்றாமல் அய்.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் வழியாகவே செயல்படுத்த வேண்டும் என்று கோவையில் நடந்த கூட்டத் தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில பொதுச் செயலாளர் தா. பாண்டியன் வற்புறுத்தினார். அவரது உரை: நம்மோடு இந்த மேடையில் இருக்க முடியாது சிறையில் இருக்கும் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், ம.தி.மு.க. மாணவரணி பொறுப்பாளர் சந்திரசேகர், பெரம்பலூர் மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் இலட்சுமணன் மற்றும் வேறு பல தோழர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிக்க நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

நாமும் சரி, சிறைக்குள் இருப்போரும் சரி, கடந்த சில ஆண்டுகளாகவே அண்டை நாடு என்றால் மட்டுமல்ல, நம்முடைய சொந்த உறவுகள் என்ற அடிப்படையிலும் தமிழ் மக்களின் உரிமை களுக்காக சில கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்திருக்கிறோம். போரை நிறுத்தச் சொல்லியும், தமிழர்களைக் கொன்று குவிக்கும் அரசுக்கு, ஆயுதங்களை வழங்காதே என்று வற்புறுத்தியும், சமஉரிமையை வழங்க மறுத்தாலும் முதலில் அடிப்படை உரிமைகளையாவது கொடுக்கத் தயாரா என்று கேட்டும் அல்லது போராடும் இயக்கத்துக்கு எதிராக, ஆயுதங்களை வழங்காமலாவது இருங்கள் என்றும், நாம் வற்புறுத்தி வந்தோம். தனித்தும் கேட்டோம். மத்திய அரசிடம் இணைந்தும் கூட - இலங்கைக்கு கோரிக்கை வைத்தோம். வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமானால் நாம் ஆத்திரப் பட்டு, கடுமையான போராட்டங்கள்கூட எதையும் நடத்தவில்லை. சுவீடனில் ஒரு சாமியார் அடித்துக் கொல்லப்பட்டார். மற்றொரு சாமியார் அடித்துக் காயப்பட்டார் என்றவுடன், பஞ்சாபில் நான்கு நாட்கள் நாடே நிலைகுலைந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, ரயில் பெட்டிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ரயிலைக் கொளுத்தினால்தான், டெல்லிக்காரன் காதுக்கு எட்டும் என்று பஞ்சாப் காரன் புரிந்து வைத்திருக்கிறான். ஆனால் தமிழர்கள் புரிந்து கொள்வதற்கு இன்னும் அதிக காலம் தேவைப்படுகிறது. (கைதட்டல்) ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப் படுகிறார்கள் என்றவுடன், உடனே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. தாக்குதலை நிறுத்தப் போகிறாயா, இல்லையா? என்று கேட்கப்படுகிறது. கேட்கப்பட வேண்டியது நியாயம்தான். ஆனால், இந்தத் தமிழன் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்படும்போது ஒரு கண்டனக் குரல்கூட கேட்கவில்லையே ஏன், என்று என் இதயம் கேட்குமா? கேட்காதா? அரை நூற்றாண்டுக்கு மேல் நடக்கும் இந்தப் போராட்டம் நேர்மையான போராட்டமா? இல்லையா, என்பதையாவது சொல்!

