சமன் செய்யச் சமர் செய்! இந்திரா
இணக்கமாய்
அணுசரணையாய்
உன் இன்பத்தேவையை
இதமாக வெளிப்படுத்துவது ஒன்றும்
இல்லறப் பாவமல்ல... பெண்ணே!
களங்கமற்ற காமத்தில்
சுயநலம் கலப்பவன்
உனக்குக் கணவனல்ல...
காமுகன்!
குத்திக் கிழி.. அவன்
நரிமுகத்தின் வெறித்திரையை.
தளர்வும் சோர்வுமாய்
தயங்கி நீ புரள்கையில்
தன்பசி பொறுக்காமல்
தாவிப் புணர்பவன்
கணவனல்ல - பச்சைக்
காமுகன்!
இசைவற்ற வேளைகளில்
வசைபாடி வலுவிலுனை
வன்புணர்வுறுபவன்
வாழ்க்கைத் துணைவனல்ல..
வாழ்வின் சுமை அவன்
பாலியலின்
ஆதிக்கப் பரம்பரையோ
ஆணினம்?
பெண்ணே-
பலிஆடு அல்ல நீ,
பணிப்பெண்ணும் அல்ல.
ஏமாந்தது போதும்- இனி
எடையை நீயே போடு!
காமத் தட்டுகள் கொண்ட
தாம்பத்தியத் தராசு
உன்கையில் இருக்கட்டும்!
|