Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
இன்டர்வியூ
சூர்யா


விலை கொடுத்து உடல் பசியை தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட 25 வயது இளைஞர்களில் நானும் ஒருவன். அந்த 4 இட்லியை எடுத்து வர இவ்வளவு நேரம் ஆகிறதென்றால், நான் 12 ரூபாய் கொடுத்ததற்கு என்ன அர்த்தம் இருக்கிறது. இந்த சர்வர்களுக்கு உடல் பசியை பற்றி தெரிவதே இல்லை, 12 ரூபாயின் அருமை இன்னும் வேலை கிடைக்காத எனக்கு தெரியுமா? இல்லை இவ்வளவு நேரத்தை அநாயசாமாக கடத்தும் அந்த சர்வருக்குத் தெரியுமா? நானே இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் இட்லியை பார்க்கிறேன், அதையும் காக்க வைத்து கடுப்படிக்கும் அந்த சர்வர் இருக்கிறானே. போகட்டும் அவன் நன்றாக இருக்கட்டும். எவனோ கூட்டத்திலிருந்து ‘பிரகாஷ்” என்று கொடூரமாக கத்தினான். அவன், அவனுடைய நண்பனை கூப்பிட்டான், ஆனால் நான் ஏன் அநிச்சையாக திரும்பிப் பார்த்தேன் தெரியுமா? என் பெயரும் அதுதான்.

பொதுவாக பல இளைஞர்கள், இன்டர்வியூக்கு லேட்டாக செல்வது அலுவலகத்திற்கு நேரம் கடந்து செல்வது, எலெகட்ரிக் ட்ரெயினை தவறவிடுவது போன்ற விஷயங்களுக்கு காரணமாக இருப்பவர்கள் இது போன்ற ஹோட்டல்கள்தான் காரணம். ஆனால் நான் சற்று புத்திசாலி 10 மணி இன்டர்வியூவிற்கு 8 மணிக்கே வந்துவிட்டேன். ஆனால் அந்த சர்வர் சரியான சோம்பேறி, இட்லி வேக 1 மணி நேரம் ஆகிறதென்றால் அதை நான் நம்பத் தயாராக இல்லை, மணி 9 ஐ தொட்டுவி;ட்டது. இங்கிருந்து அம்பத்தூர் போக வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் ஆகுமே. அதுவும் அரசு பேருந்தில், சென்னை டிராபிக்கில், யோசிக்காமல் எழுந்து நடையை கட்ட வேண்டியது தான் என்று கிளம்பியதுதான் தாமதம், அந்த 4 இட்லியை புயல் வேகத்தில் எடுத்து வந்து வைத்தான். அந்த இட்லியை வெயிலில் வைத்திருந்தால் கூட இந்நேரம் வெந்திருக்கும். பொய் சொல்லிவிட்டான்.

interview வழக்கம் போல அரைமணி நேரம் லேட், இன்டர்வியூ ஹாலுக்குள் எனது வலது காலை எடுத்து வைத்த பொழுது மணி 10:30. அங்கே 3 பேர் கழுத்தில் டையை கட்டிக் கொண்டு வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது தான் அந்த நியாபகமே என் நினைவுக்கு வந்தது. நான் டை கட்டமறந்து விட்டேன். ‘கடவுளே அவர்கள் டையை பற்றி எதுவும் கேட்டுவிடக்கூடாது. எத்தனை முறை கைவிட்டிருக்கிறாய், இந்த முறையாவது என்னை காப்பாற்று”

இந்தியன் கவர்ன்மென்டுக்கும், இந்த கடவுளுக்கும் எந்த வித்தியசமும் இல்லை, உயிர் போக கத்தினாலும், பிரார்த்தனை செய்தாலும் அவர்கள் காதுகளுக்கு கேட்பதேயில்லை, நான் நினைத்தது போலவே அந்த நரைச்ச தலையன் கேட்டுவிட்டான்.

‘மிஸ்டர்...”

