Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle

இரட்டை வேடம் அல்ல இருக்கும் வேடம் எல்லாம் போடுபவர்தான் கருணா(அ)நிதி

ஆல்பர்ட்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்.

கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை வேடம் போடுவதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறீர்கள்! அந்தக் அக்விதையைப் படித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை முதல்வர் அவர்களே!

Karunanidhi இரட்டைவேடம் போடுவதில் உலகத்தில் உங்களை விட சிறந்த நடிகர் யாரும் கிடையாது என்பதை நடைமுறையில் உலகுக்கு நிரூபித்துக்கொண்டுள்ள நீங்கள் அடுத்தவர்களை இரட்டைவேடம் போடுவதாகச் சொல்லுவது மகா அயோக்கியத்தனமானது; மனச்சாட்சி என்பது கொஞ்சம் கூட இல்லாமல் ஈழத்தமிழர்களை தேர்தல் பாடுபொருளாக எடுத்தாளும் உங்களை நாங்கள் புழுவினும் கீழாக மதிக்கிறோம். ஈழத் தமிழர் பிரச்னை அவ்வளவு கேவலமாகப் போய்விட்டது உங்களுக்கு!

உங்கள் கவிதையில்

யார் இரட்டை வேடம் போடுவது?

"களங்களிலே போரில் பிணம் குவியும்! ஈழத்திலோ
கண்ட கண்ட இடங்களிலே தமிழர்கள் பிணங்களாய்க் குவிகின்றார் -
இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும்
இரத்தம் கொட்டும் இந்தப் போரை நிறுத்து என்று
இடித்துக் காட்டியும் இறைஞ்சிக் கேட்டும் குரல் கொடுக்கின்றன..." இந்த உணர்வு உண்மையானதாக இருந்தால் இன்னும் காங்கிரசு அரசு சொல்லும் பொய்யும் புரட்டுக்கும் உடந்தையாக தலையாட்டிக்கொண்டு பதவி வெறி மோகத்தில் நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து கவிதை எழுதிக்கொண்டிருப்பீர்களா?

பதவி என் தோளில் போடும் துண்டு என்று சொன்னார் உங்கள் அருமைத் தலைவர்! நீங்களோ அது என் கோவணம் என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காங்கிரசு அரசுக்கு லாலி பாடிக்கொண்டு, ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை கண்டுகொள்ளாமல் "போரை நிறுத்தச் சொல்லுகிறேன்" என்று கதை சொல்லும் மானங்கெட்ட மத்திய அரசுக்கு தலையாட்டிக்கொண்டு இருப்பீர்களா?

"நம்முடைய நிலைமைகளையும், இலங்கை தமிழர்களையும் நன்றாகவே உணர்ந்துள்ள மத்திய அரசும், சோனியா காந்தியும் எப்படியாவது இலங்கை தமிழர்களுக்கு உதவிட வேண்டுமென்ற எண்ணத்தோடுதான் அவர்களும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்...." என்று மனச்சாட்சியே இல்லாமல் உங்களால் எப்படி எழுதி அறிக்கைவிட முடிகிறது, முதல்வர் அவர்களே? அது மட்டுமா, மனசாட்சியை காங்கிரசிடம் அடகு வைத்துவிட்டு காங்கிரசு கட்சிக்கு நற்சான்றிதழ் வேறு கொடுக்கிறீர்கள்!?

- "அந்த உண்மையான உறவு கொண்ட உள்ளத்துடன்தான் அறிக்கைகள் மூலமாக வேண்டுகோள்களை விடுப்பதோடு நிறுத்தாமல்- இரண்டு நாட்களாக நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் அவசர ஆலோசனை கூட்டங்களை நடத்தியதோடு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோரும் இலங்கை சென்று ராஜபக்சேயை சந்தித்து - இந்திய அரசின் சார்பில் நிலைமைகளை எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். பிரதமர் என்னிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். உள்துறை மந்திரி ப.சிதம்பரமும் சென்னை வந்து என்னைச் சந்தித்து விவரம் கூறிச் சென்றுள்ளார்."

என்ன சொன்னார்கள் பிரதமரும் சிதம்பரமும்?

“திருப்தி அளிக்கிறது. நல்லதே நடக்கும் என்று நம்புவதாகச் சொன்னார். நானும் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.”

கேழ்வரகில் நெய்வடிகிறதென்று காங்கிரசு சொன்னதாம்! அதைக்கேட்டு நீங்கள் புளகாங்கிதப்பட்டு புல்லரிக்க அறிக்கை வேறு?

"வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கையிலே தமிழர்கள் பாதிப்பதாகத் தான் சொன்னதாகவும், போர் நிறுத்தம் பற்றி சொல்லவில்லை என்றும் ஒரு சிலர் கூறுகிறார்களே?” என்ற கேள்வியும் நானே பதிலும் நானேயில்,

"அப்படி யார் சொன்னது? தமிழர்கள் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது. ஆகவே, போரை நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார்கள். டெல்லியில் அறிக்கையே கொடுத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையில் நாங்கள் போர் நிறுத்தத்தை வற்புறுத்தி இருக்கிறோம் என்றே சொல்லியிருக்கிறார்கள்." என்று டெல்லிக்கு புகழாரம் சூட்டி அகமகிழ்ந்திருக்கிறீர்கள்!

"கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளில் தெரியும் என்பார்கள்" காங்கிரசுக்காரன் புளுகு அடுத்தநாளே வெளிச்சத்துக்கு வந்துவிட்டதே!.

"அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இந்திய உயர்மட்டக்குழு நடத்திய பேச்சுக்களின் போது போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்படவே இல்லை என சிறிலங்கா அரச தலைவரின் செயலாளரும் இந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்டவருமான லலித் வீரதுங்க தெரிவித்திருக்கின்றார்."

இப்படிச் சொன்னவர் யாரோ ஒரு ரோட்டில் போகும் சிங்களவன் சொல்லவில்லை; இலங்கை ஹிட்லர் அராசபக்சேயின் செயலர் அய்யா, செயலர்! இப்போது சொல்லுங்கள் முதல்வர் அவர்களே, இதுவும் உங்களுக்குத் தெரியும், எனக்குத் தெரிந்தது போல! தெரிந்தும் நீங்கள் அது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? இந்தப் பதிலைக் கேட்டுக் கொதித்து பிரதமருடன் பேசவில்லை?

ஈழத் தமிழருக்காக உண்மையாகப் பாடுபடும் உத்தம சிகாமணி முதல்வர் அவர்களே உங்கள் பவளவாய் அடைத்துக்கொண்டதா? அல்லது அறிக்கை விடும் கை சுளுக்கிக்கொண்டதா? இதிலிருந்து என்ன தெரிகிறது? காங்கிரசு அரசும், திமுகவும் சேர்ந்தே ஈழத் தமிழர்களை நாளும் கொன்று புதைத்துவருகிறீர்கள். "உயிரோடோ, பிணமாகவோ, ஒரே ஒரு பிரபாகரனை இலங்கை ஹிட்லர் இராசபக்சே கொண்டுவரும்வரை காங்கிரசு அரசு போரை நிறுத்தச் சொல்லாது என்பதுதானே பேருண்மை!?

பிரதமர் அவசரக் கூட்டம்!? போரை நிறுத்த தூதர்கள் விரைகிறார்கள்!? "இதோ போரை நிறுத்த தூதர்கள் பேசிவிட்டார்கள்; இன்னும் 48மணிநேரத்தில் நல்லது நடக்கும்!? இப்படியே எவ்வளவு நாள் சொல்லி நீங்களும் காங்கிரசும் ஏமாற்றப்போகிறீர்கள்? உண்மையிலேயே போரை நிறுத்த மத்திய அரசு விரும்புகிறது என்றால் பகிரங்கமாக பிரதமர் ஏன் அறிவிக்காமல் உங்களிடம் தொலைபேசியில் பேசவேண்டும்?

செய்தியாளர்கள் கூட்டத்தைக்கூட்டி உடனடியாக போரை நிறுத்தவேண்டும் என்று சொல்லியிருக்கலாமே? சிதம்பரம் வெளிப்படையாக இந்தியா போரை நிறுத்தச் சொல்லிவிட்டது என்று சொல்லியிருக்கலாமே? அமெரிக்கா சொல்கிறது, அய்.நா.சொல்கிறது போரை நிறுத்துங்கள் என்று! ஆனால் இந்தியா என்ன செய்கிறது? அமெரிக்கா இலங்கைப் பிரச்னையில் மூக்கை நீட்டி ஏதும் செய்துவிடுமோ என்று உடனடியாக அமெரிக்கா சென்று நீங்கள் இதில் தலையிடாதீர்கள் என்று இரகசியமாக நேரில் வெளியுறவுப்பட்டாளம் போய்ச் சொல்கிறது. அப்படி இருந்தும் நிலைமை அங்கு சரியில்லை என்று அமெரிக்கா போரை நிறுத்துங்கள் என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறது; சர்வதேச நாடுகளும் குரல் கொடுக்கிறது. ஆனால் இந்தியா மட்டும் திரைமறைவு வேலையில் ஈழத்தமிழர்களை கொன்றுபோடுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது.

அதற்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டு நாற்காலியில் சாவகாசமாகச் சாய்ந்துகொண்டு அறிக்கையும் கவிதையும் எழுதிக்கொண்டு இரட்டைவேடம் அல்ல நேரத்துக்கு ஒரு வேடம் போட்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்றும் இழிசெயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பது ஒவ்வொரு தமிழ் உணர்வுள்ள தமிழனும் உங்களை எண்ணி கொதித்துப் போயிருக்கிறான்.

இந்தக் காணொளியைப் பாருங்கள் முதல்வர் அவர்களே! நெஞ்சு பதைபதைக்கிறது;உள்ளம் நடுநடுங்குகிறது. உங்கள் முகம்கூடக் கண்டிராத இந்த வாலிபன் உங்களுக்குக் கொடுக்கும் சாபத்தைப் பாருங்கள். இது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்!

ஈழத் தமிழர்களே இன்று உங்களுக்கு ஒட்டுமொத்தமாக, ஏன் உலகவாழ்தமிழர்களே உங்களை இப்படித்தான் சபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

http://blog.sajeek.com/?p=595

1967-ம் ஆண்டுவாக்கில் பெரியவர் பக்தவத்சலம் கழக தோழர்களின் தேர்தல் பணிகளைப் பார்த்து விட்டு - "சிங்கிள் டீ யைக் குடித்துவிட்டு மணி கணக்கில் பணியாற்ற கூடியவர்கள் தி.மு.க. தோழர்கள்'' என்று பாராட்டியதை மறந்திருக்க மாட்டாய் என்று தேர்தல் வசனப்பொடிகளைத் தூவி திமுக தொண்டனை எழுப்பிவிடுகிறீர்கள்; அன்றிலிருந்து இன்றுவரை ஏழைத் தொண்டனுக்கு சிங்கிள் டீ தான்! ஆனால் பலனோ உங்கள் அருமைக் குடும்பத்துக்கு மட்டும்தானே!

தேர்தல் நெருங்க நெருங்க இப்படியான கதை வசனங்களையும் கவிதைகளையும் எழுதி இந்த வயதிலும் ஏமாற்றவேண்டுமா என்பதை மட்டும் அருள்கூர்ந்து சிந்தியுங்கள்? பல தலைமுறைகளுக்கு வேண்டிய பணங்காசைச் சேர்த்துவிட்டீர்கள். என்ன இல்லை, உங்களிடம்? ஏனிப்படி,வேடங்கள் பல தரித்து உலகையும் உங்களையும் நம்பிய மக்களை கைவிட்டீர்கள்?

செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாய் கடைசி நொடியிலாவது சிந்தித்து குற்றுயிரும்கொலையுயிருமாய், செத்தும் சாகாமல் அரைப்பிணங்களாய்கிடக்கும் ஈழத் தமிழர்களுக்காக ஏதாவது உருப்படியாய்ச் செய்யுங்கள்; உங்கள் காதுமடல்களில் இந்தக் குரல் கேட்குமா? உங்களுக்கு உங்கள் குடும்பம்தான் முக்கியம்; எந்தத் தமிழன் எப்படிப் போனால் என்ன? அந்தத் தமிழனையும் வைத்து நம் குடும்பத்தை எப்படி வளர்க்கலாம்? கோடிகளில் புரளவைக்கமுடியும் என்பது ஒன்றுமட்டும்தானே உங்கள் கனவாக இருக்கிறது!

எங்களுக்கு இந்தத் தேர்தலில் ஒரு நல்ல தலைமையைத் தேர்ந்தெடுக்கலாம் என்றால் அதற்கும் எங்களுக்கு கொடுப்பினை இல்லை; தேர்தலுக்காக மாத்திரமே ஈழப்பிரச்னையை தங்கள் தோளில் தூக்கிவைத்து கூத்தாடும் இரண்டு கழன்ற ஆப்பைகளை வைத்து என்ன செய்ய? தேர்தலில் உங்களுக்கு ஆப்படித்தாலும் தேர்வாகப்போகும் இன்னொரு அவலத்தை எண்ணியும் மனம் குமைகிறது. ஈழத் தமிழர்களுக்கு விடிவே கிடைக்காமல் போகுமோ என்ற அச்சம் வெகுவாகவே எழுகிறது.

- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com