Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle

கானவரின் விலங்கு வேட்டை
வெ.பெருமாள் சாமி


உடும்பு

எயினர் வேட்டையாடிக் கொன்ற விலங்குகளில் உடும்பும் ஒன்றாகும். உடும்புகளை எயினர் விரும்பி வேட்டையாடினர். உடும்பின்தசை சத்துமிக்கது என்று மக்கள் கருதுகின்றனர். அதன் தசை, உண்பாரது உடலில் முழுமையாகச் சேரும் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கை ஆகும். இதுபற்றி ‘கால் கோழி, அரை ஆடு, முக்கால் காடை, முழுஉடும்பு” என்று ஒரு சொலவம்மக்களிடையே வழங்கிவருகிறது. வேட்டைப்பிரியர்கள் இன்றும் உடும்புகளை விரும்பி வேட்டையாடுகின்றனர்.

ஊருக்கு அண்மையில் இருந்த மடுக்கரையில் இருந்து உடும்புகளை எயினச்சிறார் பிடித்து வந்த செய்தியைப் புறநானூறு முதலிய நூல்கள் கூறுகின்றன.

animalhunt ‘ஊர்,அருமிளையதுவே மனைவியும்
வேட்டைச்சிறாஅர் சேட்புலம் படராது
படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்கு நிணம்பெய்த தயிர்க்கண் விதவை
யாணர்நல்லவை பாணரொடொராங்கு
வருவிருந்தயரும் விருப்பினள்”
- புறநானூறு 326

(கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின் கண் உள்ள ஊரில் மனைக் கிழத்தி, வேட்டுவச் சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல் மடுக்கரையில் பிடித்துக் கொண்டு வந்த குறுகிய காலையுடைய உடும்பினது விழுக்காகிய தசையைப் பெய்து சமைத்த தயிரோடு கூடிய கூழையும் புதிதாக வந்த வேறு நல்;ல உணவுகளையும் பாணருக்கும் அவரோடு வந்த ஏனை விருந்தினருக்கும் ஒரு சேரக் கொடுத்து உண்பிக்கும் இயல்பினள்) என்றும்

‘களர் வளரீந்தின் காழ் கண்டன்ன
சுவல் விளை நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி
ஞமலிதந்த மனவுச் சூல் உடும்பின்
வரைகால்யாத்தது வயின் தொறும் பெறுகுவிர்”
பெரும்பாணாற்றுப்படை: 130-133

(களர்நிலத்தேவளர்ந்த ஈந்தினது விதைபோன்ற மேட்டுநிலத்தே விளைந்த நெல்லினது சிவந்த அவிழாகிய சோற்றை, நாய்கடித்துக் கொண்டுவந்த அக்குமணிபோன்ற முட்டைகளையுடைய உடும்பினது பொரியலாலே மறைத்ததனை மனை தோறும் பெறுகுவீர்) என்றும் எயினப் பெண்கள் தம் குடிசைக்கு வந்த விருந்தினராகிய பாணர் முதலியவர்களுக்கு உடும்பின் தசையைச்சமைத்து விருப்புடன் வழங்கி உபசரித்த செய்தியைச் சங்க இலக்கியங்கள் சுவைபடக் கூறுகின்றன.

முயல்
உடும்பைப் போலவே முயலும் ஒரு சிறிய விலங்குதான். மக்கள் இன்றும் அதனை விரும்பி வேட்டையாடுகின்றனர். பண்டை நாள் போலவே இன்றும் உணவுக்காகவே முயல் வேட்டையாடப்படுகிறது. முயல் ஒருசாதுவான ஆபத்தில்லாத விலங்கு. அதை வேட்டையாடுவதும் எளிது. எனவே எயினர் முயலை மிகுதியாக வேட்டையாடினர். வேட்டுவர் குடிசைகளில் முயற்கறி முக்கிய உணவாக இருந்தது. அங்கு எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் முயற்கறி உண்ணக் கிடைத்தது. வேட்டுவர் முயல் வேட்டையாடியது குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவே பேசுகின்றன.

“படலை முன்றிற் சிறு தினையுணங்கல்
புறவுமிதலுமறவுமுண்கெனப்
பெய்தற் கெல்லின்று பொழுதேயதனால்
முயல் சுட்டவாயினும் தருவேம் புகுதந்
தீங்கிருந்தீமோ முதுவாய்ப்பாண” என்று புறநானூறு ( 319) கூறுகிறது.