‘பிரகாஷ் சார்”

‘ம். மிஸ்டர். பிரகாஷ் இன்டர்வியூ வரும்பொழுது டை கட்டிட்டு வரணும்னு உங்களுக்கு தெரியாதா?”
அந்த கடவுளை என்ன செய்வது, என் கோபத்திற்கு இலக்காவதே இந்த கடவுளுக்கு வேலையாகிவிட்டது, அன்று ஒரு நாள் அந்த கோவிலில் அலங்கரிக்கப்பட்ட கடவுள் சிலையை பார்த்தேன். அந்த கேக்காத காதுக்கு இத்தனை ஜிமிக்கி, அதுவும் தங்கத்தில், ரொம்ப அவசியம், எனக்கொன்றும் அந்த கடவுள் மேல் பயமில்லை, இருந்தாலும் கடவுளே என்னை மன்னித்து விடு, நான் ஒரு ஆத்திகன், சத்தியமாக, இதில் மாற்று கருத்தில்லை.

டை விஷயத்தை கூட சமாளித்து விட்டேன், எத்தனை இன்டர்வியூ போயிருக்கிறேன். எனக்கா தெரியாது, ஆனால் அடுத்த உட்கார்ந்திருந்த ஆள் என்னை முறைத்து பார்த்தபடி இப்படி ஒரு கேள்வியை கேட்டுவிட்டான்,

‘பன்ச்வால்டியை பற்றி நீங்க என்ன நினைக்கிறிங்க”

சென்னையின் காலை நேர பேருந்து பயணம் பற்றியும், காலை உணவு உண்பதில் உள்ள சாகசம் பற்றியும் அரியாத அனுபவமில்லாத அந்த பெரியவரை நான் மன்னித்துதான் ஆக வெண்டும், ஆனால் நான் ஒரு முட்டாள், அந்த கேள்வியில் உள்ள கனிவான தன்மை பார்த்து நான் ஏமாந்து விட்டேன். நான் பதில் சொல்ல எத்தனித்தேன்.

என் மனம் ஏன் அநத் 2 வது மனிதனை மன்னித்தது என்பது பிறகுதான் எனக்கே தெரியவந்தது, அதற்கு காரணம் அந்த 3 வது மனிதர் தான், நான் 4 இட்லி சாப்பிட்ட கதையை கேட்டு அவரது பி.பிதான் சற்று அசாதாரணமாக கொதித்தெழுந்துவிட்டது. அவர் இவ்வாறு என்னை பார்த்து கூறிவிட்டார்.

‘எங்களுக்கு ஒரு சர்வர் தேவையில்லை, தேவைப்பட்டால் சொல்லியனுப்புகிறோம், உங்கள் செல் நம்பரை கொடுத்து செல்லுங்கள்”

இருந்தாலும் இவ்வளவு நக்கல் ஆகாது, என்னை பார்த்தால் சர்வர் போலவா தெரிகிறது. அந்த சர்வர் அவ்வாறு என்னை காக்க வைத்துவிட்டால் நான் என்ன செய்வேன், அதுவும் சம்மந்தம் இல்லாமல் என்னை அந்த சர்வரோடு ஒப்பிட்டு பேசுவது என்ன நியாயம். எனது கோபமெல்லாம் அவரது பளபள மண்டையின் மேல்தான் திரும்பியது. எனக்கு இந்த விஷயத்தை அறிந்து கொள்வதில் வெகு காலமாக ஆர்வம் பெருகி வருகிறது. அந்த கடினமான வழவழப்பான, பளபளப்பான மண்டைக்கு பின்னே அப்படி என்ன இருக்கும் என்று உடைத்து பார்ப்பதில் உள்ள எனது ஆர்வத்தை பற்றி அந்த 3வது மனிதருக்கு ஏதாவது ஒரு வகையில் தெரியவந்திருந்தால் அவர் இவ்வாறெல்லாம் பேசியிருக்க மாட்டார். கடைசியில் நான் எனது 12 இலக்க செல் நம்பரை கொடுத்துவிட்டு வந்தேன், அந்த வகையிலாவது அந்த 3 பேரையும் வெறுப்பேற்றி விட்டேன் என்கிற திருப்தியில், மகிழ்ச்சியாக வெளியேறினேன்.

எனக்கு பெரும்பாலும் நம்பிக்கை போய்விட்டது. எதற்காக முயற்சி செய்கிறேன் என்று தெரியவில்லை, இவ்வாறெல்லாம் செயல்பட்டால், இவையெல்லாம் நடக்கும் என்பது நிதர்சனமான உண்மையாக இருந்தால், அந்த இவ்வாறெல்லாம் ஐ செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் போராடலாம். ஆனர் பலன் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதிலேயே இவ்வளவு சந்தேகம் பின் எப்படி உற்சாகமாக உழைக்க முடியும்?.

