உலகக் கவிஞர் வரிசை: ஜெரார்டு மான்லே ஹாப்கின்ஸ் (1844-1889)
கிறிஸ்துவ பாதிரியாராகவும் சிறந்தகவிஞராகவும் விளங்கிய ஜி. எம். ஹாப்கின்ஸ் எசெக்ஸின் ஸ்டிராட்பார்டில் எட்டுக்குழந்தைகளுக்கு மூத்தவராக பிறந்தார். இவரது தந்தை லண்டன் நகரில் கடல் பயணக் காப்பீட்டுத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இவரதுகுடும்பம் 1852ல் ஹாம்ப்ஸ்டெட்க்கு குடிபெயர்ந்தது. ஹாப்கின்ஸ் ஹைகேட் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். அங்கு அவர் கலைத் திறமையைப் பெற்றார். தனது ‘தி எஸ்கோரியஸ்' என்ற முதல் கவிதைக்காக பரிசு பெற்றார். 1863ல் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் பிரபல மேதை வால்டர் பீட்டரிடம் மாணவனாக பயின்றார் இந்தக் காலக் கட்டங்களில் ‘ஹெவன் ஹெவன்' மற்றும் ‘தி ஹாபிட் ஆப் பர்பெக்ஷன்' போன்ற புகழ்பெற்ற கவிதைகள் உட்பட பல்வேறுக் கவிதைகளை எழுதினார்.
தனது பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1866ல் கத்தோலிக்கராக மதம் மாறினார். தனது பட்டப் படிப்பு முடிந்தவுடன் ரோய்ஹம்டன்னில் 1870 வரை இருந்தார். பின் ஸ்டோனிஹர்ஸ்டில் (18701873) மறைக்கல்வி கற்றார். 1877ல் கத்தோலிக்க பாதிரியாராக பட்டம் பெற்றார். 1875, டிசம்பர் மாதம், டெவுட்ஸ்லாந்தில் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் பயணிகளிடம் மத போதனைகள் செய்ய வேண்டி பணிக்கப்ட்ட பிரான்ஸ்சிய கன்னியாஸ்திரிகள் ஏழு பேர் பலியாகினர். இந்த செய்தி ஹாப்கின்ஸ்க்கு கடுமையான மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. இதன் பாதிப்பில் ‘த ரெக் ஆப் தி டெவுட்ஸ்லாந்து (1876)' என்ற அமரத்துவமான கவிதையை எழுதினார். இந்தக் கவிதையை கிறிஸ்தவ பத்திரிக்கைகள் வெளியிட மறுத்து விட்டன. வாசிப்பவர்களுக்கு இது மேலும் மனக் கஷ்டத்தை அளிக்கும் என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.
1877ல் அவர் புனிதக் கட்டளை வழங்கும் படிப்புகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்த காலங்களில் அவர் கவிதைகளில் சிறந்த மற்றும் அவரது திறமை வெளிப்பட்ட கவிதைகளை எழுதினார் அவைகளுள் ‘தி விண்டோவர்' மற்றும் ‘பையிட் பியுட்டி' குறிப்பிடத்தக்கவை. 1884ல் டப்ளின் நகரில் கிரேக்க மொழி பயிற்றுவிக்கும் பேராசிரியராக பல்கலைக் கழகத்தில் பணிக்கு சேர்ந்தார். இங்கு கடுமையான பணிச் சுமையாலும் நிர்வாகப் பொறுப்புகளாலும் மனச் சோர்வும் உடல் நலக்கேடும் எற்பட்டது. இந்தப் பொழுதுகளில் பயங்கரமான கவிதைகள் என்று குறிப்பிடப் பட்ட ‘டெரிபல் சோனெட்ஸ்'களை எழுதினார். அவைகளுள் ‘காரியன் கம்பர்ட்' மற்றும் ‘நோ வர்ஸ்ட், தேர் இஸ் நன்' போன்றவைகள் உச்சமாக கருதப்பட்டது. தனது கடைசி காலங்களில் ‘ஹாரி புளாப்மேன் தி நேச்சர் இஸ் அ ஹெராக்கிளிட்டியன் பயர்' மற்றும் ‘தோ ஆர்ட் இன்டீட் ஜஸ்ட லார்டு' (மார்ச் 1889) ஆகிய கவிதைகளை எழுதினார்.
டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப் பட்டு ஜூன் மாதம்1889ம் ஆண்டு மரணம் அடைந்தார் தனது இறுதி காலம் வரை இவர் தனது கவிதைகளை புத்தகமாக்கி வெளியிடவே இல்லை. ஆனால் இன்றும் அவரது கவிதைகள் உலகக் கவிஞர்களின் இதயப் புத்தகங்களில் அழிக்க முடியாதபடி அச்சாகி உள்ளது.
சொர்க்கம் துறைமுகம்
வசந்தங்கள் தவறாத
கடுமை கூர்மையற்ற
ஆலங்கட்டிகள் பறக்காத
லில்லி பூத்திருக்கும்
பசுமை வயல்வெளிகளுக்கு
போக ஆசைகொண்டிருந்தேன்
பனிப்புயல்கள் வராத
பசுமை பொங்கிய
துறைமுக அமைதியில்
கடலின் பேரிரைச்சல் கடந்த
நிலைக்கு வேண்டினேன்.
அந்தக் குழந்தை அந்த மனிதனுக்கு தந்தையாகும்
அந்தக் குழந்தை அந்த மனிதனுக்கு தந்தையாகும்
அவன் எப்படி தந்தையாக முடியும்
அவனது வார்த்தைகளில் வன்மம் இருக்கிறது.
மழலையை பறிப்பது அவனது குணமாகிறது
அதனால் குழந்தை அந்த மனிதனுக்கு
தந்தையாகிறது இல்லையா;
கவிஞன் எதையாவது எழுதிவிட முடியுமா?
மனிதன் அந்தக் குழந்தைக்கு தந்தையாவானா
வார்த்தைகளின் வன்மம் இருக்கிறதே
குழந்தை அந்த மனிதனுக்கு தந்தையாகும்
தமிழில் : ஆனந்த செல்வி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|