குறும்பட விழா
“புதிய சமூக சினிமா என்பது இக்கால கட்டத்தின் அவசியமாகிறது. பல்வேறு வகையான ஆதிக்கங்களை உடைத்தெறிந்து சமூகத்தைத் தேர்வு செய்யும் படங்கள் வருவதற்கான அறிகுறிகளாய் சமீபத்திய தமிழ்ப் படங்கள் வர ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமானது. திரை இயக்கத்தின் தேவையை இன்று முற்போக்கு முகாம்கள் உணர்ந்திருக்கின்றன” என்று எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் திருப்பூரில் கனவு, சேவ் இணைந்து நடத்திய குறும்படப் பட்டறையின் முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் தெரிவித்தார். (ஜுலை 13, 14, 15 : 2007) திரைப்பட இயக்குநர் எம். சிவக்குமார் திரைப்படம் என்னும் அற்புத மொழி உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை மீறி படைப்புகளுடன் வியாபித்திருப்பதைப் பல வெளிநாட்டுத் திரைப்படங்களைச் சுட்டிக் காட்டிப் பேசினார்.
“டிஜிட்டல் தொழில்நுட்பம் திரைப்படமெடுப்பதினை ஜனநாயகப் படுத்தியிருக்கிறது. திரைப்படத்தின் இலக்கணங்களைத் தொழில்நுட்பம் மீறி செயல்படுவதில் பல அற்புதப் படைப்புகள் வந்துள்ளன. திரைப்பட வடிவம் உடைந்து, புது புது பரிணாமங்களைத் தொட்டுவிட்டது” என இயக்குநர் ஹரிஹரன் இந்திய மற்றும் உலகப் படங்களை முன்வைத்துப் பேசினார். சுப்ரபாரதிமணியன், “வெகுஜன படைப்பாக்கங்களிலிருந்து மாற்றுத் திரைப்படத்திற்கான அக்கறை விரிந்து வளர்ந்து வருவதைப் பற்றியும், மாற்றுத் திரைப்பட முயற்சிகள் மாற்று கலாச்சாரம் வேண்டுவோரின் அக்கறையாக வளர்ந்து வருவதையும்” தன் தொகுப்பு உரையில் முன்வைத்தார். திரைப்படத்தின் முக்கிய பாகமான எடிட்டிங்கின் வலிமை பற்றியும், தமிழின் பல முயற்சிகளில் அடையாளம் காணப்பட்டிருக்கும் பலமான முயற்சிகள் பற்றியும், இலக்கியப் படைப்புகள் திரைப்பட ஆக்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பதையும் பற்றி புவியரசு பேசினார்.
நடிப்புக்கலை குறும்பட முயற்சிகளின் ஓர் அங்கமாக இருப்பதைப் பற்றி சுரேசுவரன் வகுப்பு நடத்தினார். ஸ்டன்ஸ்லாஸ்க்கி கோட்பாடுகளின் நடைமுறைக்கு நடிப்பு தரும் ஆக்கம் பற்றி விவரித்தார். ஆவணப்படங்களின் தயாரிப்பிற்கான நடவடிக்கைகளில் தகவல் சேகரிப்பும், களப்பணிகளின் அவசியமும் பற்றி எம். சிவகுமார் விவரித்தார். புகைப்படக்கலையில் ஒளிநிழல் அம்சங்கள் ஒளிப்பதிவுத்துறையின் அடிப்படைகளாக விளங்குவதை பற்றியதன் மையமாக கலை இயக்குநர் செண்பகத்தின் உரை இருந்தது,
திரைக்கதையின் அம்சங்கள் நிலைத்த நீடிப்புக் காட்சிகளுக்காக எடிட்டிங்குடன் ஒத்துழைப்பதை இயக்குநர் லெனினின் வகுப்புக் கருத்தாக அமைந்திருந்தது. நாடகவியலாளர் பிரளயன் காட்சிகளின் தொடர்வமைப்பில் வசனம் பங்கு பெறுவதை விளக்கிப் பேசினார். இயக்குநர் தாண்டவக்கோன் குறும்படங்களின் முயற்சிகளில் இளைஞர்களின் படைப்பாக்கத் திறன் வெளிப்படுவதை விளக்கினார். கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகளில் சொர்ணபாரதி, தமிழ் மதி, செண்பகராஜன், அருணாதேவி, அதியன், மணிமேகலை நாகலிங்கம், வித்யா, சிறீ.நான்.மணிகண்டன், புதுவை யுகபாரதி, சுந்தரமுருகன் உட்பட பலர் பங்கு பெற்றனர். விவாதங்களில் குறும்பட இயக்குநர்கள் நிறைமதி, ராம்தேவா மற்றும் டாக்டர் ரேவதி, உதயசெல்வி, நெல்சன் மண்டேலா, பாரதிதேவராஜன் உட்பட பலர் பங்கு பெற்றனர்.
சேவ் அமைப்பின் இயக்குநர் அலோசியஸ், மேலாளர் ரவீந்திரன், குறும்பட இயக்குநர் ரவிகுமார், தாண்டவக்கோன், சுப்ரபாரதிமணியன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளில் பங்கு பெற்றிருந்தனர். லெனின் பெயரிலான குறும்பட விருது அறிவிக்கப்பட்டது. திருப்பூர் கனவு திரைப்பட இயக்கம், சேவ் சமூக சேவை நிறுவனமும் இணைந்து இந்த மூன்று நாள் நிகழ்ச்சிகளை நடத்தின.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|