எயினரது மனைக்குப் பாணனாகிய விருந்தினன் தன் சுற்றத்தாருடன் ஞாயிறு மறைந்த மாலைப் பொழுதில் வந்திருந்தான். அவனுக்கு உணவளித்துப் பசி போக்கி உபசரிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உண்டு என்பதை உணர்ந்த மனைத் தலைவி பாணனிடம் கூறினாள். “பாணனே சிறிய தினையரிசியை முற்றத்தில் தெளித்து அதனை உண்ணவரும் புறா முதலிய பறவைகளைப் பிடித்துச்சமைத்து உங்களுக்கு வழங்குதவற்குக் கால மின்மையின் எம்மிடம் உள்ளது பழையதாகிய சுட்ட முயற்கறியே. அதனை உங்களுக்கு உண்ணத்தருவோம்.” என்று கூறி மனைத்தலைவி பாணரை உபசரித்து உணவூட்டிய செய்தியை ஆலங்குடி வங்கனார் மேற்குறித்த புறநானூற்றுப் பாடலில் கூறுகிறார்.

முயல் வேட்டைக்குச் சென்ற எயினர் தாம் வளர்த்த நாய்களையும் வேட்டைக்காக உடன்கொண்டு சென்றனர். ( இன்றும் முயல் வேட்டைக்குச் செல்வோர் நாய்களையும் உடன் கொண்டு செல்கின்றனர்) “நெடியசெவிகளையுடைய முயல்களை அவை ஓரிடத்தும் போக்கில்லாதபடிகுவிந்த இடத்தையுடைய வேலியிடத்தே வலைகளைப் பிணைத்து மாட்டிவளைத்துப் பசிய தூறுகளையடித்து முயல்களை அவற்றில் கிடவாமல் ஓட்டிக் கொன்றனர்” என்று கானவர் முயல் வேட்டையாடியமை குறித்து கடியலூர் உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் கூறுகிறார்;.

பன்றி வேட்டை

எயினர் உணவுக்காகப் பன்றி களையும் வேட்டையாடினர். பன்றி வேட்டை முயல் வேட்டைபோல எளிய செயல் அன்று, கடினமானது. வேட்டையின் போது, விரட்டி வரும் வேடர்களைப் பன்றிகள் தம் வளைந்த கொம்பால் மோதித்தாக்குவதும் உண்டு . அதனால் எயினர் பன்றிகளைக் கொல்வதற்குச் சில தந்திரமான செயல்களை மேற்கொண்டனர். (குறிஞ்சி நிலத்தில் பன்றிகளைக் குடிசைகளில் வளர்க்கும் பழக்கம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை : ஏனெனில், வேட்டைச் சமூகம் இன்னும் மேய்ச்சல் சமூகமாக மாறவில்லை) மழையின்றி வறட்சி பாதித்த கடுங்கோடைக் காலங்களில் விலங்குகள் நீருக்காக தாகத்தோடு மயங்கித்திரியும். அவ்வாறு நீர் தேடியலையும் விலங்குகளின் காலடித்தடங்கள் மிகுதியாக அழுந்திக் கிடக்கின்ற வழியிடங்களில் தறுகண்மையுடைய கானவர்கள், மழைபெய்தால் நீர் நிற்க வேண்டுமென்று கருதிக் குளங்கள் அமைத்தனர். அக்குளங்களின் அருகில் மட்டுக் குழி (பதுங்குழி) களையும் அமைத்தனர். இரவில் பன்றி முதலிய விலங்குகள் நீருண்ண அக்குளங்களுக்கு வரும். அப்படி வரும் காலங்களில் மறைந்திருந்து அவற்றைக் கொல்வதற்காக வேட்டுவர் அமைத்துக் கொண்ட அக்குழிகளே மட்டுக் குழிகள் எனப்பட்டன. விலங்குகள் நீருண்ண வருதலை எதிர்பார்த்து அக்குழிகளில் பதுங்கியிருந்த வேட்டுவர் அவை வந்ததும் அவற்றைப் பாய்ந்து கொன்றனர். இச் செய்தியைப் பெரும்பாணாற்றுப்படை தெளிவாகக் கூறுகிறது. இங்கு வேட்டுவர் அமைத்த இக்குளங்கள் தனிமனிதர்களுக்காக அமைக்கப்பட்டவை அன்று. சமூகத்தேவைக்காக சமூகத்தவர் அமைத்துக் கொண்ட குளமே அது.

