கணினி யுகத்தில் கட்டவிழ்த்த காட்டுமிராண்டித்தனம் நிலா
டிசம்பர் - 1 வெள்ளிக்கிழமை. தமிழகத்தில் அன்று வெளிவந்த சில பல நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக வந்ததன் சாரம் இது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதன் காரணமாக மகாராஷ்டிரம் மாநிலம் முழுக்க தலித்துகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மும்பைக்கு அருகில் உள்ள உல்லாஸ் என்கிற நகரில் விஷமிகள் வைத்த தீயில் டெக்கான்-குயின் எக்ஸ்பிரஸ் ரயில் பற்றி எரிகிறது.
மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதோடு போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு மூன்றுபேர் பலி. ஆயிரத்து ஐநூறு தலித்துகள் கைது. ஆயிரக்கணக்கான தலித்துகள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் மாநிலம் முழுவதும் குவிக்கப் பட்டுள்ளனர்!
சமூக நிகழ்வுகளை உன்னிப்புடன் கவனித்து மிகவும் நுட்பத்துடன் அன்றாடச் செய்திகளை உள்வாங்கி வரும் பலருக்கு மேற்கூறிய செய்திகள் மிகுந்த குழப்பத்தைத் தந்திருக்கக் கூடும். சமூகப் புரட்சியாளர்களும், சீர்திருத்தச் செம்மல்களுமான அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாரின் சிலைகள் அவ்வப்போது இந்துத்துவக் கும்பலின் அத்துமீறிய சேட்டைகளினால் சிதிலப்படுவதும், உடைபடுவதும் அதற்கான எதிர்ப்புகள், மறியல்களாக, சிறு போராட்டங்களாக ஆங்காங்கே நடந்து, பின்னர் மெல்ல அடங்கிப்போவதும் என்பதுதான் இந்தியத் துணைக்கண்டத்தில் இயல்பான நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. அப்படியிருக்க உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நகரில் ஒரு வாரத்திற்கு முன்பாக நடைபெற்ற அம்பேத்கரின் சிலை அவமதிப்புக்கு இத்தகையதொரு போராட்டம் மும்பையிலா... மகாராட்டிரமே குலுங்குமளவிற்கு நடைபெறுகின்ற அப்போராட்டங்களின் பின்னணிக் காரணம் என்னவாக இருக்கும் என்று சமூக அக்கறையுள்ளோரும், மாந்த நேயர்களும் சிந்தனையில் மூழ்கினர்.
அந்தச் சமயத்தில்தான் நெஞ்சைப் பிளக்கும் செய்தியாக - தலையில் விழுந்த பேரிடியாக - இந்துத்துவாவின் உச்சகட்ட கொடூரமாக மகாராஷ்டிர மாநிலத்தின், பண்டாரா மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமமான கயர்லாஞ்சி என்னும் ஊரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன்கள் இருவர் என நான்குபேர் கொடூரத்திலும் மிகுந்த குரூரத்தோடு சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர் என்கிற செய்தி வெளியானது. இதயத்தை உறையவைத்த இந்நிகழ்ச்சி நடந்து முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னரே வெளி உலகுக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆதிக்கச் சக்திகள் திட்டமிட்டு இவ்விஷயத்தை மூடிமறைத்து நய வஞ்சகக் கொடூரத்தை உலகின் பார்வையிலிருந்து சுத்தமாக மறைத்திருக்கிறது. அதற்கு முட்டுக் கொடுக்கும் விதமாக தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் மவுனம் காத்து பாராமுகமாய் இருந்திருக்கின்றன. தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் லட்சக் கணக்கில் மக்களைத்திரட்டி மாபெரும் போராட்டங்களை நடத்தும் அதிகாரப் பித்துக் கொண்ட அரசியல் கட்சிகளும் இத்தகைய காட்டு மிராண்டித்தனமான செயல்களைக் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன.
இதுபோன்றதொரு உச்சகட்ட கொடூரத் தாக்குதலுக்கும் கொடுந்தண்டனைக்கும் உள்ளாக நேர்ந்த அந்தக் குடும்பம் செய்த குற்றம் என்ன?
கணவன், மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் என்று ஐவரைக் கொண்ட குடும்பம் அது. பய்யாலால் குடும்பத்தலைவர். மனைவி சுரேகா 40 வயதினர். மூத்த மகன் சுதிர் 21 வயதே நிரம்பப்பெற்ற இளைஞர் - பார்வைக் குறைபாடு உள்ளவர். 19 வயது மகன் ரோஷன் கல்லூரியில் பயில, 17 வயது மகள் பிரியங்கா உயர்நிலைப் பள்ளிப்படிப்பை மிகக் கூடுதலான மதிப்பெண்கள் பெற்று முடித்திருந்தார். பய்யாலால் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் கடுமையாக உழைத்து, பிள்ளைகளுக்கும் கல்விதந்து குடும்பத்தினரை சுயமரியாதையோடு வாழப் பழக்கப்படுத்தியிருந்தார்.
