தனக்குவமை இல்லாத தன்மானக் கவி
கவிஞர் பல்லவன்
தமிழ் சுரந்த
ஊற்றுக் கண்
இதோ
இமை மூடிவிட்டது!
தமிழ்த் தாய்க்கு
உவமை அணிகலன்கள்
பூட்டி மகிழ்ந்த
கவிக்கொல்லன்
இதோ
மூச்சிழந்து விட்டான்!
இதோ ஒரு
நாத்திகக் கவியின்
நாவடங்கி விட்டது!
ஓ... எங்கள்
மரபின் மைந்தனே!
மாத்தமிழ் அன்னை
மடியேந்தி வாசித்த
மகரயாழே!
தந்தை பெரியாரின்
தடம் மாறாத்
தன்மானத் தீயே!
புரட்சிக் கவிஞரின்
போர்ப் படைத்
தளபதியே!
உனது
தேன்மழையால்
எங்கள் இலக்கியச்
சோலை தழைத்தது!
உனது
கவிதைச் சுரப்போ
எங்களுக்கு
அமுதும் தேனுமாக
இனித்தது!
உன் உள்ளத்தை
ஒப்பனைச் சொற்களால்
ஒருபோதும் நீ
மறைத்ததே இல்லை!
உன்னை
வெள்ளி ஊஞ்சலில்
அமர்த்தித்
தங்கத் தாம்பாளத்தில்
விருந்தளித்துத்
தனக்குப் பெருமை
தேடிக் கொண்டான்
எங்கள்
தமிழ்நாட்டு
இசைமா மன்னன்
ஒருவன்!
தனக்குவமை
இல்லாத்
தன்மானக் கவியே!
உனது நாவாயுதம்
சில நேரங்களில்
எங்களைக்
காயப்படுத்தியது
உண்டு
அதற்காக
கவலைப்பட்டதே
இல்லை நாங்கள்!
குட்டி யானையைத்
தயார்ப்படுத்தும்
தாய் யானையின்
தாக்குதல் அல்லவா
அது!
வளரும் கவிஞர்களின்
வரிகளை நீ
உயர்த்திக் காட்டி
இவன் என்னைத்
தாண்டி விட்டான்
அல்லவா என்பாய்!
இப்படிச் சொல்ல
இங்கே யாருக்கு
மனம் வரும்?
உனது தோள்களின்
மீதேறி எங்களை
உயர்த்திக் கொண்டவர்கள்
நாங்கள்!
எங்களுக்கு ஒரு
மனக்குறை உண்டு
உன்மீது!
எங்கள்
சுப்புரத்தினதாசன்
இந்தத்
திரைப்படச்
சுவர்களுக்கெல்லாம்
போய்ச் சுண்ணாம்பு
அடித்திருக்க
வேண்டுமா?
எங்களைச்
சுடுகின்ற
நெருப்புக் கேள்வி
இது!
அகப் பொருள்
பாடல்களை
ஏராளமாக
எழுதிக் குவித்த
நீ
இங்கே
விழிப்புணர்வு
ஊட்டவும்
விலங்குகள்
தெறிக்கவும்
விடியல்கள்
பூக்கவும்
உனது
எழுத்தாணிக்கு
அதிகம் வேலை
கொடுக்கவே
இல்லையே ஏன்?
இன்னொரு
இமயம்
இங்கே இல்லை!
இன்னொரு
சுரதா எங்குமே இல்லை!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|