தலையங்கம்
வணக்கம்!
புதிய பெண்ணியம் - இவ்விதழ் இந்த ஆண்டின் இரண்டாவது இதழாக சற்றுக் கூடுதலான இடைவெளியோடு வெளிவந்திருக்கிறது. அவசர கதியில் கொண்டு வந்ததாலோ என்னவோ வழக்கமான அளவினின்றும் பக்கங்கள் குறைந்தும் இருக்கிறது.
சிற்றிதழ்களின் வெளியீட்டில் இவை போன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாததே என்கிற அனுபவ அறிவு ஆறுதலைத் தந்தபோதிலும், ஒருவித ஆற்றாமை உணர்வும் மனதின் மூலையில் தேங்கியே நிற்கிறது.
பெண்ணியம் இதழ் முகவரி மாற்றம் பெற்று, சிறிய இடைவெளியுடன் வரும் என்று ஏப்ரல் மாதத்திலேயே பலருக்கும் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தோம். முகவரி மாற்றம் பெற்றது உண்மைதான் என்றாலும், பழைய இடத்திலிருந்தே இன்னும் சில மாதங்கள் இதழ் இயங்கக்கூடும். அனைத்துத் தொடர்புகளுக்கானதாக அந்த முகவரியே இருக்கும். தொலைபேசி எண் மட்டும் மாறி உள்ளது. (ஆசிரியரின் வேளச்சேரி தொலைபேசி எண் தனியே தரப்பட்டுள்ளது.)
வழக்கமான பக்கங்களோடு இதழைக் கொண்டு வராததற்குக் காரணம் எட்டு பக்கங்கள் என்னும் கூடுதல் வேலையினால் தாமதம் ஏற்பட்டு இதழின் இடைவெளி இனியும் அதிகரித்து விடக்கூடும் என்கிற நினைவுதான். இந்த இடைப்பட்ட காலத்தில் ""தனிப்பட்ட காரியங்களின்'' எண்ணிக்கை அதிகளவில் இருந்ததன் காரணமாகவே இவ்விதழைக் குறித்த நேரத்தில் கொண்டுவர இயலாமல் போனது என்பதையும் இங்கு சொல்லி வைப்பது முறையானதாக இருக்கும்.
தொலைபேசி வழியே இதழின் தரத்தையும், தேவையையும், இடைவிடாமல் இயங்க வேண்டியதன் அவசியத்தையும் விரிவாகச் சொல்லி நம்மை உற்சாகப் படுத்தியவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறோம். இதழுக்கு வந்திருந்த கட்டுரைகளில் சில இடப்பற்றாக்குறையினாலும், காலதாமதத்தின் காரணத்தாலும் இந்த இதழில் இடம்பெறவில்லை. வரும் இதழ்களில் இடம்பெறலாம். மதி-இடம் கேளுங்கள் பகுதியும் அடுத்த இதழில் வெளிவரும்.
இனி கடந்த நான்கு மாதங்களில் எத்தனையோ அரசியல் நிகழ்வுகள்; சமூகப் பிரச்சினைகள்; அதையொட்டிய நமது சிந்தனைகள். அவற்றையெல்லாம் மாதந்தோறும் பெண்ணியம் இதழில் பதிவு செய்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்கிற எண்ணம் இப்போது ஏக்கமாக உருக் கொள்கிறது. என்றாலும் அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த குறிப்பிட்டதொரு காலம் தேவைப்படும் என்பதும் புரியவே செய்கிறது. புதிய பெண்ணியத்தின் இணையாசிரியரும், பொறுப்பாசிரியரும், தங்களது "வெளிநாட்டு வாசத்தினை' முடித்துக்கொண்டு "சென்னைவாசிகளாகி' விட்டார்கள் என்ற நினைவுகூட நம்பிக்கையினைத் துளிர்க்க வைத்திருக்கிறது.
இந்த இதழ் வெளிவரக் காலதாமதம் ஆனபோதும், சென்ற இதழில் அறிவித்திருந்த கவிதைப் போட்டிக்கு வந்திருந்த கவிதைகளில், பரிசுக்குரிய கவிதைகளை உரிய காலத்தில் தேர்வு செய்து, பரிசுத்தொகையினையும் அறிவித்தபடி மே மாதத்தில் காசோலைகளாக அனுப்பி வைத்தோம்.
புதிய பெண்ணியத்திற்கு உங்களது நல்லாதரவினைத் தொடருவதுடன், தரமான படைப்புகளையும் அனுப்பி வையுங்கள். இதழில் வெளிவரும் கருத்துக்கள் மீதான எதிர்வினையையும் பதிவு செய்து அவற்றின் வளர்ச்சிக்கும் உதவ முயலுங்கள்.
கடிதங்கள், படைப்புகள், மாற்றிதழ்கள் அனைத்தையும் வழக்கமான முகவரிக்கே அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றி!
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|