வெளிச்சத்தில் குற்றவாளி, இருட்டில் லிபரான்
இளவேனில்
பாபர் மசூதி இடிப்புச் சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதிபதி லிபரான் கமிஷனின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அடுத்த 15 நாட்களில் நீதிபதி லிபரான் தலைமையில் விசாரணைக் கமிஷனை அன்றைய பிரதமர் நரசிம்மராவ் நியமித்தார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தக் கமிஷன் தனது விசாரணையை முடித்து சாட்சியங்களைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி முடித்தது. 13 ஆண்டுகள் இந்தக் கமிஷன் விசாரணை நடத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், எல்.கே. அத்வானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. அவர்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. இந்நிலையில் கமிஷனின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை கமிஷன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நீட்டிக்கப்பட்ட கால அளவுக்குள் லிபரான் குழு தனது அறிக்கையை நிறைவு செய்துவிடும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆகவே மேலும் ஒரு 50 ஆண்டுகளாவது ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
அதன் பிறகு அந்த அறிக்கையின்படி பாபர் மசூதி என்று ஒன்று இருந்தது என்பதே செவி வழிச் செய்திதான். நமது இதிகாசங்களில் கூட பாபர் என்பவர் இந்தியாவின் ஒரு பகுதியில் மன்னராக இருந்தார் என்பதற்கான ஆதாரம் கிடையாது.
குருமூர்த்தி, ஞாநி, ‘கருப்பையா’, சோ போன்ற ஆய்வாளர்களும் இல்லாத ஒரு மசூதியை எப்படி இடித்திருக்க முடியும் என்று அன்றே கேட்டார்கள் என்று ஏடுகள் எழுத வேண்டும். ஆனால் உணர்வும் அறிவும் மழுங்கிப் போகாத மக்கள் லிபரான் குழு அமைக்கப்பட்டது குறித்தே பின்பொறியால் சிரிக்கிறார்கள். பாபர் மசூதி, கரசேவை, யாத்திரை என்கிற பெயரில் அத்வானி தலைமையில் காவிக் கூட்டத்தால் தகர்க்கப்பட்டது. மர்மமான காரியம் அல்ல. பட்டப்பகலில் ராணுவப் பாதுகாப்புடன் நடந்த அக்கிரமம்.
அத்வானியும் அவர்தம் பரிவாரங்களும் இன்று வரை கைது செய்யப்படாதது ஏன்? சங்கப் பரிவாரங்களும் அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க.வும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்படாதது ஏன்? தமிழ்நாட்டில் ஒரு சிறு அமைப்பு தமிழ், விடுதலை என்கிற பெயரைக் கொண்டிருப்பதாலேயே தடை செய்யப்பட்டிருக்கும்போது, இந்திய அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் விரோதமானவர்களைப் பாதுகாப்பது ஏன்?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|