‘மானடிபொறித்த மயங்கதர் மருங்கின்
வான் மடி பொழுதின் நீர் நசைக் குழித்த
அகழ்சூழ் பயம்பின் அகத்தொழித்தொடுங்கிப்
புகழாவாகைப் பூவினன்ன
வளை மருப்பேனம் வரவுபார்த்திருக்கும்
அரைநாள் வேட்ட மழுங்கிற்பகனாட்
பகுவாய்ஞமலியொடுபைம்புதலெருக்கித்
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையும்
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கறவளைஇக்
கடுங்கட்கானவர் கடறு கூட்டுண்ணும்
அருஞ்சுரம்” என்று, எயினர் மட்டுக் குழிகள் அமைத்துப் பதுங்கியிருந்து பன்றி வேட்டையாடியது குறித்துச் சுவைபடக் கூறிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், முயல் வேட்டையாடியது குறித்தும் கூறியுள்ளார்.

தினைப்புனத்தில் தினைக் கதிர்கள் நன்கு விளைந்து முற்றிய காலங்களில் பன்றிகள் இரவுப் பொழுதில் வந்து அத்தினைக் கதிர்களை மேய்ந்து அழிக்கும், அதனைத் தடுப்பதற்காக வேட்டுவர் தினைப் புனங்களில் பன்றிகள் வரும் பாதையில் பெரியகற்பொறிகளை அமைத்து வைத்திருப்பார்கள். தினைப்புனத்தை மேய வரும் பன்றிகள் அக்கற்பொறிகளில் அகப்பட்டுக்கொள்ளும், அப்போது, தினைப்புனம் காத்திருந்த எயினர் விரைந்து வந்து அப்பன்றியைக் குத்திக் கொல்வர். இக்கற் பொறிகள் அடார் என்று வழங்கப்பட்டன.

“விளைபுன நிழத்தலிற் கேழலஞ்சிப்
புழை தொறும் மாட்டிய இருங்கலரும் பொறி
யுடைய ஆறே”

(வழிகள் முற்றிய தினைப்புனத்தைப் பன்றிகள் நொக்குகையினாலே இதற்கு அஞ்சிச் சில் வழிகள் தோறும் கொளுத்திவைத்த பெரிய கற்பொறிகளையுடையவை ) என்று, தினைப்புனங்காத்த எயினர், பன்றிகள் தினைக்கதிரை உண்ணவரும் பாதைகளில் கற்பொறிகளை அமைத்து வைத்த செய்தியை மலைபடுகடாம் ( 193-95 ) கூறுகிறது.

“தினையுண் கேழல் இரியப் புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடா அர்
ஒண்கேழ் வயப்புலிபடூ; உம்”

(தினைக் கதிரைத் தின்ன வரும் பன்றியை வீழ்த்துவதற்காக வேட்டுவன் மாட்டி வைத்த பெரிய கற்பொறியாகிய அடார் என்பதில் வலிமை மிக்க புலி அகப்பட்டுக் கொண்டது) என்று நற்றிணை ( 119 ) கூறுகிறது. வேட்டுவர் புலி வேட்டையின் பொருட்டும் அடார் என்னும் கற்பொறியினை அமைத்து வைத்த செய்தியைப் புறநானூறு கூறுகிறது” இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய பெருங்கலடார், என்பது புறநானூறு (19) அது குறித்துக் கூறும் செய்தியாகும்.

முள்ளம் பன்றி வேட்டை

வேடர்கள் விரும்பி வேட்டையாடும் விலங்குகளில் முள்ளம் பன்றியும் ஒன்று. முளவுமா என்றும் எய்ப்பன்றி என்றும் இலக்கியங்கள் இதனைக் குறிக்கின்றன. முள்ளம் பன்றியானது, தனக்கு ஆபத்து நேரிட்ட காலங்களில், தன் எதிரிகளின் மேல், தன் உடலைச் சிலிர்த்து உதறிக் கூரிய முள்போன்ற மயிரைச் செலுத்துமாம். அவ்வாறு செலுத்தப்பட்ட மயிராகிய முள் எதிரியின் உடம்பில் தைத்து அவற்றுக்கு மிகுந்த துன்பத்தைச் செய்யும், இவ்வாறு உடலைச் சிலிர்த்து எதிரிகளின் மேல் மயிரை எய்வதால் முள்ளம் பன்றி எய்ப்பன்றி எனப்பட்டது. முள்ளம் பன்றி வேட்டை, பன்றி வேட்டையை விட ஆபத்தானது. ஆனாலும் எயினர் அவற்றை விரும்பி வேட்டையாடினர். “முளவு மாத் தொலைச்சிய முழுச்சொலாடவர்” - ( புறநானூறு : 325 )