எத்தனை இரவுகள் தூக்கத்தை தொலைத்திருக்கிறேன் ஒரு இன்டர்வியூற்காக. எதிர் டீ கடையில் வேறு பல நூறு ரூபாய்கள் கடன், என்ன செய்வது. அந்த டீயை குடித்தால் தான் தூக்கம் கலைகிறது. அப்படி ஒரு கொடூரமான சுவை. சிவன் ஆலகால விஷத்தை குடிப்பதை போல, ஒரே பல்க்காக உள்ளே இறக்கிவிட்டால் போதும். அடுத்த நான்கு மணிநேரத்திற்க உத்தரவாதம் உண்டு தூக்கம் வராமல் இருக்க. இதெல்லாம் அந்த 3 பேருக்க எங்கே தெரிய போகிறது. நான் ஒன்று படித்துவிட்டு சென்றால்அவர்கள் வேறு எதையோ கேட்கிறார்கள்.

என்னுடைய புலம்பல் எந்த அளவிற்கு இருந்ததென்றால் அம்பத்தூரிலிருந்து என் இருப்பிடத்திற்கு நடந்தே வந்துவிடும் அளவிற்கு, அந்த உணவகம், இன்னும் அங்கே கூட்டம் குறையவில்லை. உணவு, போதை, பாலுணர்வு இவை மூன்றிற்கும் என்றுமே கூட்டம் குறைவதில்லை. அந்த சர்வர் ஒரு குட்டி புயலை போல வேலை செய்து கொண்டிருந்தான், அவன் என்னைப் போலவே தெரிந்தான், அவனை பார்க்கும் பொழுது, ஆம் நான் ஒரு சர்வராக ஒரு புயல் போல வேலை செய்து கொண்டிருந்தேன். மணி மதியம் 2.15 மதியம் தூங்குவதும், கனவு காண்பதும் ஒன்றும் புதிதல்ல, இருப்பினும் நடந்து கொண்டே தேவையற்ற கனவல்லவா?

ஒரு வழியாக என் அறைக்கு வந்து சேர்ந்து கதவை திறந்த பொழுது கதவு கதறியது கிறீறீச்ச்ச்........ என்று, அதற்கு எண்ணெய் விடுவது பற்றி கடந்த ஒரு வருடமாக யோசித்து வந்தாலும், அதை ஏன் செய்யவில்லை என்று இதுவரை விலங்கவில்லை. அந்த அறையை வாடகைக்கு எடுத்த இந்த ஒரு வருடத்தில், ஒரு 5 நிமிட வேலை, ஒரு 1 ரூபாய் எண்ணெய் பாக்கெட், உண்மையில் நான் தகுதியில்லாதவனோ? என்னதான் வெகு நேர்மையாகவும், தன்மையாகவும் யோசனைகள் வந்து குவிந்தாலும், அந்த சாபம் என்னை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. களைப்பில் நான் தூங்கிவிட்டேன். நானும் என் விளக்கெண்ணெய் சிந்தனையும், அந்த கிறீச் சத்தத்துடன் இன்னும் பல வருடங்களுக்கு பந்தப்பட்டு கிடக்கும். எனது மங்கிப் போன செயல் திறன் அடுத்த இன்டர்வியூவிலாவது கண்டுகொள்ளப்படாமல் போக வேண்டும்.

தூங்கும் பொழுது குறட்டை விடும் எனது நண்பனை நான் பல முறை கிண்டல் செய்திருக்கிறேன். தொண்டைக்குள் ஏதோ அறுவை சிகிச்சை செய்தது போல சுவாசக் காற்றானது சிக்கிக் கொண்டு திணறித் திணறி, வெளிவந்து கொண்டிருக்கும். அவன் குறட்டைவிடும் சப்தத்தின் கொடூரத் தன்மையை தினசரி அனுபவிக்கும் நான் அந்த உணர்வை அவனுக்கு எப்படி எடுத்துச் சொல்வது என சிந்தித்ததின் விளைவாய். எனது அலைப்பேசியில் பதிவு செய்த அவனது குறட்டை ஒலியை அவனுக்கு போட்டு காண்பித்தேன். பின் அவனிடம் இவ்வாறு கூறினேன்.

