நூல் மதிப்புரை
காதலின் பன்முக தரிசனம் அன்பாதவன்
பொதுவாக காதல் கவிதைகள் எனில் ஆண்களை மையமாகக் கொண்டே எழுதப்படுவது தான் இதுகாறும் வரலாறு. ஆனால் இது வரலாறுகளை புரட்டிப்போடும் நூற்றாண்டு. இதுவரையில் மூலையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த தலித்கள், பெண்கள் ஆகிய நிராகரிக்கப்பட்டவர்களின் குரல்கள் ஒளிக்கும் காலமிது.
தமிழில் பெண் படைப்பாளிகள் பெருகி வரும் சூழலில் புலம் பெயர்ந்த கவிஞரான நளாயினி காதலின் பன்முக தரிசனம் காட்டும் கவிதைகளைத் தொடுத்து நங்கூரம் எனும் நூலாக்கி தந்துள்ளார்.
"நங்கூரம் கவிதைத் தொகுதி பலவகையான காதலைச் சொல்லிச் செல்கிறது எழுத்துலக சித்தாந்தங்கள் எல்லாம், காதல் மொழிகள் ஆண்களுக்கே உரியதாக அவர்களால் மட்டுமே உச்சரிக்கும் வாசகங்களாக அதனை மாற்றும் பயனாகவே எனது காதல் கவிதைகள் ஆரம்பமானது எனலாம் என முன்னுரையில் தனது கவிதைகளின் ஊற்றுக் கண்களை பதிவு செய்யும் நளாயினியின் கவிதைகள் யாவும் மெல்லிய மொழியில் பேசுகின்றன.
ஒவ்வொரு கவிதையும் காதலின் வேறு வேறு பிரச்சனைகளை விவாதிக்கினறன. தனிமைத் துயரம் முதல் தற்கொலை முடிவு, இனப்பிரச்சனை பிரிவின் வேதனை என்கிற பாலின ஈர்ப்பு என பல்வேறுத் தளங்களில் நங்கூரமிடுகின்றன நளாயினியின் கவிதைகள்.
அழகிய சொல்லாட்சியும் வர்ணனைகளும் வாசிப்பவரை உற்சாகங் கொள்ளச் செய்யும். காதலுக்கான புதிய வரையறைகளை பதிவு செய்கின்றன இந்த வரிகள்:
"காதல் என்றால்
என்னவென்று தெரியுமா
உனக்கு?
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பது தான்”
"காதல் போயின் சாதல்'' என்பது பழைய வரலாறு. "காதல் போயினும் வாழ்தல்'' என்பது புதிய வாழ்வு முறை. ‘இவர்கள் யார் தடுக்க' கவிதை இதைத்தான் பதிவு செய்கிறது. சமூக எதிர்ப்பு கண்டு தற்கொலைக்குத் தூண்டு காதலனுக்கு மன தைரியமூட்டி வாழச் சொல்கிறாள் ஒரு காதலி
"இந்த இயற்கை எல்லாம்
நம்மை வாழ்ச் சொல்லும் போது
இவர்கள் யார் தடுக்க''
நூல் முழுக்க பெண் மையப் பார்வையில் புனையப்பட்டிருப்பதில் காதல் குறித்த கவிதை வெளிப்பாடுகளில் புதிய சிந்தனைகள் விரவிக் கிடக்கினறன.
காதல் எப்போது அரும்பும் ? யாருக்கு தெரியும் அது ஒரு மாயச்சூழல்
"நீகுளித்து விட்டு
தலைமுடியை உதறிய
நீர்த்துளியில் பூத்ததுதான்
உன் மீதானக் காதல்''
‘என்னைக் கைது செய்யப் போகிறாய்' கவிதையாயில்லாமல் ஒரு பாடலாய் மலர்ந்திருப்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
வேறு வேறு பருவங்களின் காதலின் உணர்வுகள் காட்டும் புதிய அனுபவங்களை மிக அருமையாக பதிவு செய்திருக்கும் இந்நூலில் சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
பக்கம் 16ல் வெளியாகி உள்ள ‘காத்திருப்புகள்' கவிதை பக்கம் 30ல் ‘இன்ப வலியாக' வெளியாகி உள்ளது. அதே போல் பக் 29ல் ‘பூஜிக்கத் தொடங்கி விட்டேன்' கவிதை மீண்டும் பக் 63ல் ‘உதடுகளுக்கு காதல் கடிதம்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.
தரமான படைப்புகளுக்கு உத்தரவாதம் கூறும் உயிர்மையின் தயாரிப்பு தானா இது...? சில கவிதைகளில் வசன நெடி வீசினாலும் ஈழப் போராட்ட பின்னணியில் எழுதப்பட்ட ‘தேதி ஒன்று குறிங்கையா' மற்றும் ‘காத்திருப்போம்' கவிதைகள் ஈழத் தமிழில் எழுதப்பட்டுள்ளது நலம்.
கவிதையும் வாசிப்பவரை ஈர்ப்பவை. படிப்பவர் மனதில் நங்கூரம் பாய்ச்சி நிற்குமிந்த ‘நங்கூரம்'.
நங்கூரம்
நளாயினி தாமரைச் செல்வன்
வெளியீடு: இமேஜ் இம்ப்ரெஷன்
11/29 சுப்ரமணியம் தெரு
அபிராமபுரம் சென்னை - 18.
விலை ரூ. 40/
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|