“முளவுத் தொலைச்சிய பை நிணப் பிளவை” என்று வேட்டுவர் முள்ளம் பன்றிகளை வேட்டையாடிய செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. நெடிய மலையிடத்துக் குகையில் முள்ளம் பன்றி பதுங்கிக் கிடந்தது. அதனையறிந்த வேட்டுவன் அதனை வேட்டையாடுவதற்காக அங்குச் சென்றான். கானவனது வருகையை உணர்ந்து கொண்ட அவ்விலங்கு அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கான தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டது. கூர்மையான ஊசி போன்ற தன்மயிராகிய முள்ளை, உடலைச் சிலிர்த்து உதறி ஏவியது. அம்முட்கள் கானவன் உடலில் தைத்துப் பெரும்புண் உண்டாக்கின. புண்பட்ட வேட்டுவன் வலிதாங்கமாட்டாமல் அழுது கூச்சலிட்டான். அக்கூச்சல் கானகமெங்கும் எதிரொலித்தது.

“சேயளைப் பள்ளியெ‡குறு முள்ளின்
எய்தெற விழுக்கிய கானவரழுகை” (நெடிய முழையாகிய இருப்பிடத்தில் தங்கும் எய்ப்பன்றி தனது கூர்மையுறுகின்ற முள்ளால் எய்து கொல்லுகையினாலே பட்ட கானவர் அழுகை) என்று, முள்ளம்பன்றியை வேட்டையாடப் புகுந்த கானவன் பட்ட பாட்டை மலைபடுகடாம் (300- 1) கூறுகிறது.

“அகன்றுறைச்சிலைப் பாற்பட்ட முளவு மான்கொழுங்குறை”

“அகன்ற நீர்த்துறைக்கண் வில்லால் வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் ஊன்”; என்று, முள்ளம் பன்றி ஊனுக்காக வேட்டையாடப்பட்டது குறித்துப் புறநானூறு ( 374) கூறுகிறது. இரவு நேரங்களில் பன்றி முதலிய விலங்குகள் வந்து தினைப்புனத்தை நொக்கி அழித்து விடாமல் இருக்கக் காவல் காத்த எயினர், பரண் அமைத்து அதன்மேல் இருந்து காத்தனர். இரவு நேரத்தில் யானைகள் வந்து தினைப்புனத்தை அழித்தலும் உண்டு. பரண்கள் உயரம் குறைவாக இருந்தால் யானைகள் பரண்களை அழித்து, பரண்மேல் இருப்போரைத் துன்புறுத்தக் கூடும். அதனால் யானைகளுக்கு எட்டாத உயரத்தில் மரங்களின் மேல் பரண் அமைத்து வேடர் அதன் மேல் இருந்து தினைப்புனம் காத்தனர். அப்போது பன்றியொன்று தினைப்புனத்தை மேய்ந்து அழிப்பதற்கு வந்தது. பன்றியின் காலடியோசை கேட்ட கானவன் பரண்மேல் இருந்தபடியே ஓசைவந்த திசையை நோக்கி அம்பு ஒன்றை வேகமாகச் செலுத்தினான். கானவன் கடுகச் செலுத்திய அம்பு பன்றியின் உடம்பில் பட்டுப் புண் படுத்தியது. புண்பட்ட பன்றி புண்ணுடனும் அம்புடனும் ஓடிப்போனது. ஓடிய பன்றி புண்ணின் வலியின் கடுமையால் மயங்கித் தான் வந்த பாதையை மறந்து வழி மாறிச் சென்று இறந்து வீழ்ந்தது. இதனை

“கழுதிற் சேணோன் ஏவொடு போகி
யிழுதினன்ன வானிணஞ் செருக்கி
நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பின்
நெறிகெடக் கிடந்த இரும்பிணர் எருத்தின்
இருள் துணிந்தன்ன ஏனம்” என்று மலைப்படுகடாம் (243 – 47) கூறுகிறது.

