ஐக்கூ....ஐக்கூ....ஐக்கூ... இரா தமிழரசி.
பனையோலை நுங்கு
கொந்தளிக்கும் கடலிலும்
மையம் கொள்ளும்
புயல்
எண்ணெய் இல்லாவிடில்
திரியையே தின்னும்
விளக்கு
நன்கொடை எனும்போது
நம்பெயர் அதிலெதற்கு
விலாசமற்றது பூவின்தேன்
தேவைப்படுகிறது எதிர்முனைகள்
ஒளியின் பெருமையறிய
உதவுகிறது இருள்
நாணைவிட்டு வெளியேறி
தைக்கும் இடமறியாமல்
தடுமாறும் அம்பு
ஓட்டுவது கடினம்
வேகவேறுபாடுள்ள
மாடுகள் பூட்டிய வண்டி
ஒதுங்கிக்கொள்ள
இடம் கொடுத்தேன்
உள் நுழைந்தாய் ஒட்டகமாய்
அதேகுரல் அதேமொழி
அலுக்காத உணவாய்
அன்பு
நிறமும் வடிவுமா நிர்ணயிருக்கும்
கருப்பாய் கணுக்களோடிருப்பினும்
இனிப்பாய் கரும்பு
நீ. ண். ட தொலைவிலிருந்தும்
நீந்தி வந்து கதவு தட்டும்
நினைவலைகள்
முரட்டுத்தனம் மோசமோ?
பனையோலைக்குள்
பத்திரமாய் நுங்கு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|