Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
பொங்காரம்

ஆதவன் தீட்சண்யா

நெளியாத்து பரிசலாட்டம் தட்டுவட்டம் போட்டு சுத்தி நவுரும் நெலா இல்லை. அது மூஞ்சி காட்ட மூணு நாளாகும். நெறஞ்ச அமாவாசை. பேயும் பிசாசும் பித்தேறி நாயா நரியா அலையும் ராக்காடு. கிலியேத்தும் இருட்டு கிர்ருனு நாலா திக்கும்.

இருட்டு பழகுனதும் எதெது எங்கெங்கன்னு நெப்புப்படுது. கூமாச்சியா உச்சி சிலுப்பி நிக்கிது கரடு. குட்டான் பிடிக்காத ஜல்லி குத்தேரியா குமிஞ்சிருக்கு அடிவாரத்துல. அந்தாண்ட, வெள்ளெருக்கஞ்செடியில ஆரம்பிச்சு கிளுவமரம் வரைக்கும் மால் போட்டு அளந்து கட்டுன குட்டான் அச்சுவெல்லமாட்டம் லச்சணமா கெடக்கு. சக்கை புடிச்சி எகனைமொகனையா கெடக்குற பெருங்கல் எப்படிப் பாத்தாலும் நூறு லோடுக்கு தாங்கும்.

இங்கிருந்து பாத்தா சாளையில எரியற ராந்தல் காத்துக்கு தூரியாடறது தெரியுது. எப்பவும் போல இப்பவும் உள்ளார ஆளுங்க இருக்காங்கன்னு நம்ப வைக்கறதுக்கு அதே போதுந்தான். ஆனா இருக்காங்களா இல்லையானு சோதிக்க இந்த பக்கம்பராந்திரியில யாருமில்ல இப்ப. ஜாமயாம கணக்கில்லாம தொலவுல சன்னமா ரயில் சத்தம் கேக்குது.

வெடிஞ்சா ஞாயித்துக்கெழம. ஞாயிறு ஒண்ணு, சோமாரம் ரண்டு, செவ்வா மூணு, செவ்வான்னைக்கு காத்தாலதான் லோடுக்கு லாரி வரும். அன்னமுட்டும் ஒரு ஈ காக்கா எட்டிப் பாக்காது இந்த திக்குதெசையில.

நாலாபக்கமும் பாரா பண்ண தோதா வேலைக்காட்டுக்கு நடுவ பரணை. கீழ்க்கால்ல கட்டியிருந்த பந்தம் எண்ணை வத்தி கருகி மங்குது. யார் வந்து வாக்கப்போறாங்க இந்த அநாதிக்காட்ல? இருந்த உடுப்புக்காரனும் கங்காணியுந்தான் நாலா ஏழா மடங்கிக் கெடக்காங்களே தோள்ல.

பொணமாட்டம் கனக்கும்கிறது பொய்யில்ல. கனமான கனம். நாலாளு தூக்கறத ஒத்தையாளா சொமக்கறது செரமந்தான். வேற வழியில்ல. இன்னங் கொஞ்சதூரம். கரடு வந்துடும். பரமன் தோள்ல உடுப்புக்காரனும், கங்காணி சுப்புரு தோள்லயும் கனக்காங்க. கங்காணியாட்டம் இன்னொரு பங்கு ஒடம்பு உடுப்புக்காரனுக்கு- பீமசேனனாட்டம் . நிக்கிற எடம் நெளிஞ்சிரும்.

Lady லோடுக்கு வர்ற லாரிங்களுக்கு வேணும்னு குவாரியில வாங்கி வச்சிருந்த டீசல்கேனை அர்ச்சுனன் எடுத்தாறான். ரண்டுபேரை எரிக்க அதேபோதும். முழுசா எரியணும்னுயில்ல. அடையாளந்தெரியாம உருவழிஞ்சிட்டாக்கூட போதும். மிச்சத்த காக்கா கழுவு கொத்தித் திங்கட்டும். ஊரான் ஒழப்புல ஊதுன ஒடம்பு உளுத்து புழுத்து ஊத்தையா நாறட்டும்.

உடுப்புக்காரனோட துப்பாக்கியும் ஆறுசெல் பேட்ரியும் இப்ப காளியப்பன் கைல. வேட்டைக்காரனாட்டம் துப்பாக்கி தாங்கி நடக்கறது அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த சனியத்த பாத்துத்தான் இத்தினிநாளா பயந்து கெடந்தது எல்லாரும். கொஞ்சத்துல குறி தப்பிருச்சு. இல்லேன்னா அன்னிக்கே அர்ச்சுனனை கொன்னிருப்பான் உடுப்புக்காரன். தோட்டா தெறிச்சக் குழி இன்னம் வடுவாட்டம் பாறையில இருக்கு. அத பாக்கறப்பவெல்லாம் நடுங்கறான். ஆனா இத்தினிக்கும் அர்ச்சுனன் மேல தப்பில்ல. பொண்டுங்க ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்குறத பரணை மேல நின்னு பாக்காதன்னு இவன் சொன்னத்துக்குத்தான் அவனுக்கு ரோசம் பொத்து குறி பிடிச்சது. இன்னொருக்கா அந்தப்பையன் சின்னசாமிய மெரட்டியிருக்கான். இத்துனூண்ட வச்சிகிட்டு அவன் பண்ணின அழும்பு ஒண்ணா ரண்டா?

துப்பாக்கி சுட இவங்க யாருக்கும் தெரியாட்டியும் அது கைல இருக்கறது ரொம்ப தெகிரியமாயிருக்கு எல்லாருக்கும். ஆனாக்கூட ரோட்டுக்கு எட்டுனதும் இத எங்காச்சும் எறிஞ்சிரணும். நாம யார அடக்கி அடவாடி பண்ணப்போறோம்... நமக்கெதுக்கு துப்பாக்கின்னு நெனச்சான். ஆனா பேட்ரி வேணும். இருட்ட கவுக்கற வெளிச்சம் இருக்கு அதுல.

ஒரே ஒருவருசம், அப்புறம் இஷ்டமில்லாட்டி சொல்லுங்க, போய் வாங்க சாமிங்களேன்னு வண்டியேத்தி ஊருக்கு அனுப்பியுடறேன்னு இந்த கங்காணிப்பய சொன்னத நம்பி இங்க வந்து மாட்டி எமுட்டு காலமாச்சு. இருட்ல உருட்ற குருட்டுப்பூனையாட்டம் ஆயிருச்சு பொழப்பு. எங்க இருக்கறம்னு கூட பிருவு தெரியாம ராத்தாராத்திரியில கொண்டாந்து பட்டியில அடைக்கறாப்ல பண்ணிட்டான் மோசக்காரன். இவனையெல்லாம் இத்தினி நாள் உசுரோடவுட்டதே பாவம்.

