புலம் பெயர்ந்த துயரம் ரசிகவ் ஞானியர்
இருப்பவனுக்கோ வந்துவிடவும் வந்தவனுக்கோ சென்று விடவும்
அயல்தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும் விசா அரிப்புகளோடும் வருகின்ற -
கடிதங்களை நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக்கொள்ளும் சென்ட்டில் வேண்டுமானால்
வாசனைகள் இருக்கலாம்! வாழ்க்கையில்?
தூக்கம் விற்ற காசில்தான்.. துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்க நிலையிலேயே .... இளமை கழிக்கின்றோம்!
எங்களின் நிலாக்கால நினைவுகளையெல்லாம்
விமானப்பயணத்தினூடே விட்டுவிட்டு
கனவுகள் புதைத்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மர உச்சியில் நின்று.... தேன் கூட்டை கலைப்பவன் போல!
வார விடுமுறையில்தான் பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு எழுந்த நாட்கள் கடந்து விட்டன!
அலாரத்தின் எரிச்சல் கேட்டு எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள், நண்பர்கள், கல்லூரி நாட்கள்
காணாமல் போய்விடுகிறது! கனவுக்குள் வந்து
நண்பர்களோடு ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம் நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுகள்!
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்க் கோப்பை கிரிக்கெட்!
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
"கண்டிப்பாய் வரவேண்டும்'' சம்பிரதாயம் அழைப்பிதழுக்காக....
சங்கடத்தோடு தொலைபேசி வாழ்த்தூனூடே..
தொலைந்துவிடுகிறது எங்களின் நீ...ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும்
அயல்தேசத்து ஏழைகள்தான்!
காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
மரணச்செய்திக்கெல்லாம் ஆறுதல் தருவது
அரபிக்கடல் மட்டுதான்.....
இருப்பையம் - இழப்பையும் கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டுதான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம்..., பேச்சு...., முதல் பார்வை..., முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை தந்துவிடுமா?
தினாறும் - திர்ஹமும்
கிள்ளச்சொல்லி குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலேயே நாங்கள் அழும் சப்தத்தை
யாருக்கும் கேட்குமோ?
புதிய முகங்களின் எதிர்நோக்குதலையும்...
பழைய முகங்களின் மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடபிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்... தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து.... சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது மீண்டும் அயல்தேசத்திற்கு!
- ரசிகவ் ஞானியார் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|