‘நீ குறட்டை விடும் பொழுது உனது காதுகள் அதை உணரும் பட்சத்தில் அவையிரண்டும் தற்கொலை செய்து கொள்ளும்” என்று இப்பொழுது நான் தூங்கிக் கொண்டிருக்கம் பொழுது அவன் மட்டும் என் அருகில் இருந்திருப்பானேயானால், என் கழுத்தை நெறித்துக் கொன்றிருப்பான், காரணம், அந்த அரைத் தூக்கத்தில் நான் குறட்டைவிடுவதை என்னால் கேட்க முடிந்தது. கடவுளுக்கு மட்டும் என் மேல் கருணை இல்லாவிட்டால் என் குறட்டை ஒலி எழுப்பும் வாயையும், என் நண்பனின் காதுகளையும் அருகருகே வைத்தல்லவா? வேடிக்கை பார்த்திருப்பார். அவரை பற்றி நான் எவ்வளவு தவறாக பேசிவிட்டேன். கடவுளே என்னை மன்னித்துவிடு, நம் இருவருக்கும் இடையே நடந்த சமரச உடன்படிக்கைக்கு அடையாளமாக, நான் உனக்கு ஒரு தேங்காய் வாங்கி உன் சன்னிதானத்தின் முன் வந்து உடைக்கிறேன், இந்த விஷயத்தில் ஒரு சிறு நிபந்தனை மட்டுமே என்னிடம் உள்ளது. அந்த தேங்காய் என் முதல் மாதச் சம்பளத்தில் வாங்கியதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அந்த நிபந்தனை.

கனவில் கூட நான் அவருக்கு தேங்காய் உடைக்க மாட்டேன் என்பது தெரிந்து அவர் கடுப்பாகிப் போனார் போல, எனது காதுச்சவ்வுகளில் அதிர்வு ஏற்படும் படியாக, அந்த கதவு மடார்......மடார்..... எனத் தட்டப்பட்டது. வேறு யார் என் நண்பனாகத்தான் இருக்க வேண்டும், என்னை தூக்கத்தில் எழுப்பி பலர் வாங்கிக் கட்டிக் கொண்டதுண்டு. அந்த கடவுள் என்னை கடுப்பேற்றுவதாக நினைத்துக் கொண்டு இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துவிட்டார் போல , ஆனால் பாவம் அவர் மறந்திருப்பார். கடந்த 5 மாதங்களாக அவன்தான் இந்த அறைக்கு வாடகை கொடுத்து கொண்டிருக்கிறான், நான் எப்படி அவனை கடிந்து கொள்ள முடியும்.

இன்னும் 2 தட்டு தட்டியிருந்தால் அவன் நோக்கம் நிறைவேறியிருக்கும். ஒரு கதவை ஒற்றை கையால் தட்டி உடைப்பது கூட நாளை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறலாம். அவ்வாறு ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அது இரண்டாவது நிகழ்வுதான். என் நண்பன் ஒருவன்; இருக்கிறான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம், பாய்ந்து சென்று கதவை திறந்த நான், இவ்வாறு கனிவுடன் அவனிடம் கூறினேன்.

‘ஹேய், கை வலிக்கப் போகிறது, பார்த்து”

ஆனால் அவன் கை உடைந்தால் தான் என்ன? இது போன்ற சில பயிற்சிகளை நான் மேற்கொள்வது யாருக்கும் தெரியாது. தூக்கத்திலிருந்து எழுப்பபவர்களை கடுமையாக திட்டிவிடும் பழக்கத்தை கைவிடும் பயிற்சி முறைதான் அது. அன்று ஒரு நாள் அந்த சுயமுன்னேற்ற புத்தகத்தில் இந்த விஷயத்தை படித்திருந்தேன். வாழ்க்கையை எவ்வாறு பாஸிடிவ் தன்மையுடன் அணுகுவது என்பது பற்றி. நான் எதையும் நடைமுறை படுத்திவிடும் துணிச்சல் உள்ளவன். எனது கோபத்தை அடக்கும் மகா காரியத்தை செயல்படுத்தி வெற்றி கண்டுவிட்டு பெருமையுடன் நிற்கிறேன்........... வேறு எப்படி சொல்லிக் கொள்வது..........எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கிறது.

