மாறாத நிகழ்வுகளும் மறைகின்ற வாழ்க்கையும்
ருத்ரன்
எழுவார்
தேநீருடன் நான்.
செய்தித் தாள்களைப் புரட்டுவார்
"சுடுதண்ணி ரெடி'' என நான்.
துண்டெடுத்து ஓடுவேன்
"ஏய் சோப்பு'' என்பார்
உறை பிரித்து நீட்டுவேன்
தீய்ச்சல் வாடையில் அழைக்கும்
அடுப்பங்கரை.
அடுப்பை அணைக்கையில்
மீண்டும், "ஏய்''
முதுகு தேய்த்துத் திரும்புகையில்
குடிநீர் லாரியின் சத்தம்
"ஏய்...ஜட்டி, பனியன்''
குரல் கேட்டுத் தாவுவேன்.
துணிக்கொடியில் துழாவிக்
கண்டெடுக்கையில்
கண்களைக் கசக்கியபடி
விழிப்பில் சிணுங்கும் குழந்தை
ஆவி பறக்க இட்லி,
சாம்பார், சட்னி மேசையில்.
இரண்டு இட்லி தின்பதற்குள்
தோசை சுடுவேன்.
சர்ட்டும் பேண்ட்டும் அணிவதற்குள்
காலணியைத் துடைப்பேன்.
வெளியே வந்து உதைப்பார்
யமஹாவை!!
குக்கர் அல்லது குழந்தை அலறி
உள்ளே இழுக்கும் என்னை
இனி மழலைகள் காப்பக
ஆயாவை எதிர்பார்த்தவாறு
எனக்கும் குழந்தைக்குமான
முப்பது நிமிடங்கள்
பிறகு
‘;இடி'களைத் தாங்கி
‘கடி'களைப் பொறுத்து
நெரிசலில் நனைந்து
அலுவலகப் பயணம்
மாநகரப் பேருந்தில்.
நீ அடிக்கடி சொல்வதுபோல
என்மீது எனக்கும்
என்மீது அவருக்கும்
எப்போதும் அக்கறையில்லை.
என்ன செய்ய தோழி?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|