மான்வேட்டை

முயலைப் போல மானும் ஒரு சாதுவான ஆபத்தில்லாத விலங்குதான். தற்காலத்தில் தோல், கொம்பு, இறைச்சி ஆகியவற்றுக்காக மான் வேட்டையாடப்படுகிறது. பண்டைக் காலத்திலும் மான் தோல், இறைச்சி ஆகியவற்றுக்காக வேட்டையாடப்பட்டது. வேள்வி செய்யும் காலத்தில் பார்ப்பார் மான் தோலைப் பச்சையாகத் தோளில் போர்த்திக் கொண்டு யாகச்சடங்குங்களைச் செய்தனர் என்று புறநானூறு ( 166 ) கூறுகிறது.

“வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப்புல்வாய்க் கலைப் பச்சை
சுவற்பூண் ஞாண் மிசைப் பொலிய”
(வேள்வித் தொழிற்கு வேண்டி நீ போர்க்கப்பட்ட, காட்டு நிலத்தே வாழும் புல்வாய்க் கலையினது உறுப்புத்தோல் நினது தோளின் கண் இடப்பட்ட பூணூல் மீது சிறந்து தோன்றியது) என்று ஆவூர் மூலங்கிழார்அது குறித்துக் கூறுகிறார்.

மானுக்கு இரங்கிய மங்கை

எயினரது குடிசையின் முற்றத்தில் பலாமரம் அல்லது விளாமரம் நிற்கும், அதில் பார்வை மான் கட்டப்பட்டிருக்கும். பார்வைமான் கட்டிய கயிறு உராய்ந்ததால் அம்மரத்தின் அடி தேய்ந்திருந்தது. இதனை,

“பார்வை யாத்த பரைதாழ் விளவு, என்றும்
முன்றில் முஞ்ஞை முசுண்டைபம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத் தூங்கு நீழல்
கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப் பிணை தழீஇ” – புறாநானூறு : 320
என்றும் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.

பார்வைமான் என்பது, பிற மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சிதந்து கட்டப்பட்ட பெண்மான். இதனை எயினர் தம் குடிசையின் முற்றத்தில் இருந்த பலாமரம் அல்லது விளாமரத்தின் அடியில் கட்டி வைத்திருந்தனர். ஆண்மான்கள் புணர்ச்சி வேட்கை கொண்டு மேய்தல் தொழிலைக் கைவிட்டு அதனோடு கூடி விளையாட்டயர அங்கு வரும். கலையும் பிணையும் புணர் நிலைக்கண் விளையாட்டயர்தலைக் காணும் எயினர் இரக்க மின்றிக் கலையை எளிதில் வீழ்த்துவர். அதற்காகப் பயிற்சி தந்து கட்டப்பட்ட பெண்மானே பார்வைமான் என்ப்படும். எயினரின் எளிய குடிசையின் முன் கனிகள் தொங்கும் பலாமரம் ஒன்று நின்றிருந்தது. முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அதன் மீது செறிந்து படர்ந்திருந்தன. வேறே பந்தல் வேண்டாது தாமே பந்தராகப் படந்திருந்தன. குடிசையின் முற்றத்தில் மான் தோலைவிரித்து எயிற்றி தினையரிசியைப் பரப்பி உலரவிட்டிருந்தாள். குடிசைக் குரிய வனான எயினன் பலாமரத்தின் நிழலில் படுத்துறங்கிக் கொண்டிருந்தான். அவன் யானை வேட்டம்புரிவோன்: இரவு அவ்வேட்டத்தின் மேற்சென்றிருந்தமையால் பேருறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

