உண்மையின் பதாகையாய் நீ!
சந்திரா மனோகரன்
மேகங்களின் மந்தைக்குள்
புரண்டு வளைவது உன் முகமா?
புயல்களுக்குள் உறைந்துபோன நீ
கல்லறையிலும் இல்லையே!
சொற்களற்ற என் மனசு அங்கேயே ஒதுங்கி
நொறுங்கிப் போயிற்று...
சலனமற்ற சவங்களின் தோட்டத்தில் என்னே நிசப்தம்!
இராட்சதப் பட்சியின் சடசடக்கும் சிறகடிப்பைத் தவிர.
அந்த விளையாட்டு உயிரற்ற சடலங்களுக்காக அல்ல
உன் நினைவுகளைச் சுமக்கும் இதயத்தை
எங்கேதான் ஒளித்துக் கொள்வது?
எழிலிழந்த அப்பிரதேசத்தில் மலர்ப்படுக்கையிருக்குமோ, என்ன...
அசைவற்ற என் ஆன்மாவின் கதவுகளை
எப்போதோ மூடிவிட்டேன்
வாசலில் ஒதுங்கிய தென்றலில் ஓர் அரசியின் ஆரவாரம்!
நிலையற்ற மனம் பதறாய்ப் பறந்து துள்ளுகிறது
இறுகப்பற்றும் என் கரங்களுக்குள் வெற்றிடமே மிஞ்சுகிறது
தூரத்தின் ஒளிவெட்டில் பறவையின் இறகுகள் படபடக்கின்றன
என் இதயத்தையும் நிமிட்டி வனப்பூட்டுகிறது அதே ஒளி
திகட்டும் எல்லாமே அழகு!
எங்கும் வசந்தமே பகட்டென...
தீராக காலங்களில் உலகம் மிதவையாகிப் போகிறது!
ஒரு கனவாய் இறந்துபோன சொற்கள் மீண்டும் துளிர்க்கின்றன
உறக்க விழிகளின் சாம்பல் நிறம் மெல்ல மங்குகிறது
ஒப்பற்ற இசைப்புணர்தலில் ஒரு குழந்தையின் உருவொளி!
மட்டற்ற பகிழ்வில் இல்லம்துறந்து...
உலகம் மறந்து...
மீண்டும் கல்லறைச் சுவர்களில்
நடைபயிலும் அணில்குஞ்சாய்...
மூடுபனிக்குள் வெடவெடத்துப்போய்
நடுநிசிப் பரதேசியாய்...
யாரோ ஒரு புலவன் அமளிபண்ணும் அலைகளாய்
எழுதித் தீர்க்கிறான்
நெருப்புத் தெறிக்கும் வரிகளில்
நிழல் உருவழிந்து போகிறது
எந்தக் கலைஞனுக்கும் புலப்படாத ஒரு மெய்ம்மை
எனக்குள் தீவிரிக்கிறது
இனியாவும் கலையும்...
நியாயத்தின் புருவம் விரியும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|