கடவுளே என்னை நடிகனாக்கிவிட்டேயே. இந்த நாடக வாழ்க்கையிலிருந்து சீக்கிரம் விலகிக் கொள்ள வேண்டும். அடுத்த இன்டர்வியூவில் வேலை கிடைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், ஒருமுறை கோபப்பட்டாலும் அது நிஜமாக இருக்க வேண்டும். ஒரு முறை அன்பு தோன்றினாலும் அதுவும் அப்படியே. கடவுளே நிஜமாக வாழ கூட பணம் தேவையாய் இருக்கிறது. இல்லையெனில் போலித்தனம் புகுந்துவிடுகிறது.

சில முறைகள் மட்டுமே இது நடப்பதுண்டு, வெகு சில சமயங்கள் மட்டுமே அது ஏன் என்று தெரியவில்லை. எனது உருக்கமான, உண்மையான பிரார்த்தனைகள் அந்த கடவுளின் காதுகளுக்க கேட்டுவிடும் போல அவர் உடனடியாக உதவிக்கரம் நீட்டிவிடுவார், நானும் மறந்தாற்போல் கடவுளே நன்றி என்று சொல்லி விடுவேன், அவரும் அதோடு மறந்து விடுவார் என்னை,

கதவை தட்டி வலியெடுத்துப்போன என் நண்பனின் கைகளில் அந்த காப்பிகலர் ஆபிஸ் கவர். அதில் எனக்கான இன்டர்வியூகார்டு தேதியிடப்பட்டு இருந்தது, அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஏற்பாட செய்யப்பட்டிருந்தது இந்த அழைப்பு.

‘நண்பா நீ தான் எவ்வளவு நல்லவன்”

பிறர் என்னை ஆக்கிரமிக்கும் பல சூழ்நிலைகளை நான் சந்தித்திருக்கிறேன், சகித்துக் கொண்டு கடந்து போயிருக்கிறேன், இது போன்ற சூழ்நிலைகளில் இனி மாட்டிக் கொள்ளக் கூடாது என் சபதம் எல்லாம் கூட எடுத்திருக்கிறேன், ஆனால் எவ்வளவதான் விழிப்புடன் இருந்தாலும் அவ்வப்பொழுது மாட்டிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. ஒரு இன்டர்வியூ கார்டை கொடுத்துவிட்டு அரை மணி நேரமாக அட்வைஸ் செய்கிறான் என் நண்பன். நான் என்னதான் செய்ய முடியும். முழுதாக 30 நிமிடங்கள்.

எனக்கு பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே இந்த பயிற்சி உண்டு. கண்களை திறந்த வைத்தபடியே தூங்கும் பயிற்சி, பின் அவ்வளவு கொடூரமாக பாடம் நடத்தினால் என்ன செய்வது. கண்களை அகல விரித்து வைத்துக் கொண்டு. சற்று கூட இமைக்காமல் வெறித்து பார்த்தபடி அப்படியே நிமிர்ந்தபடியே உட்கார்ந்திருப்போம். வெகு நாட்களுக்கு பிறகு அந்த வித்தியாசமான அமர்வை பார்த்து சந்தேகம் கொண்ட ஆசிரியர் கண்டுபிடித்துவிட்டார். விழித்துக் கொண்டே தூங்குவது அப்படி ஒன்றும் சாதாரண விஷயம் இலலை. யாரும் கேவலமாக நினைக்க வேண்டாம். ஆனால் எனது பரிதாபத்திற்குரிய நண்பன்... நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது, அவன் யாரிடம் பேசிக் கொண்டிருந்தானோ?
‘நண்பா என்னை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தோற்று போனாய், கடவுளே நீயும் தான்”

ஒரு முழு இரவு முழவதுமாக விழித்திருந்து, இன்டர்வியூவிற்கு தயாராக வேண்டும் என்று நினைத்தேன். இது போன்ற நினைப்புகள் இப்பொழுதெல்லாம் சலிப்பை கொடுக்கின்றன. ஒரு முறையாவது நினைத்ததை நிறைவேற்றினால்தானே உற்சாகம் பிறக்கும், வெறுமனே உறுதிமொழி ஏற்பதோடு சரி, பின் எப்படி. இருப்பினும் ஏதாவது செய்தாக வேண்டுமே?