ஊர்ல ஓங்காளியம்மன் நோம்பி சாட்டியிருக்கு. கோயிலுக்கு தலைக்கட்டு வரிதரணும். சாமிக்கு பொலிபோட எருமைக்கெடா வாங்கணும். பூசைச்செலவு அதுஇதுன்னு மேஞ்செலவு கொழுத்து கெடக்கு. வர்ற ஒரம்பர சரம்பரைக்கு ஆக்கிப்போடணும். வருஷம் பூராவுந்தான் சந்தையில பழசுப்பட்டு ஏலம் எடுத்து கட்டிக்கிட்டாலும் நோம்பிக்கும் அப்பிடி பண்ணிற முடியுமா? நல்லநாள் பொல்லநாள்ல கூட வூட்டுசனத்துக்கு புதுத்துணி எடுக்கலன்னா ஊரு என்ன சொல்லும்? கைல காக்காசு இல்லாம காத்தா அலையறான் அர்ச்சுனன். முன்ன வாங்குன கடனுக்கே முழி பிதுங்குது. புதுக்கடனுக்கு எங்கப் போறது? இதே கதிதான் சுப்புருக்கும்.

நோம்பி கெடக்குது நோம்பி. கடன் வங்கியாச்சும் கும்பிடிக்க பண்ணலன்னு கண்ணயா நோண்டிரும் சாமி? பெரியபுள்ளைக்கு கொழந்த பொறந்து எட்டுமாசம் ஓடிருச்சு. அரஞாக்கொடியும் கொலுசும் கொழந்தைக்குப் போடணும். அவளுக்கு சீலத்துணி எடுக்கணும். கூட்டிப்போக வர்றவங்களுக்கு கூழோ கஞ்சியோ ஊத்தியனுப்ப முடியாது. மூணுபடி அரிசியாவது வாங்கணும். பத்தாததுக்கு, போறப்ப மூட்டிரலாம்னு மவ காதுல கெடந்த தோடையும் அடமானம் வச்சிருக்கு. அதலயும் போனவாட்டி மருகன் வந்தப்ப எங்க புள்ள தோடு, காதுல குச்சி மாட்டியிருக்கேன்னு கேட்டுட்டு போனான். மூட்டுக் கொடுத்தனுப்பணும் அதை. எதுக்கும் தோதுபடாம இங்கியே கெடக்கா மவ. ஏண்டா பரமா மாடுங்கன்னும் வூட்லயே கெடக்குன்னு சாடைமாடையா யாராச்சும் கேக்கறப்ப நாக்கப் புடுங்கிட்டு செத்துரலாம்னு ஆயிருது.

நடுதூலமும் வாரைங்களும் உளுத்து மாவா எறங்குது வூட்ல. காமராசரு வந்து தொறந்த காலனி வூடு இது. இன்னிக்கோ நாளைக்கோன்னு இத்துக்கெடக்கு கூரை. போன அப்புசி மோடத்துல ஏறுன ஓதமாட்டம் மறுக்கா ஏறுனா செவுரும் தாங்காது. பிரிச்சி மரமாத்து பண்ணனும்னா அய்யாயிரமாச்சும் வுங்கறான் சாரி. அய்யாயிரம்தான்னு ஆரம்பிச்சப்புறம் லொட்டுலொசுக்குன்னு செலவு சொல்லி எக்கச்சக்கமா ஏத்திருவான். பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் சாரி பொய்யில அரைவாசியாகாதுன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க... வெசனத்துல கெடக்கான் மாரப்பன்.

புள்ள சமஞ்சி அஞ்சி வருசமாவது இந்த சித்தரையோட. அவளுக்கும் பொறனால ஆளான கூழுத்தோட்டி மவுளுக்கு கண்ணாலமாகி இப்ப கையில ஒண்ணு வயித்துல ஒண்ணு. காலாகாலத்துல அததை செய்யலன்னா அந்துசு கெட்டுரும். பாலூரான் மவன் தொப்லானுக்கு ஆசை. கட்டிக்குடுங்கன்னு ஆள்மேல ஆளா தந்து வருது. பையனும் நல்ல சமுத்தாளி. ஓம்லூர் பாய் இவன நம்பித்தான் கசாப்புக்கடைய வுட்டுருக்காரு. எத்தசோட்டு மாடா இருந்தாலும் ஒத்தையாளா கீழ தள்ளிருவான். தோல் வேவாரமும் இருக்கு. கட்டிக் குடுத்தா கமானமா பொழைக்கும் புள்ள. தோடு, மாட்லு, சிமிக்கி, பையனுக்கு காப்பவுன்ல மோதரம், சைக்கிள், துணிமணின்னு... ரொக்கமா எங்காச்சும் பொரட்டி முடிச்சிரணும்னு ஒவ்வோர் முகூர்த்த நாளுக்கு முன்னயும் நெனச்சி நெனச்சி மருகுறான் காளியப்பன்.

ஆளாளுக்கொரு பிக்கலிருக்கு. அரசனுக்கு அவன்பாடு ஆண்டிக்குத் தம்பாடு. காத்தில்லாத வூட்ல கையுங்காலும் கட்டிப்போட்டாப்ல ஆயிருச்சு. எங்கயும் காசு கண்ணி பொரளுல. அப்பப்ப அள்ளையில வாங்குன கடனுங்களும் அரிக்குது சீலப்பேனாட்டம்.

இன்னிக்கு நேத்து இப்படியாகல. காலம் முச்சூடும் இப்படியேதான் நாட்டுக்கு ராசா மாறினாலும் தோட்டிக்கு பொழப்பு மாறலேன்னு காலங்கழியுது. மீள்றதுக்கு வழி தெரியல மாள்றதுக்கும் குழி தெரியல.

ஊர்ல ஒரு பயலுக்கும் நெலம்நீச்சு கெடையாது. அடுத்தவங்களை நம்பித்தான் அன்னாடப்பொழப்பு. பாட்டன் பூட்டன் காலத்துலயிருந்து பாத்த வேலைக்குப்போற ஆளுங்க ரொம்ப கம்மி. எவன் வூட்ல எழவு வுழும் ஏகாலிக்கு துணி கெடைக்கும்னு காத்திருக்க முடியுமா? அப்படியும் அஞ்சாறு வூட்டாளுக இன்னமும் கொட்டடிக்கப் போறாங்க. நடுவமங்கலம், நாலுகால்பாலம், தொளசம்பட்டி, தோக்கம்பட்டி, செம்மாண்டப்பட்டி, சின்னதிருப்பதி, காருவள்ளி, காமலாபுரம்னு சுத்துபக்க ஊர்ல எங்க சாவானாலும் இவங்கதான் வாத்தியம். நல்ல தொழில்காரனுங்க. அதும், ரண்டு கெளாஸ் ஊத்தியுட்டாச்சுன்னா வெளுத்து வாங்கிருவாங்க. பொணமே எந்திருச்சி இன்னொருக்கா அடிங்கடான்னு கேட்டாலும் கேக்கும்குற அளவுக்கு பேரிருந்துச்சு. இப்பவெல்லாம் சாவுக்கு கூட ரேடியோ செட்டு வச்சு அழுவறாங்க. பேண்டு வாத்தியம் கூட்டியறாங்க சேலத்துலயிருந்து. இவங்களுக்கு மவுசு கொறஞ்சிருச்சி இப்ப. அதுவுமில்லாம, ஊரு ஒலகம் இத்தினி டாம்பீகமா மாறிக்கிட்டிருக்குற இந்த காலத்துலயும் தோள்ல மோளத்த மாட்டிக்கிட்டு அல்லாட யாருக்குப் பிடிக்கும்?

