குலசேகரன் கவிதைகள்
தேடலால் நிறையும் நிலம்
நான் உறங்கும் படுக்கையில்
மூடிய போர்வையைக் களைந்து
அவன் இரகசியமாக வெளியேறுகிறான்
இரவின் விளக்கை அணைத்து
அடியெடுக்கும் பாதங்கள் நகர்கின்றன
மின்னும் நட்சத்திரம் நோக்கி
பரிசளிக்க உகந்த நாணயங்களால்
அவன் கைகள் சப்திக்கின்றன
சாகசமூட்டும் பாதைகளில் சறுக்கி
உச்சங்களைத் தேடி விரைகிறான்
என் துயரத்தின் குகையிலிருந்து
பூக்கும் நிலவொளிக்குச் செல்கிறான்
வெறுமை பூண்ட சுவர்களிலிருந்து
குதூகலத்தின் காட்டில் அலைகிறான்
சலிப்பின் கூட்டை நீக்கி
விரியும் சிறகுகளால் பறக்கிறான்
பழமையின் நெடி வீசும்
நினைவை கற்பனையால் நிரப்ப
வெவ்வேறு பாதைகளில் நடக்கிறான்
வெறும் கைகளோடு திரும்புவது
விழியின் ஓரங்களில் தெரிகிறது
அவன் விடியலில் நுழைகையில்
நான் கனவென மயங்கியிருக்கிறேன்
குருதியின் சித்திரம்
நான் தரையெங்கும்
இரத்தம் சிந்த நடக்கிறேன்
தீண்ட முடியாத பொருட்களால்
தனிமை மூலையில் ஒதுங்குகிறேன்
தலைக்குள் இடிகள் மோத
நாக்கு கூர்மையாக நீள்கிறது
பைத்தியம் பிடித்து சொற்கள்
காற்றில் ஏறி ஊர்கின்றன
வாடை படாத துரத்தில்
அனைவரும் மங்கி மறைகிறார்கள்
ஆழமான காயத்தின் குருதி
தொடையில் நெருப்பாக கசிந்து
கழிவுப் பாதைகளின் அடியில்
சிவந்த அந்தியாக சுழிக்கிறது
என்னோடு வீடும்
மூழ்கி இறக்கத் தொடங்குகிறது
நான் அவிழ்த்த மலர்களும்
அறுத்தெடுத்த இதயமும்
பிய்த்தெறிந்த பாலுறுப்புகளும்
அலைகளில் மிதந்து செல்கின்றன
நீண்ட நதிக்கரையில்
என் உடல் ஒதுங்க
காலை நனைத்துக் காத்திருக்கிறேன்,
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|