அங்குள்ள சாதிவெறிக் கூட்டத்திற்கு இது பிடிக்கவில்லை. 125 குடும்பங்கள் கொண்ட அந்த ஊரில் மூன்றே மூன்று தலித் குடும்பங்கள்தான். அதில் ஒன்று பய்யாலால் குடும்பம். வெளியூரிலிருந்து பிழைக்கவந்த குடும்பம் தங்கள் கண்முன்னே செழிப்பாக இருப்பதுகண்டு பொறுக்காத அக்கூட்டம் அக்குடும்பத்திடமிருந்து ஏதேதோ காரணத்தைச் சொல்லி இரண்டு ஏக்கர் நிலத்தைப் பறித்துக்கொண்டது. சுரேகாவின் உறவினரான சித்தார்த் என்பவர் தங்களுக்கு எதிராகவும் அக்குடும்பத்திற்கு ஆதரவாகவும் இருப்பதாக நினைத்து சாதிவெறியர்கள் செப்டம்பர் 3-ம் நாள் அவரைக் கடுமையாகத் தாக்கினர். இதை நேரில் பார்த்தவர்கள் சுரேகாவும், பிரியங்காவும்.
சித்தார்த் காவல்நிலையத்தில் புகார் செய்ய சாதி வெறியர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் 29ஆம் தேதியன்று பிணையில் வெளிவந்தனர். கொலைவெறியோடு வெளியில் வந்த அவர்கள் கண்ணில் சித்தார்த் தென்படாமல் போகவே மாலை ஐந்து மணியளவில் பய்யாலால் குடிசைக்குள் புகுந்து அங்கிருந்த நால்வரையும் வெளியே இழுத்துவந்து துணியால் அவர்கள் வாயை இறுகக் கட்டினர். நால்வரையும் நிர்வாணப்படுத்தியதோடு தாய் மகள் இருவரையும் அங்கிருந்த ஒரு வண்டியில் மாடுகளைப்போல பிணைத்து இரும்புச் சங்கிலியில் உடலெங்கும் அடித்துத் துவைத்தனர். அதற்குமேலும் அங்கு நடந்த செய்திகளைச் சொல்லுவதற்கு ஒரு நாகரிகச் சமூகத்தில் அதற்கான வார்த்தைகள் கிடையாது. உயிரையே உறைய வைக்கும் சம்பவங்கள் அந்த 2 மணி நேரத்தில் அங்கு நடந்து முடிந்தன.
காட்டுமிராண்டிகளின் காலத்தில்கூட இத்தகையதொரு கர்ண கொடூரம் நடத்திருக்குமா என்பது கேள்விக்குரியதே. வேலை முடித்து வந்த பய்யாலால் உயிருக்குப் பயந்து புதரில் ஒளிந்து தனது குடும்பமே அணுஅணுவாக கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாத கையறு நிலையிலிருந்திருக்கிறார். அடித்துத் துவைத்து சிதைத்து சின்னாபின்ன மாக்கப்பட்ட அந்நால்வரின் சடலங்களை இரவு ஏழு மணியளவில் அருகிலிருந்த கால்வாயில் வீசி ஓய்ந்தது அக்கொடூரக் கூட்டம்.
வேடிக்கை பார்த்த ஊர்மக்களில் ஒரே ஒரு பெண் அக்குடும்பத்திற்கு ஆதரவாகப் பேசியதில் அப்பெண்ணும் சரமாரியாக அடி உதை வாங்கியதே மிச்சம்.
வலிமை வாய்ந்த அரசு நிர்வாகத்துறைகள் ஆதிக்க சக்திகளுக்கு உறுதுணையாக இருக்கும் போது... பாவம் ஒரு தனிப்பட்ட பெண் என்ன செய்துவிட முடியும்? இக்குரூர நிகழ்வின் கோரத்தாண்டவம் பற்றி அக்டோபர் மாதத்தில்தான் தலித் மக்களுக்கே தெரிய ஆரம்பித்திருக்கிறது. தலித் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், முற்போக்குச் சக்திகளும் இப்பிரச்சனையைக் கையில் எடுத்தபின்னரே இப்படுகொலைச் சம்பவம் வெட்டவெளிச்சமாக மத்தியப் புலனாய்வுத்துறை மெல்லக் களமிறங்கியது.
இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்டோர் மீதும், பெண்கள்மீதும் இத்தகு கொடுந்தாக்குதல்கள் நாள்தோறும் ஒவ்வொரு மணிதோறும், நிமிடம்தோறும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு முற்போக்கு சக்திகளின் ஒருங்கிணைந்த செயல்பாடே முதன்மையான தேவையாகவும் இருக்கிறது. தேவையினை ஆழ்ந்துணர்ந்து செயல்பாடுகளைத் தீவிரத்துடன் வேகப்படுத்துவதே இதுபோன்ற காட்டுமிராண்டித் தனங்களை வேரறுத்து வீழ்த்துவதற்குத் துணை செய்யும்! அதுவே சாதியப் படிநிலைகளில் இறுகிக் கிடக்கும் ஆதிக்கச் சமூகத்திற்கு மரண அடி கொடுப்பதாகவும் இருக்கும்!
|