எனக்கே ஆச்சரியப்படும்படி நானும் சில சமயங்களில் செயல்பட்டு விடுவதுண்டு, உறுதிமொழி எடுத்தபடி குறித்த நேரத்தில் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன், ஒரு வெறியோடு ஆரம்பித்தேன், அரை மணி நேரம் தான் கடந்திருப்பேன். அந்த நடிகை ஏன் என் நியாபகத்திற்கு வந்தாள் என்று புரியவில்லை. அதுவும் அந்த கவர்ச்சி போசில். தூரத்தில் அந்த பாடல் கேட்டதாலோ என்னவோ?

ஒரு முழு இரவு புத்தகங்களும், நடிகையும், தூரத்தில் கேட்ட அந்த பாடலும், ஒன்றையொன்று முந்திக்கொண்டு என் நினைவை ஆக்கிரமித்து கொண்டிருந்தது. அடுத்தநாள், உன்பெயர் என்ன என்று இன்டர்வியூவில் கேட்கப்படும் பொழுது நமீதா என்று வாய்குளறி கூறிவிடாமல் இருந்தால் அந்த கடவுளுக்கு மீண்டும் ஒரு நன்றியை நான் சொல்வேன்.

நான் இதை யோசிக்கவே இல்லை. அதிகாலையில் தூக்கம் சுழற்றியடித்துக் கொண்டிருந்தது. ஒரே வழி அந்த டீதான், டீ கடை மாஸ்டர்தான் என்னை காப்பாற்ற வேண்டும். ஒரு ‘கப் டீ” வாங்கி மூக்கை பிடித்துக் கொண்டு குடித்து விட வேண்டியதுதான். அந்த டீயின் கசப்புணர்ச்சி என் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீரை வரவழைத்துவிட்டது. கடவுளே கண்ணீரெல்லாம் விடுகிறேன் உன் மணம் இளகாதா? அவருடைய டமார காதுகளுக்கு நான் பேசுவது கேட்க வேண்டுமானால் என் தொண்டை கிழிய நான் கத்த வேண்டும் போல. நான் வானத்தை முறைத்து பார்த்து கொண்டு கடவுளுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, என் நண்பன் இவ்வாறு கூறுகிறான்.

‘இன்னைக்கு மழையெல்லாம் வராது கவலைபடாத, இன்டர்வியூதான் முக்கியம்”
லூசுப்பயல் அவனுக்கென்ன தெரியும் எனக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவு முறை பற்றி.

என் நண்பன் வேலைக்கு செல்லும் பொழுது என்னை திரும்பி திரும்பி முறைத்துக் பார்த்துக் கொண்டே சென்றான். அவன் ஷூ இல்லாமல் செருப்புக் காலோடு செல்வதை பார்க்கும் பொழுது எனக்கு சிரிப்பாக வந்தது. அது என்னுடைய செருப்பு. தரைக்கும். பாதத்திற்கும் பெரிதாக தூரம் இருக்காது அரை சென்டிமீட்டர் தான் இருக்கும். கடவுளே அதை அவன் கோபத்தில் பிய்த்துவிடாமல் இருக்க வேண்டும் அல்லது அது பிய்ந்து விடாமல் இருக்க வேண்டும். இரண்டும் உன் கையில் தான் உள்ளது.

அவனுடைய ஷூ எனக்கு பத்தவில்லை கொடூர முயற்சிக்கு பின் ஒரு வழியாக காலை நுழைத்துவிட்டேன், டையை கட்டிக் கொண்டு தடபுடலாக கிளம்பினேன். அந்த ஹோட்டல் பக்கம் மட்டும் செல்லக் கூடாது என்ற முடிவுடன் கிளம்பினேன். நாலு இட்லிக்கு ஆசைப்பட்டு இந்த இன்டர்வியூவையும் இழப்பதா என்ன? வேலை கிடைக்கட்டும் அந்த சைத்தான் சர்வரை ஒரு வழி பண்ணிவிட வேண்டியது தான,;

இன்டர்வியூ ஹாலில்

3 பேர் அல்ல. ஒரே ஆள்தான் உட்கார்ந்திருந்தான். வெகு நேரமாக என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வேளை வீட்டில் மனைவியிடம் திட்டு வாங்கிவிட்டு வந்திருப்பாரோ? என்று நினைத்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டார், என் கண்களில் தூக்க கலக்கம் தெரியாமல் இருக்க நான் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தேன். திரும்பவும் என் கண்களை உற்று பார்த்தார்.

