பாரதி-125
(சாகித்ய அகாதமியின் பாரதி - 125 மூன்று நாள் தேசிய விழாவில் வாசிக்கப்பட்ட சில கவிதைகளின் தமிழாக்கம்)
ஜம்பனா அமிரசிந்தா (தெலுங்கு)
பெட்ரோமாக்ஸ் சுமப்பவர்கள்
யார் இவர்கள்? யார் இவர்கள்?
அவர்கள் எங்கே போகிறார்கள்
காலம் காலமாக, இன்னும்
தலையில் விளக்குகளை சுமக்கிறார்கள்
இவைகளுக்கு அறியாமல் இவைகளுக்கு மற்றும் அவைகளுக்கு
அவர்களின் சொந்த நிழலைக்கூட.
புகழ்பெற்ற கவிஞர்களும்
இந்த நாடோடி கீதங்களை மறந்து விட்டார்கள்
பெட்ரோமாக்சுகளின் சூட்டை தலையில் சுமந்து
பசி வயிறுகளில் எரியும் நெருப்பு
வாழ்க்கை முழுவதும் கொதித்து எரிந்தும்
ஆவியாகிக் கொண்டு
பகலும் இரவும் அவர்களின் வயிறுகளில்
பசி என்னும் பிள்ளையை பிரசவித்து
செல்வந்தர்களும், கொள்ளையர்களும்
தேர்தல் வெற்றியாளர்களும்
விளக்கேந்துவோரின் வெளிச்சத்தில்
பளபளக்கிறார்கள்
யார் இவர்கள், யார் இவர்கள்
வெற்றுக் கண்களுக்குத் தெரியாதவர்கள்
பெட்ரோமாக்ஸ் சுமப்பவர்கள் இருட்டில்
இருட்டிலே இருந்தும் எப்போதும்
இருட்டில் மெதுவாக மூழ்கியும் புதைக்கப்பட்டும்
எப்போதும் மறைக்கப்பட்டவர்களாய்
(தமிழில் : சு. சுபமுகி)
சேமிக்கமுடியாதவை பற்றி
திலீப் ஜாவரி (குஜராத்தி)
மரங்களைப் பற்றிக் கேட்டபோது
ஒருவன் பழைய சுவடிகளிலிருந்து மந்திரங்களை முழக்கினான்
ஒருவன் ஒரு கவிதை வாசித்தான்
ஒருவன் ஓர் ஓவியம் கொண்டு வந்தான்
ஒருவன் பூகோள விபரக் குறிப்புகளாலான
பெரிய புத்தகத்தை இழுத்து வந்தான்
ஒருவன் காடுகள் காடுகள் என்று உளறினான்
ஒருவன் உரத்த குரலில் அழுதான்
ஒருவன் கவனமாக புன்னகையுடன் போன்சாய் பூச்சாடி அமைத்தான்
ஒருவன் குழியன்றை தோண்டி அவனாகவே நட்டான்
பிறகு அவனின் கிளைகளில் பறவைகள் கூடுகள் கட்டின
ஆரவாரம் செய்தன கழிவுகளைப் போட்டன
அதன் பொந்துகளை எலிகளும், பாம்புகளும்
வீடாக்கிக் கொண்டன
மற்றும் அதுபோல மிருகங்களும்
மண்புழுக்கள் பட்டாம்பூச்சிகள் மரப்பூச்சிகள்
கொட்டும் தேள், எறும்பு, மரக்கொத்திகளும் முற்றுகையிட்டன
மரத்தைச் சுற்றி வளரும் கொடிகள்
குளிர் ஒளி காற்று மழை விடாது
இரவையும் பகலையும் இம்சித்தன.
பல வருடங்கள் கழிந்து விட்டன
மரத்தைவிட
மனிதனாக இருப்பது
சிரமமானது, அர்த்தமற்றது என்பதை அவன்
உணர்வதற்கு முன்பே.
பிரபஞ்ச கவியின் கால முத்திரை
விஜயகுமார் குனிசேரி (மலையாளம்)
1. இருண்டகால கருவறையிலிருந்து
உயரும் ஒளிக்கவிதை
மகாவானக் கீற்றிலிருந்து
இறங்கிவந்த ஒலிவிதை
பெரும்பிரளய கனல் கடலில்
அமர மகா விருட்சம் -
செந்தமிழ் கிளைகளில் பறந்திறங்கிய
கருங்காகங்களும் சிட்டுக்குருவிகளும்
யானைகொத்திப் பறவைகளும்
பாரதியின் மாய ஸ்பரிசத்தில்
தேன்தமிழ் குயில்பாட்டு!
