மதியழகன் சுப்பையா கவிதைகள்
நக்கல்
அக்குள் வாடையில்
முகம் புதைக்கச் சொல்கிறாய்
எச்சில் சுவைத்து
மெய்மறக்கச் சொல்கிறாய்
உடலால் உடல் தடவி
ஒத்தடம் கொடுக்கச் சொல்கிறாய்
மூச்சுத் திணறுகிறேன்
மோகச் சுவாசம் என
தப்பாய் புரிகிறாய்
வார்த்தைகளால் நிலை
சொன்னேன் புரியவில்லை
உணர்வாயென்பது பொய்
கதவடைத்துப் போகிறாய்
வந்ததும் கதவடைக்கிறாய்
வீடெங்கும் மனக்கூடெங்கும்
புழுக்கம் புழுக்கம் புழுக்கம்
உண்ணல்
புடலங்காய் நறுக்குகிறேன்
நாடகம் பார்க்கிறேன்
பாத்திரம் கழுவுகிறேன்
துணி துவைக்கிறேன்
குளிக்கப் போகிறேன்
சோறு சாப்பிடுகிறேன்
படுத்துக் கிடக்கிறேன்
பாட்டுக் கேட்கிறேன்
வயிறு வலிக்கிறது
சலிப்பாய் இருக்கிறது
ஒளிபுக ஒருதுளை
வளிபுக ஒருதுளை
இறக்கை விரித்து
சதுரமடிக்கிறேன்
சட்டத்திற்குள்
பருகல்
மிளகுரசம் இல்லையென்றால்
இறங்காது சாப்பாடு
குறைதலும் மிகுதலும்
குற்றமே உன்னகராதியில்
அடுப்பு தெய்வத்தை அன்றாடம் வேண்டியே
சமைக்கத் துவங்குவேன்
குறைசொல்லிக் கொண்டே
கும்பி நிறைக்கிறாய் கையை நமக்குகிறாய்
ரசம் தெளித்துவசைமொழிவாய்
தினம் தினம்
ஊறுகாய் தொட்டு
உண்டு படுக்குமென்
கால் நக்கி களிப்பாய்
தின்றல்
உடல் மொழி
அறியச் செய்தாய்
சைகையின்
பொருளுணர்த்தினாய்
செறுமல்களையும்
உருமல்களையும்
புரிய வைத்தாய்
இடம் ஏவல்
கவனிக்கச் செய்தாய்
குறிப்பறிந்து நடக்க
கற்றுத் தந்தாய்
ஆசான் போலானாய்
தலைமுறைகளுக்கு
தாரைவார்க்கிறேன்
அடிமை அணுக்களை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|