ரோடு போடறது, காரைவேலை, செங்கல் அறுக்கறது, மணல்லோடு அடிக்கறது, கரூர்லயிருந்து கோரை வாங்குயாந்து பாய் நெய்யறது, புளி உலுக்கறது, ஈரோடு, பவானிக்கு நெல்லறுக்கப் போறதுன்னு பலபட்டறையா தொழில் மாறிடுச்சி. ரண்டொருத்தர் ஐவேஸ்ல கேங்கூலியா இருக்காங்க. தாலுக்காபீஸ்ல பிய்யோனா இருக்கான் அம்பேத்து. பத்தரம் எழுதறது பிட்டிசன் அனுப்பறதுல நாலோ ரண்டோ கெடைக்குதுன்னு கச்சேரிமேட்லயே கெடக்கான் நெட்டப்பெருமாள். மத்தபடி சர்க்கார் உத்யோகத்துல வேற யாருமில்ல. ஓம்லூரு பஸ் ஸ்டாண்ட்ல ஜோப்பு கத்திரிக்கிறவங்கள்ல ஊர் பசங்களும் இருக்காங்கன்னு கேள்வி. இதில்லாம பொண்டாளுகள் பயிர் நடறது, களை அலசறது, தட்டுதாம்பு அறுக்கறது, கருதடிக்கிறது, கல்லக்கா தொலிக்கறதுன்னு சிக்குற வேலைக்குப் போறாங்க. மாதம்பாடியான் பொண்டாட்டி ருக்குவையும் சித்துவேடன் தங்கச்சி பொன்னுருவியவும் ஓம்லூர் லாட்ஜ்ல போலிஸ் புடிச்சதிலேர்ந்து வயித்தக்கழுவ இப்பிடியும் ஒரு தொழில் இருக்குன்னு துணிஞ்ச பொண்டுங்க கொஞ்சம்பேர் இப்பவெல்லாம் போலிசுக்கு மாமுல் கொடுத்துக்கிட்டு ஜோரா பொழப்பப் பாக்குறாங்க. இன்னம், ஏரியில வெவசாயமுள்ளுப் பொதர்ல தண்ணி விக்கிறது, மோரி அடியில புள்ளிக்கு பத்துரூவான்னு பந்தயங்கட்டி சீட்டாடறது தாயமாடறதுன்னு ஆளாளுக்கொரு வேலையிருக்கு. அங்கயும் இங்கயும் கடன வாங்கிட்டு பிப்பு தாங்காம ராத்தா ராத்திரியில ரயிலேறி வெங்ளூருக்கு தப்பி ஓடறவங்களும் இருக்காங்க.

அர்ச்சுனன், பரமன், சுப்புரு, காளியப்பன், மாரப்பன் அஞ்சிபேரும் பங்காளி பாகாளிங்க. சித்தப்பன் மக்க பெரீப்பன் மக்க. அவங்கப்பன்மாரு காலத்லயிருந்தே ஜல்லியொடைக்கிறதுதான் வேலை. அருணாச்சல கவுண்டர், மந்திநாய்க்கர் ரெண்டுபேர்க்கிட்டயும் தான் ரெண்டு தலைமுறையா செஞ்சிட்டிருந்தாங்க. அவங்க எங்கெங்க ரோடுபோட காண்ட்ரேட் எடுத்தாலும் இவங்க கேங் அங்கப்போய் ஜல்லியொடைச்சிக் குடுக்கும். பத்துபர்லாங் இருபதுபர்லாங்கா இருந்தாலும் சோம்பிசொணங்கி நின்னுடாம ஜல்லிலோடு நேராநேரத்துக்கு போய்ச்சேந்துரும். அதனாலதான் தெக்கே ராமேஸ்வரம் வரைக்கும் இந்தாண்ட திருணாமலை வந்தவாசி வரைக்கும் இவங்க கேங்கை கூட்டிப்போனாங்க மொதலாளிங்களும். கவுண்டர் செத்ததுக்கப்பறம் நாய்க்கரும் கொஞ்சகொஞ்சமா வேலைய சுருக்கிக்கிட்டாரு. விழுப்புரத்துல செஞ்சதுதான் கடேசிவேலை.

அதுக்கப்பறம் தொலைதேசம் வேலைக்கு போறது நின்னுப்போயிருச்சி. இங்கியே அக்கம்பக்கமா மேட்டூர் தொப்பூர் அரூர் வெள்ளையப்பன்கோவில்னு போனாங்க. முன்ன நல்ல ஓட்டம். இப்பந்தான் கல்லொடைக்க மிசுனு வந்துருக்கே. செத்தநேரத்துல கரகரன்னு ஓடச்சுக் குமிச்சிடறதால ஆளுங்க அவ்வளவு அவசியமில்லேன்னு ஆயிடுச்சு. கத்த வேலைய உட்டுட்டு மத்தவேலைக்கு சட்டுனு போயிரமுடியுமா?

செஞ்ச வேலைக்கு காசு கேட்டாவே சள்ளுபுள்ளும்பான் கொத்துக்காரன். வாராவாரம் பட்டுவாடா பாத்து சந்தைக்குப்போனா சாத்துசெலவுக்கும் சோத்துசெலவுக்கும் கூட பத்தும் பத்தாம ஆயிருது. பொரிகல்ல, போண்டா, முறுக்கு, பஜ்ஜி, மொட்டசோளக்கதிரு, கொடிவள்ளிக்கெழங்கு, குச்சிக்கெழங்கு, தேங்கா ரொட்டின்னு அம்மாளும் அப்பனும் நொறுவாய் வாங்கியாருவாங்கன்னு சந்தைக்கூடைய தொழாவுற புள்ளைங்க வெக்குனு ஆயிருதுங்க. கண்ணுல தங்குற ஏக்கம் காலத்துக்கும் நின்னுருது.

