அறிந்த கேள்விகள் - அறியாத பதில்கள் விழி. பா. இதயவேந்தன்
கடலூர் _ விழுப்புர சாலையில்
பேருந்தில் பயணப்பட ஏறுகிறேன்
ஏற்கெனவே நிற்கும் கூட்டத்தில்
மாணவிகள் மூவர் உட்பட
பெண்களின் ஒதுக்கீடு எங்கே போயின?
கண்களால் துழவுகிறேன்.
பெண்கள் அமருமிடத்தில்
ஆண்களின் ஆக்கிரமிப்பு
‘சொந்த வண்டில வர்றதானே'
திருப்பிக் கேட்டால் இப்படி
ஆணவப் பதில்கள் கிடைக்கலாம்.
உட்காருதல் பற்றிய கவலைகள் அற்று
பேச்சு... பேச்சு.... இடைவிடாத பேச்சு ;
பள்ளி, ஆசிரியர், சக மாணவிகள் இப்படி.
அருகே அமர்ந்திருந்தவர் பெரியவர்
பெண்களின் பேச்சை இடையே நிறுத்தி,
"இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
தமிழகத்தின் முதல் முதலமைச்சர் யார்?
இலங்கையின் தற்போதைய அதிபர் யார்?
நோபல் பரிசு எதனால், யாரால்? .....
கேள்விகளால் தொடர...
விழிகள் பிதுங்கினர் மாணவிகள்
"இதெல்லாம் எங்க பாடத்தில வர்ல''
கேள்விக்கான பதில்கள் தெரிந்திருந்து
வேடிக்கைதான் பார்க்க முடிந்தது என்னால்.
இடையே கிராமத்துப் பாதைஒன்றில்
கடக்கின்றன பாதங்கள் நெஞ்சக் கலவரத்துடன்
கேள்விகளும் பதில்களும்
நிறையவே உள்ளன.
தெரியவில்லை என்றாலும் பலவற்றைத்
தேடிக் கொண்டிருக்கிறோம் இன்னும்
சமூகத்தில் நானும் நீங்களும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|