கடவுளின் மீட்பன்
ஆதவன் தீட்சண்யா
சைரன் அலறப் பதறியோடும்
ஒரு தீயணைப்பு வண்டியின் மணியோசை
கர்ப்பகிரஹத்தையோ தேவாலயத்தையோ
நினைவுபடுத்துமானால்
கடவுளைப்பற்றி அறிந்த அளவுக்கு
உனக்கு மனிதர்களைத் தெரியாதென
குறித்துக் கொள்வேன்
ஒருவேளை
நீயே கடவுளாய் இருக்கும் பட்சம்
உனக்கு மனிதர்களைப் பற்றித்தான் தெரியுமேயொழிய
சடசடத்தெரியும் நெருப்பையும்
கருகி வெடிக்கும் உயிர்களையும்
நீ ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று
தீர்ப்பளித்துவிடுவேன்
நல்வாய்ப்பாய்
கடவுளாகிய நீயே வெந்து கொண்டிருப்பாயானால்
அப்பெருந்தீயின் சுடரொன்றில்
காதோரம் செருகி வைத்திருக்கும்
துண்டு பீடியை சாவகாசமாய் பற்ற வைத்துக் கொண்டு
தகிப்பின் உக்கிரத்தை போதிப்பேன் உனக்கு
(இவ்விடத்தில் அடுப்பங்கரை / நந்தன் /
வெண்மணி / இராக் வீதிகளை
நினைவூட்டுவது எனது நோக்கமல்ல)
ஆனால்
அப்போதாவது
கடவுள் என்ற பீடம் விட்டிறங்கி
ஒரு உயிரைப்போல் கதறுவாயானால்
வென்னீரை ஊற்றினாலும் தீயணையுமாதலால்
என் மூத்திரத்தையும் எச்சிலையும் தெளித்தேனும்
நெருப்பையணைத்து மீட்பேன் உன்னை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|