கிழிந்தது, என் கண்களில் அப்படி என்ன தேடுகிறார் என விளங்கவில்லை. எனினும், நான் ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஆசுவாசமானேன். வழக்கம் போல ஏதேனும் நடக்கப்போகிறது என்ற நினைப்பு எனக்கு அமைதியை கொடுத்து விட்டது. பின் தொலை பேசியில் யாருடனோ பேசினார், படபடப்புடன் காணப்பட்டார். பின் ஏதோ மகிழ்ச்சியான விஷயம் அவருக்கு சொல்லப்பட்டது போல, வாய் நிறைய புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

பின் வேகமாக கழற்றி தொங்கவிடப்பட்டிருந்த தன் கோர்ட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினார், என்னை ஒரு மனிதனாகவே மதிக்கவில்லை அந்தமனிதர். ஒருபொருளை போல் துச்சமாக நினைத்துவிட்டு கிளம்பிவிட்டார். கதவு வரை வேகமாக சென்றவர். எதையோ மறந்து வைத்துவிட்டதை போல் அதே வேகத்துடனும், பதற்றத்துடனும் திரும்ப வந்தார். ஒவ்வொரு டேபிளாக சரசரவென இழுத்தார். ஒருகவரை எடுத்துக் கொண்டு, பின் ஏதோ நியாபகம் வந்ததைப் போல் என்னைப் பார்த்து இவ்வாறு கூறினார்.

‘உங்க ரெஷ்யூம டைப்பிஸ்ட்கிட்ட குடுத்துட்டு போங்க, ம்...... நாளைக்கு வேண்டாம், நாளை மறுநாள் ஆபர் லெட்டர வாங்கிக்கோங்க, அப்படியே ஜாய்ன் பண்ணிக்கோங்க... உங்க ஜாப் நேச்சர் பத்தின டீடய்ல்ஸ் அவங்க உங்களுக்கு சொல்வாங்க ஓ.கே....”

என் இடது நெஞ்சோரத்தில் லேசாக வலிக்க ஆரம்பித்தது. இது மிகமிக அதிகம். ஒரு முழு இரவு ஒரு நடிகை மற்றும் தூரத்து இனிமையான பாடல்கள், இவற்றுடன் போரிட்டு வெகு சிரமத்துடன் படித்து தயாராக வந்தால், பெயர் கூட கேட்காமல் வேலை தரும் பழக்கும் என்ன பழக்கம், ஸ்டுப்பிட் தனமாக இருக்கிறதே.

அந்த ஏ.சி. அறைக்குள் என் மனதிற்குள்ளாகத்தான் நான் இவ்வாறு கூறிக் கொண்டேன். நல்லவேளை யாரும் அந்த அறையில் இல்லை. எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.

ஒரு மாதத்திற்குப்பின் ஒரு தேங்காய் கடைக்குமுன் நான்,

நான்: இந்த தேங்காய் எவ்வளவு

கடைக்காரன்: 7 ரூபாய்

நான் : (மற்றொரு தேங்காயை எடுத்துக் காட்டி) இது எவ்வளவு?

கடைக்காரன் : 5 ரூபாய்

நான்: இந்த தேங்காய்

கடைக்காரன் : 4 ரூபாய் சார்

நான்: இதுக்கு கம்மியான விலைல தேங்காய் இல்லையா?

பதிலுக்கு அவன் முறைத்துப் பார்த்தான்.

அந்த நான்கு ரூபாய் தேங்காயுடன் நான் அந்த கோவிலுக்குள் நுழைந்தேன். கடவுளை பெருமிதத்தோடு பார்த்தேன். தேங்காயை நூறு கிலோ மீட்டர் வேகத்தில் போட்டு உடைத்தேன். புலி, மான் மேல் பாய்வது போல் சிதறிய தேங்காய் சில்கள் மீது 4 சிறுவர்கள் பாய்ந்தார்கள். நான் தேங்காய் உடைத்த காட்சியை ஒரு நொடி கூட என்னால் பார்க்க முடியவில்லை. என்ன கொடுமை இது. இருப்பினும் எனது நேர்மையை அந்த கடவுளுக்கு உணர்த்திவிட்ட சந்தோஷத்தில் கம்பீரமாக வெளியேறினேன்.


- சூர்யா([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com