வாரக்கூலிக்கு கல்லொடைக்குறதுல கஞ்சிப்பாடு தான் தீருது. அத வச்சி நல்லது கெட்டது எதுக்கும் தலை குடுக்கமுடியாது. லம்பா தொகை கெடைக்குற வேறவேலை ஏதாச்சும் தேடி எங்கியாவது போயிருவமான்னு நெனப்போடுறப்ப தான் வெள்ளையுஞ்சொள்ளையுமா இந்த கங்காணி வந்தான். யார்ட்டயோ வெலாவாரியா விசாரிச்சுத்தான் வந்திருக்கான்.

பரமன் வூட்டு வாதநாராயண மரத்தடியில குந்தாணி போட்டு ஒக்காந்து தொப்பி சிகரேட்ட பத்த வச்சிக்கிட்டு அவன் பேசறதப்பாத்தா அவனே மொதலாளியாட்டம் தெரியறான். ஜோப்ல கத்தையா இருந்த நூறுரூவா தாள்ல ஒண்ண உருவியெடுத்து எல்லாருக்கும் டீ வாங்கியாரச் சொன்னான். மூணுவெரல்ல மோதரம். கைல வாச்சி, பொடக்கழுத்து வேர்வைய தொடைக்கறப்பல்லாம் வடக்கயிறாட்டந் தெரியுது மைனர்சங்கிலி. கவண்டமாராட்டம் மினுமினுன்னு வார்வச்ச தோல்செருப்பு போட்டுருக்கான். வளவுல நின்ன சனமெல்லாம் வாய்ப் பொளந்து பாக்குதுங்க.

நானும் ஒங்களாட்டம் இங்கியே சிக்கி சின்னப்பட்டவன் தான். உள்ளூர்ல ஒரலு சொமந்து சம்பாதிக்கிறத பக்கத்தூர்ல பஞ்சு தூக்கி சம்பாரிச்சரலாம்னு துணிஞ்சி அங்கப் போனேன். கத்தத் தொழிலு கையுடல. இன்னிக்கு நல்லாருக்கேன். பத்து கேங் ஆளு கைலயிருக்கு. இப்பக்கூட வெங்ளூர்ட்ட கல்லொடைக்க பத்திருவது ஆள்வேணும். நீங்க வர்றதுனா வூட்டுக்கு அய்யாயிரம் அட்வான்ஸ் தர்ரேன்னு சொன்னப்ப கஷ்டத்தப் போக்கவந்த கடவுளா தெரிஞ்சான். ஓங்காளியம்மன் உண்டியில பத்துரூவா சேத்துப்போடணும் காணிக்கையான்னு நெனச்சுக்கிட்டான் பரமன்.

கங்காணி கணக்கு தப்பல. வலையில விழாம மீன் எங்கப்போகும் தலைக்கு வராம பேன் எங்கப்போகும்? பாண்டு பத்தரம்னு எதும் எழுதாம கடன் குடுத்தா கஷ்டத்துல இருக்குறவன் சும்மாயிருப்பானா? அஞ்சுக் குடும்பமும் கைநீட்டியாச்சு. குடும்பத்தோட வர்றவங்களுக்கு அய்யாயிரம். மத்தவங்களுக்கு ஆளுக்கு தக்கனாப்ல. ரோட்டு வேலைல சுடுதார் ஊத்தி கைகால் வெந்து படுக்கையா கெடக்குற வையாபுரி, ஆஸ்பத்ரி செலவுக்கு ரண்டாயிரம் வாங்கிட்டு பள்ளிக்கொடம் போய்ட்டிருந்த மவன் சின்னசாமியவும் அனுப்பியுட்டான். தாயில்லாத புள்ள இப்ப தவப்பனையும் உட்டுட்டு தொலைதேசம் வருது, நீங்கதான் பாத்துக்கணும்னான் வையாபுரி. செவுத்துல தொங்கற பொஸ்தகப்பைய பாத்து தேம்பிகிட்டே வந்தான் சின்னசாமி. இந்த முண்டச்சி இங்கயிருந்தா என்னா அங்கிருந்தா என்னா... நானும் வரேன்னு கௌம்பிட்டா ஆராயி. அவளோட சேத்து முப்பத்தாறாளு. அவ ரண்டாயிரம் வாங்கி அடமானத்துல முழுகிட்டிருந்த சில்லரைக்கொப்பை திருப்பி மூட்டி காதுல மாட்டிக்கிட்டா. அவங்கம்மா சாகறப்ப அவளுக்கு சீதனமா குடுத்ததாம் அது.

காசுக்கு காத்திருந்த காரியம் சிலதுதான் முடிஞ்சிருக்கு. அண்ணாந்துப் பாத்தா தான் காசம், கிழிச்சு எடுத்தா கீத்துதான... பிச்சி பிச்சிப் போட்டா எத்தனைக்கு ஆவும்? இன்னம் எத்தனையோ மிஞ்சி காத்திருக்கு அடுத்தக் கடனுக்காவ. ஊர்விட்டு ஊர்போறவங்க திரும்பி வருவாங்களோ மாட்டாங்களோங்குற சந்தேகத்துல கௌம்பறதுக்கு மிந்தி நம்மளதை பைசல் பண்ணிறப்பான்னு கேட்டவங்களுக்கெல்லாம் ஜவாப்பு சொல்லி மாளல. வாராவாரம் பட்டுவாடா முடிஞ்சதும் கொஞ்சங்கொஞ்சமா அனுப்பி கழிக்கிறோம்னு சொன்னதை அரைமனசா நம்பித்தான் கௌம்பவிட்டாங்க.

நோம்பி கழிஞ்ச பத்தாம்நாள் ராவோடராவா லாரியில ஏத்திக்கொண்டாந்து எறக்குன எடம் வெங்ளூர்க்கிட்டன்னு சொன்னது பொய்யுங்கிறான் மாரப்பன். லோடேத்த வர்றவங்க பேசறது கன்னடமில்ல, நம்ம மந்திநாய்க்கர் மாதிரி நீலு கீலுன்னு பேசிக்கிறாங்க.... ஒருவேளை பெஜவாடா பக்கம் கொண்டாந்துட்டானோ என்னமோங்கிறான். கண்ணக் கட்டியுட்டாக்கூட இந்தான மைசூர்ரோட்லயிருந்து அந்தான டும்கூர்ரோடு வரைக்கும் தலைகிழுதா உருண்டுக்கிட்டே வந்துருவேன், எனக்குத் தெரியாதா இது வெங்ளூரா இல்லியான்னு அவன் சொன்னத நம்பாம இருக்கமுடியல. அவனுக்கு வெங்ளூர் அத்துப்படி. ஒசூர் பாடர்லயிருந்து அத்திப்பள்ளி, சந்தாபுரம், பொம்மனள்ளி, மடவாளம் செக்போஸ்ட் வரைக்கும் சாளை போட்டு தங்காத எடமேயில்ல. கல்யாணத்துக்கு மிந்தி அஞ்சாறு வருசம் அவன் அங்கதான் திருணாமலை ஆளுங்களோட டெலிபோன் லைனுக்கு குழியெடுக்குற வேல செஞ்சிருக்கான். அப்ப அங்க சேத்திக்கிட்டு வந்த புள்ளதான் அவன் பொண்டாட்டி மல்லிகா.