குடிசையின் பக்கத்தில் பார்வை மானாகிய பெண்மான் கட்டப்பட்டிருந்தது. தொழிலொன்று மில்லாத பிறிதொரு தனி ஆண் மான் வந்து அப்பெண்மானைத் தழுவிக்கலந்து விளையாடிக் கொண்டிருந்தது. அக்குடிசையின் தலைவியான எயிற்றி, குடிசையின் ஒரு பக்கமாக மான் தோலைவிரித்து அதில் தினையரிசியை உலர விட்டிருந்தாள். அவள், இன்பம் மிக்க அவற்றின் புணர்ச்சி நிலையைக் கண்டாள். கண்ட அவள் தன் கணவன் உறக்கம் நீங்கி எழுந்து விடுவானோ என அஞ்சினாள், எழுந்து கலையும் பிணையும் புணர்நிலைக் கண் விளையாட்டயர்தலைக் காணின் அவன் அருளின்றிக்கலையை வீழ்த்துவன் என்று உணர்ந்து, அவன் உறக்கம் கலைந்து எழுவானோ எனவும், தன்வருகையைக் கண்டால் புதிதாக வந்த கலைமான் அஞ்சியோடுமோ, அங்ஙனம் அஞ்சியோடின் அவற்றின் புணர்நிலை இன்பம் சிதையுமோ என்றும் கவன்ற அவள் ஒரு பக்கத்தில் ஒதுங்கியிருந்தாள். அவளது ஒடுக்கம் கானக்கோழியும் இதற் பறவையும் வந்து அவள் மான் தோலில் பரப்பி உலர விட்டிருந்த தினையரிசியைக் கல்லென ஆரவாரித்துக் கவர்நதுண்ண ஏதுவாயிற்று. பின்னர் எயிற்றி வைத்திருந்த கண்ணியில் அகப்பட்டுக் கொண்டன.

கலைமான் பிணைமானைப் புணர்ந்து நீங்கியபின் எயிற்றி அப்பறவைகளைப் பிடித்துத் துண்டு துண்டாக அறுத்து நிறைத்த இறைச்சியைச் சந்தனக்கட்டையாலாகிய நெருப்பில் சுட்டு ஆரல் மீனின் நாற்றமும் உடன்கமழ அவற்றைப் பாணரின்கரிய பெரிய சுற்றத்தார்க்கு உண்ணக்கொடுத்து உபசரித்தாள். இச்செய்தியைச் சுவைபடக் கூறும் வீரைவெளியனாரின் பாடல் இது.

‘முன்றில் முஞ்ஞை முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைமான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர் தொழிற்றனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலு மஞ்சி யாவதும்
இல் வழங்காமையின் கல்லென வொலித்து
மானதட்பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடிதல் கவர்ந்துண்டென
ஆரநெருப்பினாரல் நாறத்
தடிவார்ந்திட்ட முழு வள்@ரம்
இரும்பே ரொக்க லொடொருங்கினி தருந்தித்
தங்கினை சென்மோபாணை”
- புறானூறு 320

வீரைவெளியனாரின் இப்பாடல் கணசமூகத்தலைவியான எயினப்பெண்ணின் இல்லற மாட்சியையும் எவ்வுயிரும் தன்னுயிர் போல் எண்ணிஇரங்கும் உயர்பண்பையும் அவளது விருந்தோம்பற் சிறப்பையும் உலகுக்குத் தெற்றெனப் புலப்படுத்துகிறது.

புலிவேட்டை

வேட்டுவர் புலி வேட்டைக்குச் சென்றனர். வேட்டையின் போது சினமுற்ற புலியானது வேட்டுவன் மீது பாய்ந்து மார்பைக் கிழித்துப்புண்ணாக்கியது. அக்கொடிய புண்ணை ஆற்றுவதற்காகவும் புண்ணின் வலி தெரியாமல் இருப்பதற்காகவும் எயிற்றியர் இனிய பாடல் களைப் பாடினர். அப்பாடல் காடெல்லாம் எதிரொலித்தது.

“கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்; காப்பென
அறல் வாழ் கூந்தல்கொடியச்சியர் பாடல்”

(தம் கணவர் மார்பிலே புலிபாய்ந்ததாகப்பட்ட நெடிய பிளத்தலையுடைய சீரிய புண்ணை ஆற்றுவதற்குக் காவல் என்று கருதி அறல் போலும் கூந்தலையுடைய கொடிச்சியர் பாடும் பாடலால் எழுந்த ஓசை) என்று மலைபடுகடாம் கூறுகிறது.

யானை வேட்டை

கானவர் மலைமேல் பரண் அமைத்துத் தினைப்புனம் காத்தனர். அப்போது, விளங்குகின்ற ஏந்தின கொம்பையுடையதும் தன் இனத்தைப் பிரிந்து வந்ததுமான யானை தினைப்புனத்தைத் தின்னும் பொருட்டு வந்தது. யானைத் தலைவனான அதனை வளைத்துப் பிடித்தற்காகக் கானவர் கூடிமுயன்றனர். அதனால் ஏற்பட்ட ஆரவாரம் கானகமெங்கும் எதிரொலித்தது.

