ம. அருணாதேவி கவிதைகள்
குற்றம்
வெற்றிலை போட்டு
நாக்கு சிவக்கிறதா
என்று பார்க்கிறபோதெல்லாம்
வீரு திம்முவின் ஞாபகம்தான் வரும்.
அகத்தி மரத்தில்
படரும் வெற்றிலைகள்.
தீட்டான பெண்களோ
பழி சுமக்கும் பெண்களோ
வெற்றிலைக் கொடியைத்
தொடுவதும் குற்றம்
அங்க வேலைக்கு வருவதும்.
வீரு திம்முவுக்கு கருக்கலைந்து
உதிரம் கொட்டியது
வெற்றிலைத் தோட்டத்தில்தான்.
வீரு திம்மு விரட்டப்பட்டாள்
பின்னர் வெற்றிலைத் தோட்ட வேலைக்கு
அவள் திரும்பவேயில்லை.
வீரு திம்மு வெற்றிலை போட்டு
நாக்கு சிவந்ததை
நான் பார்த்ததே இல்லை.
தகவல் உலகம்
சினிமா, தொலைக்காட்சி
பத்திரிக்கைகள்
இண்டர்னெட், பிராடு பேண்ட்
வெளியில் தகவல்கள்
கொட்டிக் கிடக்கின்றன
படிக்க, அள்ள நேரமில்லை
ஆனால்வீட்டில்
25 வருடத் தாம்பத்திற்குப் பிறகும்
அம்மாவுக்கு அப்பாவுக்கு
என்ன வர்ண சட்டை பிடிக்கும்
என்பது தெரியவில்லை
அப்பாவுக்கு அம்மாவின் அபூர்வ முத்தம்
பிடிக்காததற்கு காரணம் தெரியவில்லை
பிறந்த நாளிலோ, திருமண நாளிலோ
வாழ்த்து சொல்லத் தெரியவில்லை
வெளியில் இருப்பவர்களின்
சட்டை வர்ணம்
பிறந்த தேதி, திருமண நாள்
இதெல்லாம் அத்துப்படி
சினிமா நடிகர்கள், நடிகைகள்,
அரசியல்வாதிகள் உட்பட
இது தகவல் உலகம்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|