புதியுகம் படைப்பாய்!
- மருத்துவர்.அ. காசிப்பிச்சை
எங்கோ பிறந்தாய்! பெற்றோர் அணைப்பில்
எல்லாமே கற்றாய் உற்றார் சூழலில்
எத்தனையோ வென்றாய்! சுற்றமும் செதுக்கி
புதுமைப் பெண்ணாய் உருவகம் பெற்றாய்!
தோழியர் கூட்டம் தட்டிச் செதுக்கி,
பூவையர் சேர்ந்து புதுமைகள் புகுத்தி,
கல்வி கற்றலில் கருத்தைச் செலுத்தி,
கற்பனைக் கனவில் தென்றலாய் மிதந்தாய்!
பெற்றோர், உற்றார், ஊரார், உரிமை,
கல்வி, கடமை, முழுவதும் துறந்தாய்!
தாலியைச் சுமந்து புக்ககம் சென்றாய்!
மனித உரிமை அனைத்தையும் இழந்தாய்!
பிள்ளைபெறல் மட்டுமா மனித வாழ்க்கை?
பிறந்ததே இதற்கா? குறிக்கோள் இலையா?
செக்கு மாடாநீ? உழன்றது போதாதா?
புரட்சிப் புயலென புறப்பட இயலாதா?
இயலும் உன்னால்! பொறுத்ததை உடைத்து,
தளைகள் அறுத்து, பொங்கி வெடித்தபின்,
புதுயகம் படைப்பாய்! அதனால்தானே வள்ளுவன் கூட
பெண்ணின் பெருந்தக்க யாவுள என்றான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|