‘விலங்கல் மீமிசைப் பணவை கானவர்
புலம்புக் குண்ணும் இலங்கேந்து மருப்பின்
இனம்பிரி ஒருத்தல் புரிவளை பூசல்” என்று, மலைபடுகடாம் ( 277-99)
எயினரின் யானை வேட்டம் குறித்துக் கூறுகிறது.

இதுகாறும் கூறிய செய்திகளால் கானவர்; உடும்பு, முயல், பன்றி, முள்ளம் பன்றி, மான், புலி, யானை முதலிய காட்டு விலங்குகளை வேட்டையாடினர். அவ்வேட்டத்தின் போது பல்வகை இன்னல்களுக்கு ஆளாயினர் என்பதை அறிந்தோம். வேட்டைத் தொழில் கானவரின் கூட்டு முயற்சியாகவே இருந்தது.

கானவர் தேனெடுத்தல்

குரங்குகளும் ஏற முடியாத உயரத்தையுடையதும் இனிதாகக் காட்சி தருவதுமான உயர்ந்த மலையில் தேனீக்கள் தேனைத் திரட்டிக் கூடுகட்டியிருந்தன. கானவர் அத்தேனை எடுக்க முயன்றனர். நிலைபேறுண்டாகக் கட்டியமைத்தகண்ணேணி வழியாக ஏறிச் சென்று அத்தேன் கூட்டை யழித்துத் தேனெடுத்தனர். அதனால் எழுந்த மகிழ்ச்சியால் மிகுதியாக ஆரவாரித்தனர். அந்த ஆரவாரம் மலையெங்கும் எதிரொலித்தது. கண்ணேணியாவது, கணுக்களிலே அடிவைத்து ஏறிச் செல்லும்படி அமைத்துள்ள மூங்கில் ஏணியாகும். மலையுச்சியில் உள்ள தேனிறாலை அழிக்கும் பொருட்டாகச் செங்குத்தாக மூங்கில்களைக் கூட்டி ஏணியாக நிறுத்தி வைத்து அதன் வழியாக ஏறிச் சென்று கானவர் தேனெடுப்பர்.

“கலைகையற்ற காண்பினெடுவரை
நிலைபெய்திட்ட மால்பு நெறியாகப்
பெரும்பயன் தொடுத்த தேங்கொள் கொள்ளை”

என்று கானவர் கண்ணேணி வழியாக ஏறிச்சென்று தேனெடுத்த செய்தியை மலைபடுகடாம் ( 315-17) கூறுகிறது. ( மால்பு கண்ணேணி ) பாரியின் பறம்பு மலையில் தேனெடுத்தற்காகக்;கானவர்கண்ணேணிகள் அமைத்த செய்தியைக் கபிலர் கவினுறக் கூறுகிறார். மால்புடை நெடுவரைக் கோடு” ( புறநானூறு 105) ( கண்ணேணியையுடைய நெடிய மலையினது சிகரம் ) என்பது கபிலரது கூற்று,

“அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடுங்குன்றம் தேன் சொரியும்மே “என்றும்
“நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகு முன்றிற்
தேர்வீசிருக்கை நெடியோன் குன்றே “ புறம் : 114

( மதுப் பிழிந்து போகடப்பட்ட கவளத்தினது கோதுடைத்தாகிய சிதறிய வற்றினின்றும் வார்ந்த மதுச் சேறு ஒழுகும் முற்றத்தையுடைய தேர்வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை ) என்றும்

‘ஒரு சார் அருவி ஆர்ப்ப வொருசார்
பாணர்மண்டை நிறையப்பெய்மார்
வாக்கவுக்க தேக்கட்டேறல்
கல்லலைத் தொழுகும்” – புறநானூறு : 115

( ஒரு பக்கம் அருவி ஆர்த் தொழுக, ஒரு பக்கம் பாணருடைய மண்டைகள் ( கலங்கள்) நிரம்ப வாக்க வேண்டி வடித்தலால் சிந்திய இனிய கள்ளாகிய தேறல் கல்லையுருட்டி ஒழுகும் ) என்றும் பறம்புமலையின் தேன் வளம் குறித்தும் கானவர் அங்கு தேனெடுத்தது குறித்தும் தேன் சுவை சொட்டக் கபிலர் கூறுகிறார்.

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com