இந்தியாவின் பிரதமர் ராஜீவ் ஒப்பந்தம் போட்டு அங்கே படையை அனுப்பி வைத்தார். அது ஒரு காலகட்டம். அப்போது படையை அனுப்பினாய், இப்போது படைக்கலன்களை அனுப்பி வைத்தாய். நான் இந்த நாட்டின் வரி செலுத்தக்கூடிய ஒரு குடிமகன். என்னுடைய வரிப்பணத்தில் எனது சொந்தத் தாயைக் கொல்லுவதற்கு ஏனடா, துப்பாக்கியை அனுப்பி வைக்கிறாய் என்று கேட்கக்கூடிய உரிமை எனக்கு உண்டா? இல்லையா? தமிழினத் தலைவர் என்று மகிழும் கலைஞர் கருணாநிதி, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி டெல்லிக்கு அழைத்த போது நானும் வந்தேனே! பிரதமரிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு என்னைக் கேட்டபோது, நானும் பிரதமரிடம் வலியுறுத்தினேனே! உடனே - ராஜீவ் படுகொலைக்குப் போய்விடு வார்கள். விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டு பட்டியலை வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். எத்தனை காலத்துக்கு இதைத் திரும்பத் திரும்ப கூறப் போகிறார்கள்? பன்னாட்டுப் படை உதவிகளோடு - ராஜபக்சே என்ற கொடுங்கோலன் தமிழர்களைக் கொன்று குவிக்கிறானே, உலக நாடுகளும், மனித குலமும் கண்டிக்கிறதே, நீ மட்டும் ஏன் கண்டிக்க மறுக்கிறாய்? டெல்லிக்குப் போனதுபோது மருத்துவர் ராமதாசு கோரிக்கைகளை எழுதிக் கொண்டே வந்து எல்லோருக்கும் கொடுத்தார். அப்போது அவர் மகன் மத்திய அமைச்சர். நான் கூட கேட்டேன், மிகுந்த நம்பிக்கையோடு வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே என்று, அவர் சொன்னார். இவர்கள் மீது நம்பிக்கை இல்லை. எனவே தான் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன் என்று (சிரிப்பு) அப்போது நான் பிரதமரிடம் கேட்டேன். பாவமன்னிப்பு வழங்கக் கூடிய உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப் கூட போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் போது, பிரதமராகிய நீங்கள், உத்தரவாகக்கூட கூற வேண்டாம். ஒரு பொது வேண்டுகோளாக, போரை நிறுத்த இந்தியா விரும்புகிறது என்று கூறக் கூடாதா என்று கேட்டேன். அதற்கு பிரதமர், அப்படிச் சொன்னால், இரு நாடுகளுக்கும் நல்லுறவு பாதிக்கும் என்றார். தமிழர்களைக் கொன்று குவிக்கும் எலும்புக் கூடுகளின் மீதுதான், இரு நாடுகளின் நல்லுறவு கட்டப்படுகிறதா என்று கேட்கிறேன்.

இப்போது இலங்கைக்கு எதிராக அய்.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட் டுள்ளது. நியாயமாக இந்தியா தானே, இத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். இதற்கு இந்தியாவுக்கு சகல உரிமையும் இருக்கிறதே. பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கே நடந்த கலவரத்தால் இங்கே அகதிகள் வரத் தொடங்கி விட்டார்களே. இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்களே. இந்தக் காரணத்தைக் காட்டி, இந்தியா, இலங்கைக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கலாமே! அவன் அடிப்பான், அடி வாங்கிக் கொண்டு அநாதையாக ஓடி வருகிறவர்களுக்கு சோறு போட இந்தியாவா? அடிப்பதை நிறுத்து; இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களை திருப்பி எடுத்துக் கொள் என்று கேட்க இந்தியாவுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? கிளிநொச்சியைப் பிடித்த பிறகு இன்னும் 400 மீட்டர் பாக்கி; மூன்றே நாளில் போர் முடிந்து விடும் என்று ராஜபக்சே அறிவித்தான். ஆனால், 400 மீட்டரை பிடிப்பதற்கு 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. முற்றாக போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பிறகு, இந்திய அரசு என்ன கோரிக்கையை வைத் திருக்க வேண்டும்? சர்வதேச பத்திரிகையாளர்களை தொலைக்காட்சியினரை போர் நடைபெற்ற7 பகுதிக்கு உடனே அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்க வேண்டுமா? வேண்டாமா? தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாவது நேரில் சென்று பார்வையிட அனுமதி கோரியிருக்க வேண்டாமா? இதைச் செய்யாமல், 20000 மக்களை இனப்படுகொலை செய்த அரசோடு இந்தியாவின் நல்லுறவு கெட்டு விடக் கூடாது என்று கூறுகிறீர்களே; இது நியாயம் தானா?

விடுதலைப்புலிகள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாகக் கூறி தடை போட்டவர்கள். இனப் படுகொலை செய்யும் இராஜபக்சே அரசை கொலை வெறி பிடித்த அரசு என்று அறிவித்திருக்க வேண்டாமா? இன்று உலகம் முழுதும் இலங்கையில் நடந்தது ‘இனப்படுகெலை’ என்று கூறுகிறது. இனப்படு கொலை செய்யும் நாடு எப்படி ஒரு நட்பு நாடாக இருக்க முடியும்? அது ஒரு ஜனநாயக நாடுமல்ல; மனித உரிமைகளை மதிக்கும் நாடுமல்ல; அது ஒரு காட்டுமிராண்டி நாடு. அந்த நாட்டோடு பேசி - தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வாங்கித் தரப் போவதாக இப்போது கூறுகிறார்கள். இதையும் நீ தான் கூறிக் கொண்டிருக்கிறாயே தவிர, அவன் இது பற்றி ஒரு வரியாவது சொன்னானா? அவன் சொல்ல மாட்டான். அவனை உன்னால் பேச வைக்க முடியாது. அவனை பேச வைக்க - சர்வதேச நாடுகள் அய்.நா. வழியாக எடுத்த முயற்சிகளுக்கும் நீ முட்டுக் கட்டைப் போட்டு விட்டாய். நீயும் அவனைப் பேச வைக்க மாட்டாய். பேச வைக்க முயலுவோரையும் செய்ய விட மாட்டாய். ஆக - இலங்கைத் தமிழர் களுக்கு முன்பைவிட தமிழர்களாகிய நாம், ஆற்ற வேண்டிய பெரும் கடமை இப்போது நமக்கு வந்து விட்டது. வரலாறு நம்மீது அதை சுமத்தியிருக்கிறது.