ஆந்தராவுக்கு போனவங்கள்ல பாதிப்பேருக்கு மேல ஏழெட்டு வருசமாகியும் இன்னம் ஊர்திரும்பினதில்ல. அவங்க ஊடெல்லாம் கூரை கரையான் அரிச்சி செவுரு இடிஞ்சி குட்டிச்செவுரா பாம்புபல்லி அண்டிக்கெடக்கு. அந்த பயத்துல ஆந்தரான்னு கூப்புட்டா வரமாட்டாங்கன்னு தெரிஞ்சி வெங்ளூர்னு பொய் சொல்லிட்டானா ?

அக்கம்பக்கம் ஊரெதுவும் இருக்கான்னுகூட தெரியல. பெரிய கரடு. கூமாச்சியா நிக்கிற பாறைமேல ஏறிப்பாத்தாக்கூட கண்ணுக்கெட்டுன வரைக்கும் ஆளம்பு ஒண்ணையும் காங்கல. அடிவானம் தொடுவானமா அசையற எல்லையில சன்னமா பொகை எழும்பறதை சுப்புரு பாத்து சொன்னப்புறந்தான் நாம ஒலகத்தவிட்டே வெளிய வந்துட்டமோங்குற வெசனமும் பயமும் போச்சு அல்லாருக்கும். மூஞ்சில அடிச்சாப்ல செக்கச்செவேல்னு செம்மண் காடுதான் பரவிக்கெடக்கு. கரட்டடிவாரத்துல இருந்து கௌம்புற வண்டித்தடம் எந்த ஊருக்குப் போய்ச்சேரும்னு தெரியல. தடம்கூட இப்பதான் ஆகியிருக்கும்போல.

சீதைய சிறையெடுத்தாப்ல நம்மளக் கொண்டாந்து எங்கியோ தள்ளிப்புட்டானே பாதகன்னு வெம்பல் பொங்குது எல்லாருக்கும். வெங்ளூராயிருந்தா என்ன வேற ஊராயிருந்தா என்ன? வாங்குன கடனை அடைச்சிட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஊருக்குத் திரும்பப் பாக்கணும், அவ்ளவுதான்னு ஆளாளுக்கு தெம்பு சொல்லி தேத்தப்பாத்தாலும் யாருக்கும் இங்க பிடிமானம் சிக்கல.

வேலக்காட்டுக்கு உடுப்புக்காரன்தான் ஜவாப்தாரி. அவம்பேர் என்னான்னு தெரியல. போலிஸாட்டம் காக்கி சொக்காயும் டவுஜரும் போட்டிருக்கறதால இவங்களா வச்சப்பேர். இவங்க வராங்காட்டியும் அவன் வந்து பரணை கட்டி படுத்திருந்தான். தாட்ரிக்கமான திமிர்த்தண்டி ஓடம்பு. கண்ணு பழுத்து கங்காட்டம் இருக்கறதப் பாத்தா மொடாக்குடியனா இருப்பானாட்டங்குதுன்னான் சுப்புரு. இவனையாட்டமே ஒரு குண்டன் எம்சியார் படத்துல வருவான்னா ஆராயி.

தண்ணிக்கு அல்லாடிறக்கூடாதுன்னு கரட்டடியில இருக்கற குட்டைக்குப் பக்கத்துல சாளை போடலாம்னு பாத்தா, களி உருட்டிப்போட தோதான பாறையெதும் பக்கத்துலயில்ல. ஊரூருக்கு தட்டு தாம்பாலம் கிண்ணி கெடாரம்னு தூக்கியார முடியுமா? அத்தனையவும் கழுவத் தண்ணிவேணும், கமுத்திவைக்க எடம் வேணும். இந்த அல்லாட்டமெல்லாம் வாணாம்னுதான் பாறையில போட்டுத் திங்கறது. அதுந்தவுத்து தண்ணிகூட நாலுமொடா மொண்டு தூக்கியாந்தரலாம், ஆனா ஆக்கின பானையத் தூக்கிக்கிட்டு அங்கயிங்க அலையமுடியுமா பாறைதான் பக்கத்துல வேணும்னு இங்க சாளை போட்டது.

ஒவ்வொரு வூட்டாளுங்களுக்கும் ஒரு சாளை. கூளையா இருக்கறவனே குனிஞ்சிக்கூட உள்ளாரப் போயிரமுடியாது. பன்னிக்குடிசலோட கொஞ்சம் பெருசா, மாட்டுவண்டிக் கூண்ட கவுத்தியுட்டாப்ல தரையோடத் தரையா அமுங்கியிருக்கு. கொஞ்சம் நிமுந்தாக்கூட நெக்கிரும். தெலுக்கமா மேஞ்சிருக்குற தென்னஞ்சோவை வெயிலுக்கும் தாங்காது குளுருக்கும் ஆவாது. இன்னம் ஒரு வரி நெருக்கமா தெத்தியிருக்கணும். மண்டிபோட்டு மாடு ஆடாட்டம் உள்ளப் பூந்தா மயமயன்னு இருட்டு. வெளிச்சமேயில்ல. எப்பிடி பொழங்கறதுன்னு பொண்டுக கேக்காங்க. ராத்திரிக்கு ராந்தல் இருக்கு. பகல்லயும் கொளுத்தறதுனா சீமெண்ணைக்கு எங்கப்போறது?

சின்னசாமியும் ஆராயியும் தனித்தனி ஒண்டிக்கட்டைங்க. அதால அவங்க சாளைங்க ரண்டுலயும் சமுட்டி, கொட்லான், கிட்னக்கம்பி, சேறுவாங்கி, கெடப்பார, பிக்காசு, மமுட்டி, பாண்டல்சட்டி, புட்டுக்கூடை, மால்சட்டம் எல்லாங் கெடக்கு. வெடிமருந்தும் திரியும் மாத்தரம் சவ்வுக்காயிதத்துல சுத்தி பரணையில இருக்கு. அதாட்டம் சவ்வுக்காயிதம் ஆளுக்கொன்னு குடுத்திருக்காங்க, மழப் பேயறப்ப கொங்காடையா மாட்டிக்கிட்டு கல்லொடைக்க.