2. பச்சைமானுட கவியின் காயம்பட்ட ஆத்மா
சூன்ய ஆகாசத்தில் செயற்கைகோளாக சுழன்றது.
அவனின் பருந்துக்கண்
பூவுலக செடி, கொடி, பறவை
மிருக, மனித, பூச்சி, புழுக்களை கண்ணுற்று
செந்நீர் கொட்டும் வைரவாக்காய்
உலக மனிதநேய கவிப்பாட்டாய்
உருவம் கொண்டது!
3. பெருச்சாளி கவிஞர்களும்
பச்சோந்தி கவிகளும்
வெளிஆதிக்க ஒற்றர்களும்
இரகசிய பதுங்கு மடைகளில் உண்டு கொழுத்தனர் -
பிரபஞ்சகவி கருங்காளியின் திரிசூலமெடுத்தான்
அந்நிய சக்திக்கு எதிராக பராசக்தி!
4. அகக்கனலில் சொந்தப்பூணூல் எரித்த
கலகக்கார மகாகவி
பஞ்சமர்க்கும் பவித்திர நூல் அணிவித்தான்
ஜாதிப்பிரஷ்ட்டு கசப்பு நீர்ச்சுழலில் மூழ்கினான் -
கவிஞனின் கனல் முத்திரை பதித்த மண்ணில்
இன்றும் ஜாதிக்கொடுமையின் பெருஞ்சுவர்
தலித் மக்களுக்கு மகாக் கொடுமை!
5. பாரதியின் ஒரு கண் சூரியன் - மறுகண் சந்திரன்
எல்லை அடையாளக்கோடில்லா ஓருலகம்
தங்க பட்டையும் வெள்ளிசங்கிலியும் கழுத்தில் கட்டிய
அடிமை நாய்கள் இல்லாத உலகம்
மனித ஏற்றத்தாழ்வும் பணாதிகாரப் பிசாசும்
இல்லாத உலகம் -
தனியரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
6. வெளியாதிக்க வெள்ளை கருமேகம் சூழ்ந்த ஆகாசத்தில்
சுதந்திர இடிமின்னல் நாதமாக
காலத்திற்கு முன்னே திக்கெட்டும் முழுங்கிய கவி -
காலத்தை வென்ற கரும்பாறை கனல் சிற்பம்
ஜனகண அதிகாரத்தின் ஐந்தாவது காவல் தூண் -
ஆடுவோமே - பள்ளு பாடுவோமே;
ஆனந்த சுதந்திரமடைந்துவிட்டோமென
7. ஆடலும் பாடலும் முடித்து அரங்கத்தைவிட்டு
மாயன பூமியை நோக்கி மகாப்பிரயாணம்
சுடலையில் எரிந்த மகாகாவியம்
சாட்சியங்களாக பதினாலுபேர் மட்டும்
அவர்கள் மனிதர்களல்ல...
ஈரேழு பதினாலு உலகின் பிரதிநிதிகள்!
8. இந்த இருண்டகாலம் -
உலகமயமாதல் என்னும் மகாமாரியின் கொடுங்காலம்
எழுதுகோலாய் உயிர்த்தெழுந்த பாரதியின்
பராசக்தி பிரளயகால தாண்டவம் -
எந்த பெருங்கழுகு
இந்த பூவுலக கருமுட்டையை
கொத்திவிழுங்க அடைகாக்கிறது?
எந்த சாத்தான், சைத்தான், கலிபுருடன் ஆகிய மூவர் கூட்டணி
எந்த வம்சத்தின் மகாபலிக்கு
கொள்ளிவைக்க காத்திருக்கிறது?
எந்த தீவிரவாத சக்திகள்
உலக அமைதியை பதுங்கு குழிகளில்
அடக்கம் செய்ய காத்திருக்கிறது?
எந்த இயற்றை சுற்றுச்சூழல் அழிவு சக்திகளின் கைவாள்
பிரபஞ்சத்தாயின் சிரசறுக்க முனைகிறது?
மனித குலுத்தை வேரறுக்கவிருக்கும்
அணு, இரசாயன நோய்க்கிருமி ஆயுதங்கள் உள்ள
பதுங்கு அறைகளின் திறவுகோல்
எந்த வெறிபிசாசின் கைகளிலிருக்கிறது?
எந்த பிரளயத்தின் முடிவிலும்
ஒரு வெண்புறா வானத்தில் வட்டமிட்டு
பசுமை கண்டடையவே செய்யும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|