போர்க்கோலம் பூணு - சி.விநாயகமூர்த்தி
கூந்தலில் பூ முடித்தால்
அலங்காரம்
முடிந்த கூந்தலை விரித்தால்
ஆவேசம்
நீதி கேட்ட கண்ணகியும்
சபதம் போட்ட பாஞ்சாலியும்
போர்க்கோலம் பூண்டு
விரித்தார்கள் கூந்தலை
வென்றார்கள் முடிவில்
வானமகள் எப்போதும்
தன் கூந்தல் தெரியா வண்ணம்
வண்ண வண்ண மலர்கள்
நிறைய நிறையச் சூடி மகிழ்ந்தாலும்
ஆவேச வெறி ஆட்டுவிக்கையில்
அத்தனை மலர்களை அப்புறப் படுத்தி
கரிய நெடுங் கூந்தலை
விரித்துப் போடுகிறாள்
மின்னல் சாட்டை சுழற்றி
இடிஉடுக்கையும் முழக்குகிறாள்
வறட்சிப் பேயை விரட்டியடிக்க
கூந்தலில்
பூக்கோலம் புனையும் பெண்ணே!
தேவைப் பட்டால் நீயும்
போர்க்கோலம் பூணத் தயங்காதே!
|