பரணையிலதான் ஆரியமாவு, நொய்யரிசி, உப்பு, புளி, மொளகா, கல்லெண்ணை டின்னு, சீமெண்ணை டின்னு, வெத்தல, பொகல, பீடி, சுருட்டு, சாராயக்கேன் எல்லா ரேசனும் இருக்கு. லோடுக்கு வர்ற லாரியில கொண்டாந்து வச்சிக்கிட்டு அளந்தளந்து குடுத்துட்டு ஒத்தைக்கு ரட்டையா கணக்கெழுதிக்கிறான் உடுப்புக்காரன். அதோட வேணும்கிறமுட்டும் குடிச்சிப்புட்டு அதுக்கு ஈடா தண்ணி கலந்து இவங்களுக்கு வித்துடறான். ஒடம்புநோவுக்கு கேக்கும்னு சாயங்காலமானா ஒரு கெளாஸோ ரண்டு கெளாஸோ ஊத்திக்கிறாங்க. தண்ணி கலந்ததக் குடிச்சி மண்டையிடிக்குதுன்னு காலைல எழறப்ப அனத்தல் ஜாஸ்தியாயிருக்கும். பொண்டுகள்ல ஆராயி குடிக்கறா. சின்னசாமி பீடி மட்டும்.

கசப்புக்கட்டி சேக்காததால வெத்தல போட்டாப்லயே இல்லேன்னு எப்பவும் சலிப்பு பெருமாயிக்கு. அவங்காயாக்கிட்ட கத்துக்கிட்ட பழக்கம். கசப்பும் தொவப்பும் கலந்த ருசிக்கு பழக்கமான நாக்கு இங்க வந்ததுலயிருந்து அது கெடைக்காம அல்லாடுது. கசப்புக்கட்டி இருக்குமானு அந்த குண்டன்கிட்ட கேட்டுப்பாரேன்னு புருசன்கிட்ட சொன்னதுக்கு மாண்டி இந்த பாறையில பச்சைப்பாக்கு வெளையுது, வெட்டி வேகவச்சு, விடியறதுக்குள்ள தண்ணியிறுத்து கட்டியாக்கித் தரச்சொல்றேன்னு அவன் எகத்தாளம் பேசினதுக்கப்பறம் நாக்கை அடக்கிக்குறா.

கரட்டடியில இருக்கற குட்டையில தண்ணி மொண்டாந்து சட்டிப்பானை கழுவிட்டு ராத்திரி மீந்த சோத்தாண்ணிய குடிச்சிட்டு பொழுதேறறதுக்குள்ள ஆணுபொண்ணு அமுட்டுப்பேரும் வேலக்காட்டுக்கு போயிறணும். மத்தியானத்துக்கு களி கிண்டுறது ஆராயி வேல. எத்தினிப் படி மாவு கிண்டினாலும் ஒரு புட்டையோ கட்டியோ இருக்காது. நயமா சந்தனமாட்டம் வழுவழுன்னு எறங்கும் தொண்டையில. கிண்டியானதும் பாறைய கழுவி ஆளாளுக்கு பெரும் உண்டையா ஒவ்வொண்ணு சிப்பியில உருட்டி வச்சிட்டு, அரச்ச புளிக்கூட்ட அததுக்கு நெரவி நிமுந்தா பொழுது உச்சிக்கு வந்துரும். ஆளுங்களும் எப்ப எப்பன்னு வருவாங்க பசியில. வெயிலுக்கு பாறை சூடு பத்தியெரியறது பசியில தெரியாது. லவுக்கு லவுக்குனு முழுங்கிட்டு இன்னம் இருக்கான்னு கேக்காம வெரல்ல ஒட்டியிருக்கறத நக்குவாங்க. எப்பிடி இல்லேங்கிறதுன்னு ஆராயி வேறபக்கம் திரும்பிக்குவா.

வேலக்காட்ல இருந்து ஆளுங்க திரும்பறதுக்குள்ள ராத்திரிக்கு ஒலை வச்சிருப்பா ஆராயி. அதுல நொய்யரிசி மொளகா உப்பு போட்டு புளியூத்தி கட்டுச்சோறு கௌறுறதுல அலமேலுக்கு கைப்பாங்கு ஜாஸ்தி.

பட்டுவாடாவுக்கு சனிக்கிழம சாயந்திரம் லொடலொடன்னு சைக்கிள்ல வருவான் கங்காணி. அவன் வந்தா சனிக்கிழம. வேறநாள்ல வந்தாக்கூட வித்யாசம் தெரியாது. வர்றன்னிக்கு ராத்தங்கல் இங்கியேதான். உடுப்புக்காரன் காடை கவுதாரி மொசல்னு எதாச்சும் அடிச்சி சுட்டு வைப்பான். ரெண்டுபேறும் குடியா குடிப்பாங்க, கூத்தாடி மெதப்பாங்க.

விடிஞ்சதும் வேலக்காட்ட சுத்திவந்து அதுநொட்ட இதுநொள்ளைன்னு நோப்பாளம் படிப்பான் அவனே மொதலாயியாட்டம். பேபி ஜல்லிய எடுத்து சைசு பெருசாயிருக்கேம்பான். ஒன்ரயிஞ்சை எடுத்துப்பாத்துட்டு சிறுசா இருக்கேன்னு கொற சொல்லுவான். கருங்கல்ல ஒடச்சி குமிச்சிருந்தாலும் மாக்கல்லும் நொறம்புமா கெடக்கும்பான். கட்டியிருக்கற குட்டானுங்களுக்கு டேப் புடிச்சு மால்வச்சு அளவு கொறையுதும்பான். கொறச்சு கொறச்சு அளந்து கொசுறு புடிப்பான். கொசுறுன்னா கொசுறு இல்ல. அதுதான் பெருசு.

பட்டுவாடா பண்றேன்னு அவன் பீத்திக்கிட்டு வந்தாலும் அப்பிடியெதும் இங்க நடக்கிறதில்ல. அவன்கிட்ட பை ரொப்ப பணமிருந்தாலும் ஒத்தப்பைசா பேராது ஒரு ஆளுக்கும். குடுத்த அட்வான்சுக்கு பிடித்தம் அதுக்கு வட்டி சாப்பாட்டு சாமானுக்கும் சாராயத்துக்கும் மத்ததுக்கும் கணக்கு கழிச்சான்னா எதும் மிஞ்சாது. இன்னும் கடன் பாக்கி எவ்வளவுன்னு கேட்டா அது இருக்கு மலையாட்டம்பான். காலைக் கும்புட்டு கந்து கேட்டா மேலத் தொட்டதுக்கு வட்டி குடுடாங்கற கொடுமை. வாராவாரம் இதே லோலாயம்தான்.

