சு. வெங்குட்டுவன் கவிதைகள்
காஞ்சிமாநதி..
இறந்துகொண்டிருக்கும்
பேருயிர் ஒன்றின்
கண்களென
சலனமற்றுக் கிடக்கிறது
சாயம் அருந்திய நீர்
அனிச்சையாய்க் கையுயர்ந்து
மூக்கைப் பிடித்துக்கொள்ள
அவசரமாய்க் கடக்கின்றனர்
பாதசாரிகள்
மண்பெற்ற மைந்தர்களின்
சொகுசு ஊர்தியெலாம்
ஒலியெழுப்பி விரைகின்றன
ரத்தம் உறிஞ்சி
பறக்கும் கொசுக்களாய்
இரக்கமற்று
சிதைக்கப்பட்ட ஆற்றின்
பாலத்துமேல் ஓர்முடவன்
யாசித்தபடியிருக்கிறான்
இரக்கத்தை
நதிநடுவே பாறைமுனை
அமர்ந்திருந்த கொக்கு
பறந்து மேலெழும்பி
விண்ணோகிக் கொண்டிருக்கிறது
பிரிந்துசெல்லும் உயிர்போல.
கதை சொல்லியின் கதை
தாயின் ஊருக்குச் சென்றுவந்த
முந்தைய நாட்களைப் போலவே
மகளின் ஊருக்குப் போய்த்திரும்பும்
இன்றைய நாட்களும்
ஒரு கதைசொல்லி ஆக்கிவிடுகிறது
அம்மாவை.
சற்றே மிகைப்படுத்தலும்
பெருமிதமுமான வார்த்தைகளில்
பயணானுபவங்கள் கதைபோல் மலர
நேரம் குறித்தான பிரக்ஞையற்று
கேட்பார்கள்
உடன் களையெடுக்கும் பெண்கள்.
வெகுநேரம் கழித்துவந்த
12ஏ பேருந்தும்
பரமசிவன் படம் எடுத்துத்தந்த
சோசியக் கிளியும்
ஒரு கண்ணில் பூ விழுந்த
நடைபாதை வியாபாரியும்
காட்சிகளாய் விரிய
தொடர்ந்தபடியேயிருக்கும் கதை
சுவராசியமாய்
சீட்டுச்சேர்ந்த பணத்தில் அக்கா
மாவரைப்பான் வாங்கியிருப்பாள்
சீதனமாய்ப்போன பசு
கிடாரிக்கன்றை ஈன்றிருக்கும்
சஷ்டி விரதம் பூண்டு
பழனிக்குப் போகிறார்கள்
மாமனார் மாமியார் பரவாயில்லை
கொழுந்தனக்கு மில்வேலை
பெண்தேடி வருகிறார்கள்
என்றெல்லாம் போகும் கதை
சட்டென்று நின்றுவிடும்
ஆழ்ந்த நிசப்தத்தில்
துணுக்குற்ற பெண்கள்
தலைநிமிர்ந்து பார்க்க
அழுதுகொண்டிருப்பாள்
அம்மா
ஞாபகத்திற்கு வந்திருக்கும்
வரும்வழியில் கண்ட
தலைப்பேரனின்
சின்னஞ்சிறு குழிமேடு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|