போர்க்கொடியும் நானே... சி.விநாயகமூர்த்தி
கட்டிய மனையாளை கடவுள் அடியாருக்கு
காணிக்கையாகக் கொடுக்கும்
இயற்பகை நாயனாரின் இழிசெயல் ஏற்று
எவர்பின்னாலேயும் செல்ல
புராண காலப் பொம்மையல்ல நான்.
சந்தேகச் சகதியை
அகத்தில் அப்பியிருக்கும் கணவன்முன்
தூய்மையை நிரூபிக்க
அக்கினிப் பிரவேசம் புரியும்
அடிமைச் சீதையல்ல நான்.
மாலையிட்டதோ ஒருவனுக்கு,
மஞ்சத்தில் படுக்க ஐவருக்கனுமதி.
அதுவும் போதாமல்
ஆறாம் நபர் சூதாடிக் கைப்பற்றி
ஒற்றைத் துணியும் உருவுகையில்,
புடவைகள் திருடிய கள்வனிடம்
கையேந்தும் பிச்சைக்காரியல்ல நான்.
அறுபதாயிரம் பெண்களோடு
ஆபாசச் சேற்றில் கிடந்தாலும்,
தெய்வம் தொழாமல்
அவனைத் தொழுதெழும்
அருந்ததிக் கற்பை
ஏற்பதில்லை நான்.
செவ்வாய்தோஷமென இழிவு செய்யும்
கண்மூடி ஜோதிடத்தை
மண் மூடிப் புதைத்துவிட்டு
செவ்வாய்க்கோள் வரை
சென்று திரும்பிய புதுயுகப் பெண் நான்.
ஊடும் பாவுமாய்
விலகாமல் உறவாடினால்
இல்லறத்தில் பூங்கொடி நான்.
இல்லையெனில் போர்க்கொடி நான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|