வெய்யக்காலத்துல கரட்டுலயிருக்குற மூங்கப்பொதர்ல நெருப்பு புடிச்சி எரியும் அப்பப்ப. ஆனா இன்னிக்கி நெருப்பு தானா எரியல. டீசல் ஊத்தி பத்த வச்சது. நெருப்புக்குள்ள பொணங்களும் நெருப்புத்துண்டமாட்டந்தான் எரியுது. சதை கருகுற கவுச்சி கரடு முழுக்க காத்தா வீசுது. எதெதோ வெந்து வெடிக்குது. சுத்தியுமிருக்கற செடி கொடிங்க படபடன்னு பொரிஞ்சி தொவளுது. பக்கம் அண்டவுடாம பாஞ்சி பரவுது நெருப்பு. பாறைமேல நிக்கிற நாலுபேருக்கும் பதட்டத்துல பொங்குற வேர்வை அடங்காம ஊத்தாட்டம் வடியுது.

வங்குல சுருண்டிருந்த சாரையோ நாகமோ சீறி நகறுது உப்பைக்குள்ள. ராத்திரியானா குதியாளம் போடுற அதுங்க சூட்டுக்கு பயந்திருக்கணும். தெனமும் பாம்போ தேளோ அடிக்கறது சாதா விசயம். யாராச்சும் வூட்டுக்கு தூரம்போனா தீட்டுக்குத் தான் இப்பிடி பூச்சிப் பொட்டுங்க போக்கு காட்டி அலையுதும்பாள் ஆராயி. அலமேலும் மாமான்னு ஒத்தூதுவா.

அலமேலு மவன் சென்றாயன் பாம்பு தீண்டித்தான் செத்துப்போனான். சாகற வயசா அது? எனக்குத் தொணையா அவன இங்கியே வுட்டுட்டு போங்கடா. இப்ப பள்ளிக்கொடத்தலயும் மத்யான சோறு போடறாங்க. பையன் நாலு பருக்க கண்ணுல பாக்கும்னு கெஞ்சினா அவம்பாட்டி உட்டுட்டு வந்திருந்தாக் கூட உசுரோட இருந்திருப்பான். கூட்டியாந்து கொன்ன மாதிரி ஆயிருச்சு.

அங்கயும் இங்கயும் பெராக்கு பாத்துகிட்டு திரிஞ்சவன் செரிப்பொழுதுல நாதாளிப்பழம் நுனாப்பழம் காரக்காய்னு எதையாச்சும் பறிச்சுத்திம்பான். அன்னைக்கும் அப்பிடி திரியறப்பதான் குத்தடியிலயிருந்து கொத்தியிருக்கு. கடிவாய்க்கு கீழயும் மேலயும் இறுக்கி கட்டு போட்டுட்டு சீசாத்துண்டுல கீறனதும் வெஷம் எறங்குச்சு. ஆனாக்கூட பையன் நெப்புநெகாத் தெரியாமத் தான் கெடந்தான்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருந்தா பொழச்சிருப்பான். இத்தினிக்கும் அன்னிக்கு லோடுக்குவந்த லாரி கூட இருந்துச்சு. பாவி கங்காணி தான், பாடம் போட்டா சரியாயிரும் பச்சிலைத் தின்னா நல்லாயிரும்னு தடுத்துட்டான். நேரந்தாட்டினதுல வெஷம் கடுத்து பையன் கண்ணே முழிக்கல.

அனாதப் பொணமாட்டம் பொதைக்க வேண்டியதாயிருச்சு. சாங்கியப் பிரகாரம் பொதைக்கறதுக்கு செலவு வாங்கக்கூட கரட்டவுட்டு வெளிய அனுப்ப முடியாதுன்னு அடமா நின்னுட்டான் கங்காணி. ஒரு ஊதுவத்தி கப்பூரம் கூட இல்ல. சாத்து சட்டியக் கழுவி கொள்ளிப்பானையா ஒடைக்க வேண்டியதாயிருச்சு. மூணாம்நாள் பால் குத்தறத்துக்கு வதுலா தண்ணியத்தான் தெளிக்க முடிஞ்சது. இத சாக்கிட்டாச்சும் பெஜவாடாவுக்குப் போயி ஊருக்கு ஓட வழிதேடிட்டு வரலாம்னு பாக்குறீங்களா... கரட்டத்தாண்டுனீங்கன்னா காலிருக்காதுன்னு அவன் கத்துனது இன்னம் காதுகுள்ளயே இருக்கு.

மக்கியா நாள் வேலக்காட்ல மாரக்கா தான் ஆரம்பிச்சா. துள்ளத்துடிக்க ஒரு உசுரு போறப்பக் கூட மனசெரங்காத அந்தக் காதகன், அவனா மனசு வந்து ஊருக்கு அனுப்புவான்னு நாம நம்பிக்கிட்டிருக்கனுமான்னு அவ கேட்டதுக்கு யாரு வதிலு சொல்றது?

அந்த கெரகாச்சாரம் புடிச்சவனுங்க எப்ப வந்து இழுத்துட்டுப் போயிருவாங்களோ என்னென்ன சித்ரவத பண்ணுவாங்களோங்கற பயத்துல கண்ணக் குத்துனாக்கூட தூக்கம் வர்ரதில்ல எனக்கு. அவனுங்க பரணைக்கு இழுத்திட்டுப் போறத இத்தினி ஆம்பளைங்களும் பஞ்சபாண்டவங்களாட்டம் மொட்ட மரமா நின்னு வேடிக்கைப் பாக்குறீங்க. தூத்தேறி... இந்தா இந்தப்புள்ள மாதேஸ்வரி பெரியவளானதுக் கூட வெளியத் தெரியாம தலையில தண்ணி தெளிச்சி உள்ளார கூப்பிட்டுக்கிட்டம். இன்னிக்கு என்னயத் தொட்டவனுங்க இந்த கொழுந்த கிள்ளறதுக்கு எமுட்டு நேரமாவும்னு மல்லிகா பொங்கி பொங்கி அழுவுறா. யாரு தேத்தறதுன்னு தெரியாம எல்லாக் கண்ணுலயும் தண்ணி.

அவன் ஒரே ஒருவருசம்னான். இன்னிக்கு எப்பிடி கொறச்சு கொறச்சு பாத்தாலும் அஞ்சாறு வருசமாவது ஆயிருக்கும். வெங்ளூர்ட்ட வேலன்னான். அன்னிக்கு கோவத்துல பெஜவாடாங்குறான். பெஜவடாவுக்கு கல்லொடைக்க வந்து யாராச்சும் ஊர் வந்து சேர்ந்திருக்காங்களா. துணிமணி தொவைக்கவும் தண்ணி வாத்துக்கவும் வாரத்துல அரைநாள் வேலைய நிறுத்திக்கலாம்னு ஊர்ல சொல்லிட்டு இங்க வந்து இல்லைங்கறான். காய்ச்சல் தலைவலின்னு ஓய்ஞ்சு ஒக்கார வுட்டுருக்கானா? அவங்ககிட்ட அடிவாங்காம தப்பிச்சது யாரு? ஒரு நாளைக்கு ஒருபுட்டி கல்லொடச்சிருந்தாக் கூட கடன் தீந்திருக்கும். இவங்கிட்ட காலத்துக்கும் கழியாதுன்னே தோணுதுன்னு ஆளாளுக்கு பிராது இருக்கு. எல்லாத்தையும் நம்ப வச்சு கழுத்தறுத்த கங்காணி கழுத்த திருப்பி அறுத்தா என்னா குத்தம்னு ஆராயி கேட்டப்புறம் வேற யோசனையே இல்ல. எல்லோருக்கும் சூரியும் அருவாளும் வந்தது சொப்பனத்துல.

