ஏழுமலையானும் பாம்பும்
திருப்பதி எழுமலையானை தரிசிக்க நின்ற பக்தர்கள் வரிசையை நோக்கி நல்ல பாம்பு ஒன்று வரவே பக்தர்கள் ஓட்டமெடுத்தார்களாம்! ஏழுமலையான் மீது பக்தர்களுக்கு நம்பிக்கை இல்லையா? நல்ல பாம்பு கடித்தால் - பகவானால்கூட காப்பாற்ற முடியாது என்று பக்தர்கள் நம்புகிறார்களா?
ஏழுமலையான் பாம்பு உருவெடுத்து வந்ததாக ஒரு காலத்தில் துண்டறிக்கை அச்சடித்து, விநியோகித்த பக்தர்கள் இப்போது பாம்பு உருவில் பகவான் வந்ததாகக் கருதாமல், ஏன் பயந்து ஓட வேண்டும்?
பக்தர்களே, பதில் சொல்வீர்களா?
ஒரு கேள்வி
உ.பி. முதல்வர் மாயாவதி - அரசுப் பணத்திலிருந்து 1000 கோடியை செலவிட்டு, தனது சிலைகளையும், தனது கட்சி சின்னமான யானையின் சிலைகளையும் கன்ஷிராமின் சிலைகளையும் நிறுவி வருகிறாராம். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல், இப்படி சிலைகளை நிறுவுவது நியாயம் தானா என்று காங்கிரஸ் தலைவர்களும், முலாயம் சிங்கும், பார்ப்பன ஊடகங்களும் கேள்வி எழுப்புகின்றன. கேள்வி நியாயம் தான், ஒப்புக் கொள்கிறோம். ஆனால், மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு செலவிடாமல், வீணாக சிலைகளுக்கு செலவிடக் கூடாது என்ற கேள்வியை எல்லா நியாயங்களுக்கும் நீட்டிக்காதது ஏன்?
ஏழுமலையான் உட்பட பிரபல நட்சத்திர அந்தஸ்துள்ள பகவான்களுக்கு பல கோடி செலவில் வைர செருப்பும், வைர கடுக்கனும், தங்கக் கூரையும், தங்க முலாம் பூசிய தேரும் - ஏன்? நாட்டின் பொது வளங்களான தங்கமும், வைரமும், வைடூரியமும், வெள்ளியும் இப்படி வீண் விரயமாக்கப்படுவது ஏன்? இவைகளை மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடக் கூடாதா என்று இவர்கள் ஏன் கேட்பதில்லை?
தலித் மாயாவதியை நோக்கி எழுப்பும் கேள்வியில் நியாயம் உண்டு. அதே நேரத்தில் கல் சிலைக்கு பார்ப்பனர்களால் பக்தர்களால் - நாட்டின் பொன்னும் பொருளும் முடக்கப்படுவதையும் கண்டிக்க வேண்டாமா?
கருட தரிசனக்காரனைப் போல்....
“நமது அரசியல் சீவனாடிகளையெல்லாம் டெல்லியில் ஒப்புவித்துவிட்டு, நமது மதச் சீவனாடியைப் பார்ப்பானிடம் ஒப்புவித்துவிட்டுக் கருட தரிசனத்திற்கு ஆகாசத்தைப் பார்த்து நிற்கும் பக்தனைப் போல் தொட்டதெற்கெல்லாம் டெல்லி நோக்கிப் பார்ப்பானை நோக்கித் தண்டமிடுவதுதானா நமது சுதந்திரத்திற்கு அறிகுறி?”
- பெரியார், 15.10.1947 ‘விடுதலை’
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|