இப்போது கோவை இராமகிருட்டிணன் உள்ளிட்டோர் மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. முதலில் - அடிப்படையான கேள்வி, யாரிடமிருந்து யார், இந்த தேசத்தைப் பாதுகாப்பது? பா.ம.க.வைச் சார்ந்த காடுவெட்டி குரு மீது தேசப் பாதுகாப்புச் சட்டத்தைப் போட்டபோது, நான் முதலமைச்சரை சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது குரு என்ன குற்றம் செய்தார் என்று கேட்டபோது, உடனே வீட்டில் தயாராக வைத்திருந்த ஒரு திரையில் அவரது உரையை முதலமைச்சர் எனக்கு போட்டுக் காட்டினார். அவரும் ஏதேதோ, “செந்தமிழில்” தான் பேசியிருந்தார். எல்லாம் குடும்பத்தைப் பற்றிய கதைகளாக இருந்தன. எனக்கு எதுவுமே புரியவில்லை என்பதால் நிறுத்தச் சொன்னேன். முதலமைச்சர் அதற்கு மேல் என்னால் பார்க்க முடியாத மனநிலைக்கு வந்துவிட்டதாகக் கருதிக் கொண்டார். அப்போது நான் கேட்டேன் - குரு பேச்சில், ஏதேதோ, தனிப்பட்ட பிரச்சினைகள் பற்றி எல்லாம் பேசுகிறார். அவர் பேச்சிலே அம்மா வருகிறார். பிள்ளை வருகிறார். எங்கே தேசம் வருகிறது? பாதுகாப்பு வருகிறது? என்று கேட்டேன். அப்போது முதல் தான் முதல்வருக்கு என் மீது கோபமே வந்தது. என்னுடைய காருக்கு தீ வைக்கப் பட்டது. இதுவரை தீ வைத்த எந்தக் குற்றவாளியை யாவது பிடித்து கூண்டில் நிறுத்தினார்களா? தீ வைத்த குற்றவாளியைப் பிடித்து, தண்டிக்காதவர்கள், தீ வைப்பதைத் தடுக்கப் போன, கோவை இராமகிருட்டிணனையும், தோழர்களையும் பிடித்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வார்கள் என்றால், அந்தச் சட்டத்தைத்தான் தீ வைத்துப் பொசுக்க வேண்டும். அப்படி ஒரு சட்டமே தேவையில்லை.

அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரை தேசப் பாதுகாப்புக்கு தொடர்பே இல்லாமல் கைது செய்துள்ளார்கள் என்று நீதிமன்றம் விடுதலை செய்த பிறகும் இந்த அரசு திருந்தவில்லை. எனவே தேசப் பாதுகாப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற்று கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வற்புறுத்துகிறேன். இதை வலியுறுத்தி எங்கள் கட்சியில் தீர்மானமும் நாளை வரவிருக்கிறது. போர் முடிந்த பகுதியில் உடனே சர்வதேச பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் நேரில் சென்று பார்வையிட இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை ராஜபக்சே அரசு மூலம் செய்யக் கூடாது. அய்.நா. சர்வதேச அமைப்புகள் வழியாக மட்டுமே மறுவாழ்வுத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். தாயைக் கொன்றவனே பிள்ளைக்குப் பாலூட்ட அனுமதிப்பதா? கொல்லப்பட்ட மக்களின் பட்டியலை தயாரித்து, அதற்குக் காரணமானவர்களை யுத்தக் குற்றவாளிகள் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும். சிந்திய ரத்தத்துக்கு நியாயம் கேட்க வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் - ரசிகர் மன்றங்களின் ரசிகர்களாகி விடாமல் போர்க்குணம் கொண்ட வர்களாக போராட வேண்டும் என்று கூறி முடித்தார்.

- நமது செய்தியாளர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP