ஸ்ரீனிவாஸ் பிரபு கவிதைகள்
பனிப்போர்
பழகிய பாசம் மறந்துபோய்
கோபம் கட்டவிழ்ந்து
தாக்குதல் தொடங்கும் நேரடியாய்
எதிராளியின் பலத்தையறிந்து
வார்த்தைகள் வெளிப்படும்
அமிலம் தோய்ந்து.
அழுகையின் வெளிப்பாடோடு
சண்டை ஓய்ந்திடும்.
இரண்டொரு நாள்
அற்றுப்போகும் பேச்சு வார்த்தைகள்.
மூன்றாம் நாள் காலை
காபியோடு எழுப்பப்படுகையில்
கோபம் ஓடிப்போய்
கனிவு குடியேறும் புதிதாய்.
வேறொரு காரணத்திற்காய்,
மற்றொரு சண்டை துவங்கும் வரை
எல்லாம் நகரும் அப்படியே...
****
என்ன காரணமாயிருக்கும்
எப்படி சமாளிக்கிறார்களோ
திரும்பி விடுவார்களோ
ஐயோ... பெண் எப்படி
ஊர் பேசுமே
எல்லோரும் உயிருடன் இருப்பார்களா
இது தீர்வு இல்லையே
கோர்வை இல்லாமல் எப்போதும்
எழுகிறது எண்ணம்
வயதுக்கு வந்த
காணாமல் போன பெண்கள் பற்றி ...
கேள்விப்படும்போதெல்லாம்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|