பெண்மைக்கு ஒரு வாள்
சு. பொன்னியின் செல்வன்
உன்னையே நீ அறிவாய்’
சாக்ரட்டீசின்
சக்கரை வார்த்தையை
பெண்ணே...
உனக்காக முன் மொழிகிறேன்!
கூட்டுப் புழுவாய்
நீயே
கட்டிக் கொண்ட
கூட்டைக் கழற்று!
உனக்கு எதிரி; நீ தான்
வேண்டாம்; வெகுண்டெழு!
புறநானூறு போற்று;
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
உன்னைச் சுற்றிப் போட்ட
பழைய வேலிமுட்கள்
உன்
பயணப்
பாதையில்
பரவிக் கிடக்கின்றன;
எடுத்தெறிவதற்கு
எதிர்ப்பா?
இரண்டிலொன்று பார்;
உனக்கு -
வரலாற்றை
புரட்டவும், புதுக்கவும் தெரியுமே;
புரிந்து கொள்;
நகை, நாணம், புகழ்ச்சியின்
முக்கூட்டுச் சதி;
உன் விடுதலைக்கு
முதுமையைக் கொணர்கிறது!
முறத்தால்
புலி விரட்டியவளே
உன் திறத்தில்
நீ.. தீயாய் உருவெடு!
புவுக்குள்
பூகம்பம் இருப்பதை
உலகம் பார்க்கட்டும்!
நீ போகப் பொருளல்ல;
புத்துலக விடியல்;
பிள்ளைகள் பெற்றது போதும்;
இனி
புரட்சிகளாய் பெற்றெடு!
உயரட்டும் கைகள்;
நீ
ஓங்கித் தூக்கும் சம்மட்டியில்
உன்னைத் ‘தளை’த்த
விலங்குகள் நொறுங்கட்டும்!
‘பெண்ணைப் போல் அழுவதாய்’
வாழும்
திண்ணைத் தெருப்பேச்சு
இனி
பெண்ணைப் போல் எழுவதாய்
பேசட்டும்!
ஒப்பாரிகள் உனக்குச்
சொந்தமல்ல;
பொங்கி... நில்;
இனி உனக்கு
பூபாள ராகமே புதிய ஏற்பாடு!
பழைய பஞ்சாங்க இருட்டு
உன்
வெளிச்சம் பட்டுத்தான்
வெருள வேண்டும்!
அதற்காக
பகுத்தறிவுச் சுடரைக்
கையிலேந்து
மூடநம்பிக்கைக்கு மூச்சு நிற்கட்டும்!
உனக்கான விடுதலை
பெண்ணே
உன்னில் தான் இருக்கிறது;
உன்னால்
உனக்கு எழும் தடையை
உடைத்து எறி;
பழைய பெண்மைக்குப் புதிய
பாடை கட்டு;
அதோ -
புதிய பெண்மைக்குக் கட்டியம் கூறி
ஊதுகிறது துந்துபீ !
வலக்கையில்
இனி எதற்கு விளக்குமாறு
வேலு நாச்சியாராய்
வெளியே...வா; இந்தா... வாள்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|