மதுக்கடை மரம் லலிதானந்த்
மாமரத்தின் சுற்றளவிற்கு
ஆஸ்பெஸ்டாஸ் தகட்டை
வட்டமாய் அறுத்து
கூரை அமைத்தவன்
மாநகருக்கு குடிபெயர்ந்தும்
வேர்களை நேசிப்பவனாகவே
இருக்கக்கூடும்
மரத்தில் அறையப்பட்ட
ஆணிகளில்
வாளேந்திய
மதுரை வீரனுக்குக்கீழ்
பாசிப்பயிறும்
நிலக்கடலையும்
மொச்சையும்
பொட்டலங்களாய்
விளைந்திருந்தன
எச்சில் வாட்டர் பாக்கெட்டுக்கு
எவரிடமோ கையேந்தி நிற்கும்
நரிக்குறவருக்குத் தெரியாதபடி
கூரைக்குமேல்
விரிந்திருந்த கிளைகளில்
பறவைகள் ஒளிந்திருந்தன
வாடிக்கையாக வரும்
அரவாணிக்கு
ஒரு போதை வள்ளல்
பத்து ரூபாய் பரிசளித்ததை
ரசித்த
மரம்வாழ் கொசுவொன்று
யாருடைய கைத்தட்டலிலோ
சிகப்பானது
கோப்பைகளுரசிக்
கொண்டாட யாருமற்ற
தனியர்
மதுத்துளிகளை
சுட்டுவிரலால் நனைத்து
பூமிக்கு மும்முறை
சமர்ப்பணம் செய்ய
வேர்கள் சிலிர்த்தன
குளிர்பான பாட்டில்களின்
மிச்சத்திற்குள் இறந்து மிதந்த
எறும்புகளுக்காக
அழுத கனி ஒன்று
அழுகியது
அப்பாவின் திவசத்திற்கு
ஊருக்குப் போக
விடுமுறை கிடைக்காத
பணியாளன்
கூட்டிப் பெருக்கினான்
பாலிதீன் குப்பைகளையும்
உதிர்ந்த மாவிலைகளையும்
மறுநாள் புயலில் சாய
விரும்பியது மரம் .
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|