Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கவிதை
மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
தீபச்செல்வன்

மாங்குளத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

War ஒரு நாட்டை நோக்கி யுத்தம்
அறிவிக்கப்படுகையில்
மரணம் குறித்து படைகள் அறியாதிருந்தன.
கடலுக்கு மிகவும்
நெருக்கமான சனங்களை துரத்துகையில்
படங்குகளில் தென்னை மரங்கள் பெயர்ந்தன.

எனக்கு மிகவும் பிடித்த கடலே
உனக்கு தனிமை பரிசளிக்கப்படுகிற
யுத்தத்திடம் எதுவரை காயப்படப்போகிறாய்?
படைகளை நீ மூழ்கடிப்பாய்
எனத்தான் நம்பிப் பெயர்கின்றன படகுகள்.

மனிதர்களை நெடுநாளாய் தின்று கொளுத்த
யுத்தத்திடம் வீதியும் கடலும்
முதலில் பலியிடப்படுவது
கண்டு மணல்கள் அலைகின்றன.

02

புளியங்குளத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

பசிய காடுகளே குண்டுகளை கொண்டெறிந்து
வேர்களை அறுக்கிற படைகளின்
துப்பாக்கிகள் மறைந்திருக்கின்றன.
அது இன்னும் முன்னே செல்ல
காத்திருக்கிறது.
மரங்களில் தோல்வி எழுத முனைகிறது.

எனது காடுகள் ஒடுங்காதிருக்கின்றன.
படைகள் வேர்களால்
புதைக்கப்படு நாளை அறியாதிருந்தன.
காடுகளினுள் மரங்களின்
குருதி கசிற இடைவெளிகளில்
துப்பாக்கிகள் நீட்டப்பட
மரங்களின் தலைகள் அறுத்தெறியப்பட்டிருந்தன.

காடுகளை வேட்டையாடுகிற
படைகளிடம் முதலில் சனங்கள் வேட்டையாடப்பட்டன.
பாலைமரங்களிடம் மூளுகிற
மௌனத்தின் தீயில் காடுகளால்
படைகள் எரிக்கப்படு நளை அறியாதிருந்தனர்.

03

கனகராயன் குளத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவிக்கின்றன.

மரங்கள் மிதக்கிற ஆற்றினிடையில்
சனங்களின் குருதியும்
சதைகளும் இராணுவத்தொப்பிகளில்
நிரப்பியபடி வந்தன.
வெள்ளம் ஆற்றை அள்ளிச்செல்லுகிற
மழைநாட்களில் படைகள்
துப்பாக்கிகளை நனைத்து
மெல்ல புகுந்தன.
கரைகள் மீதியற்று கரைகிறது.

ஆறுகள் அறுபட்டு திசையிழந்து திரிந்தன.
ஜனாதிபதி மாளிகையின்
தாழ்வாரங்களின் மீது மோதி
தரையிலிருந்து எழும்புகின்றன.
ஜனாதிபதி ஆற்றை வெட்டி எறிய
புதியபெயர்கள் காத்திருக்க
படைகள் ஆற்றை கால்களுக்கிடையில்
சுற்றி வைத்திருந்தனர்.

படைகள் ஆறுகளால்
இழுத்துச் செல்லப்படு நாளை அறியாதிருந்தனர்.

04

அலம்பிலினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

வீதிகளை பிடித்து தின்றபடி
செல்லுகிற படைகளின்
காலடியில் வீடுகள் மிதிபட
புத்தகம் கிழிந்து பறக்கிறது.
வெற்றியின் களிப்பில்
ஆளில்லாத கிணற்றில்
நாய் ஊளையிடுகிற
சத்தம் நிரம்புகிறது.

யாருமில்லாத ஊரின்
நடுவில் படைகள் விரித்து வைத்திருக்கிற
வரைபடத்தில்
நமது கிராமத்தின் ஆடுகள்
அலைவதை நான் கண்டேன்.

உடைந்த வீட்டின் மீதியை
தின்று இன்னொரு கிராமம்மீது பசித்திருக்கிற
படைகள் ஆடுகளால்
தின்னப்படு நாளை அறியாதிருந்தனர்.

05

குமுழமுனையுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

இரவை கைப்பற்றிய படைகள்
பகலில் மீது தாக்கத் தொடங்கினர்.
சனங்கள் இருளில் திரிய சூரியனது
திசையில் அடுத்த யுத்தம் அறிவிக்கப்பட்டது.

விளக்குகள் அணைய
முகங்கள் விறைத்திருக்க படைகள்
எறிந்து விளையாடுகிற
எறிகணைகளில் தென்னைகள் பட்டெறிந்தன.

தென்னைகள் சரிகிற இரவில்
வீடுகள் நசிய படைகள் புகுந்தன.
குளத்தின் முகத்தை படைகள் பிடிக்க
தண்ணீர் வெருண்டு புகுகிற
ஊரில் கிணறுகள் மூழ்கின.

படைகள் கிணறுகளால்
விழுத்தப்படு நாளை அறியாதிருந்தனர்.

06

ஒலுமடுவினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

வீதியின் நடுவில் காடு
தனியே கிடந்து துடிக்கிற பகலில்
ஒரு பள்ளிக்கூடம் அகப்பட்டது.
மேலுமாய் துயரத்தை அனுபவிக்கிற
கிராமத்தில் மீண்டும்
படைகள் புகுந்த வெற்றியில்
கோழிகளின் இறக்கைகள் மிஞ்சின.

மாடுகளின் எலும்புகள்
கண்டு பொறுக்குகிற படைகள்
சனங்களின் தலைகளை தேடினர்.
கொழும்பின் பசியில்
மாடுகளை படைகள் மேய்ந்தனர்.

படைகள் மாடுகளால்
முட்டப்படு நாளை அறியாதிருந்தனர்.

07

அம்பகாமத்தினுள் படைகள்
நுழைந்து நின்று வெற்றி அறிவித்தன.

காய்கறிகளை வெட்டி வீசுகிற
படைகள் கிழங்குகளை பிடுங்கி எறிந்தனர்.
பூக்கள் மறுக்கிற பூமரங்களை
படர்ந்த கொடிகளை வேரில் சுட்டனர்.
கைகளை தேடுகிற
படலைகள் ஓட்டைகளால் நிறைய
அதனூடே ஷெல்கள் நுழைந்தன.

கடலின் படலையில் மரணம்
படைகளை பார்த்தபடி
காத்திருக்கிறது.
சனங்களின் தவிப்பில் கொந்தளிக்கிற
கடலை போர் தாக்கிக் கொண்டிருந்தது.
ஆடுகள் கடலில் அலைய
கிணறுகள் மிதந்தன.

முல்லைத்தீவிடம் கால்
பதிக்க குதிக்கிற படைகள்
கடலிடம் தோற்கப்படு நாளை அறியாதிருந்தனர்.

மற்றொரு சந்தையும்
மருத்துவமனையும் நொருங்குப்படத் தொடங்க
இரண்டு பெரிய நகரங்களினிடையில்
ஒரு வீதியில் தமது வீடுகளை
தேடுகிற சனங்கள் அலைகின்றனர்.

--------------------------------------------------------------------------------

21.12.2008. முல்லைத்தீவு. இராணுவ நடவடிக்கை. பலமுனைகள்

- தீபச்செல்வன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com