ஒருவாரமா அலமேலு கஞ்சித்தண்ணி ஒண்ணயும் சீந்தறதில்ல. அப்பப்ப ஓடியோடி குழிமேல பொரளுறா. குழிமேல கெடக்குற மண்ணை அள்ளியள்ளி தலைமேல போட்டுக்கறா. ராத்திரியெல்லாம் மாரடிச்சு அழுவுறப்ப கரடே கரையுது.

ரொம்பவும் தொவண்டு கெடக்கான்னு இன்னிக்கு அவள சாளையிலயே வுட்டுட்டு மத்தவங்க மட்டுந்தான் வேலக்காட்டுக்கு போவமுடிஞ்சது. ஆராயி அடுப்புவேலையப் பாத்துக்கிட்டு அவளயும் பாத்துக்கறா.

இன்னிக்கு நேரத்துலயே வந்துட்டான் கங்காணி. வேலக்காட்டுல ஆளுங்கள எண்ணிப் பாத்துட்டு ஒரு தலை கொறையுதேன்னான். இப்பிடியிப்பிடின்னு வெலாவாரி சொன்னான் மாரப்பன். தாட்பூட்னு எகிறிட்டு சாளைக்குப் போனவன் செத்தநேரத்துல ஓலமான ஓலம் போட்டதுல கரடே கிடுகிடுன்னு செலையோடுது. அதத அப்பிடியப்பிடியே போட்டுட்டு ஓடிப்பாத்தா பித்து பிடிச்சவளாட்டம் நின்னிருக்கா அலமேலு. கைல குட்டக் கடப்பாரை. கங்காணி கொடல் தள்ளி கெடக்கான். குதுகுதுன்னு ரத்தம் பொங்குது.

வந்தவன் மூடிட்டிருக்காம, சீமையில இல்லாத புள்ள செத்துருச்சேன்னு சிணுங்காத. உனுக்கு எத்தினி புள்ள வேணும்னு சொல்லு நாந்தர்ரேன்னு சொல்றான்னா ஆங்காரம் தான..? நான் தடுக்கறதுக்குள்ள சொருவிட்டாள்னு ஆராயி சொன்னா.

அதுக்குள்ள பரணையிலிருந்து துப்பாக்கியோட ஓடியாந்தான் உடுப்புக்காரன். யோசிக்க நேரமில்ல. இவனை வுட்டா எல்லாருக்கும் தொந்தரவுன்னு சாலைக்கு வெளிய சட்டி கழுவுற எடத்துல கெடந்த சூரிய எடுத்து ஒரே ஏத்தா ஏத்திட்டான் காளியப்பன். வலின்னா என்னான்னு தெரிஞ்சு அவன் கத்தறத்துக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சி.

லோடு லாரிங்க வந்துபோற வண்டித்தடத்துல நடக்கறப்ப யாரும் பேசல. எங்க போறதுன்னு திகிலாயிருக்கு. இந்தத் தடம் எங்கப்போயி முடியும்னு யாருக்குந் தெரியாது. எங்காச்சும் ஒரு எடத்துல நம்மூருக்குப் போற வழியா இதுவே பெரண்டு கெடக்கும்னு நம்பித்தான் பொறப்பட்டதே. ரயில் சத்தம் இப்ப பக்கத்துல கேக்குது.

ஒராளு, ரண்டாளுன்னா திருட்ரயில்ல கூட போயிறலாம். ஆனா இத்தினியாளுகளுக்கும் அப்பிடி ஒண்ணா தோதுபடாது. அப்புறம் அதுக்கு எங்காச்சும் மாட்டிக்கிட்டா அவ்ளோதான். வெயிலுக்கு பயந்து வெள்ளாவிப் பானைக்குள்ள ஒளிஞ்ச கதையாயிரும்.

பட்டுவாடாவுக்கு கங்காணி வாங்கியாந்த பணம் வண்டி செலவுக்கும் மேங்காரியத்துக்கும் போதும். அது தீந்துடறதுக்கு முன்ன எதாச்சும் வேல தேடணும்.

ரயிலேறுனாலும் நேரா ஊருக்கு போயிரப்படாது. தேடிவந்து புடிச்சிருவானுங்க குவாரிக்காரனுங்க. கழுத்துக்கு துண்டு போட்டு காசைக் கேட்டாலும் பரவால்ல. உடுப்புக்காரனையும் கங்காணியவும் என்னடா பண்ணினீங்கன்னு போலீச வச்சு பொடனி திருப்பிருவாங்க. மாட்டிறக் கூடாது. முழுசா தப்பிச்சிறணும். எங்காச்சும் ஆறுமாசமோ ஒருவருசமோ ஊருபக்கம் தலைகாட்டாம இருந்துட்டு அப்புறந்தான் போவணும். போறப்ப கைல கொஞ்சமாச்சும் காசு கொண்டு போவணும். இல்லாட்டி இத்தினி வருசமா ஏமாத்தனதுமில்லாம இப்ப வந்தும் ஏமாத்தறியான்னு ஊர்ல இருக்கற கடங்காரங்க நெரிச்சிருவாங்க.

இப்போதைக்கு சிக்கலில்ல. கையுங்காலும் தெம்பாத்தானிருக்கு. மணல் லோடுக்கோ காரைவேலைக்கோ செங்கல் அறுக்கவோ டெலிபோன் லைனுக்கு குழியெடுக்கவோ எங்காச்சும் கேங்கா சேந்துடவேண்டியதுதான். ஆனா, பாக்கறவங்களுக்கு சந்தேகம் வந்துறக்கூடாதுனு சட்டிமுட்டி சாமான் அம்புட்டயும் வேலக்காட்லயே வுட்டுட்டு வந்தாச்சு. தூங்குற கைக்கொழந்த எழுந்து கஞ்சின்னு கதறினா காய்ச்ச ஒரு சருவம் இல்ல. தொட்டது புடிச்சது எல்லாமே புதுசாத்தான் வாங்கணும். எந்த வேலைக்கு சேர்றதுக்கும் கைல சாமான் எதுவுமில்ல. புதுசாத்தான் வாங்கணும். அதுக்கு எல்லோருக்கும் கொஞ்சம் முன்பணம் தேவையாயிருக்கு.

- ஆதவன் தீட்சண்யா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com