தொட்டால் தீட்டு கட்டினால் போச்சு
இளவேனில்
திருநெல்வேலி கடைவீதியில் ஓர் இனிப்பகத்திற்கு முன்னால் ஓர் இளைஞனை மரத்திலே கட்டிப்போட்டு அந்தக் கடைக்காரரும் அவரது கடை ஊழியர்களும் செருப்பால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வழியே காரிலே போய்க் கொண்டிருந்த அரிராம் பார்த்துப் பதைத்து விடுகிறார். தனது காரோட்டியிடம் எதற்காக அந்த இளைஞனை அடிக்கிறார்கள் என்று கேட்டு வரச் சொல்கிறார்.
அருகில் போய் விசாரித்து வந்த காரோட்டி சொல்கிறார்: “அந்த இனிப்பகம் ஓர் அய்யருக்குச் சொந்தமானது. ஆச்சாரமுள்ள அந்தப் பிராமணர் கடையில் அடுக்கி வைத்திருந்த ஒரு லட்டைத் தன் கையில் எடுத்து `இது என்ன விலை’ என்று கேட்டிருக்கிறான் அந்த இளைஞன்.
“அந்த இளைஞன் தாழ்ந்த சாதிக்காரன். அவன் எப்படி லட்டைத் தொடலாம்? அவன் தொட்டதால் அடுக்கி வைத்திருந்த அத்தனை லட்டுகளும் தீட்டாகிவிட்டன. அதனால் அத்தனை லட்டுகளையும் அவன் வாங்க வேண்டும், என்கிறார் கடைக்காரர். அவனிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லை. அதனால்தான் கட்டிவைத்து அடிக்கிறார்கள்.’’
அரிராம் தன் காரோட்டியிடம் போதிய அளவுக்குப் பணம் கொடுத்து, தீட்டுப் பட்ட லட்டுகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு அந்த இளைஞனையும் மீட்டுக் கொண்டு வரச் சொல்கிறார்.
அவ்வாறே பணத்தைக் கொடுத்து அத்தனை லட்டுகளையும் வாங்கிக் கொண்டு இளைஞனையும் அழைத்து வருகிறார் காரோட்டி. இளைஞனையும் லட்டுகளையும் ஏற்றிக் கொண்டு கார் புறப்படுகிறது.
காரோட்டி மூலம் இனிப்பக அய்யருக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள்தான் மத்தியானம் அய்யருக்குச் சோறு கொண்டு வருவாள் என்கிற செய்தி அரிராமுக்குத் தெரியவருகிறது.
மறுநாள் மத்தியானம் அய்யரின் கடைக்கு எதிர்ப் புறத்தில் அரிராமின் கார் வந்து நிற்கிறது. சிறிது நேரத்தில் அய்யரின் பெண் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறாள். அரிராமின் காரிலிருந்து நேற்று செருப்படிபட்ட இளைஞன் இறங்கிச் சென்று அய்யரின் பெண்ணைக் கையைப் பிடித்துக் கொண்டு வந்திருப்பது சாப்பாடா, பிரியாணியா?’ என்று கேட்கிறான்.
பயந்து போன அந்தப் பெண் ஐயோ என்று அலற, கடைக்கார அய்யரும் ஊழியர்களும் இளைஞனை அடிக்க வருகிறார்கள். அதற்குள் அரிராமும் அங்கு வந்து விடுகிறார். அரிராம் ஒரு பிரபல மனிதர் என்பதால் கடைக்கு முன் கூட்டம் கூடிவிடுகிறது. அய்யர் அரிராமிடம் புகார் சொல்கிறார்: “நேற்று செருப்பால் அடிபட்டும் இந்தக் கீழ்சாதி நாய்க்குத் திமிர் அடங்கவில்லை!’’
“நேற்று ஏன் அடித்தீர்கள்?’’
“லட்டைக் கையிலே எடுத்து விலை கேட்டான்!’’
“நீங்கள் என்ன செய்தீர்கள்?’’
“நீ தொட்டதால் லட்டு தீட்டாயிடுத்து. அதனால் எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்று கட்டிவைத்து அடித்தோம்!’’
“அதே விவகாரம் தானே இப்போதும் நடந்திருக்கிறது? நேற்று லட்டைத் தொட்டான். தீட்டாகி விட்டது. முழுவதையும் அவனே வாங்க வேண்டும் என்றீர். இன்றைக்கு இந்தப் பெண்ணைத் தொட்டு விட்டான். இவள் தீட்டுப்பட்டுவிட்டாள். அதனால் உமது பெண்ணை அவன்தான் கல்யாணம் பண்ணவேண்டும். டேய் தம்பி அவளைத் தூக்குடா. என்ன விலையோ அதைக் கொடுத்துவிடலாம்!’’
அரிராம் பற்றி அங்கிருந்த அனைவருக்குமே தெரியும். தனக்கு நியாயம் என்று படும் எந்தக் காரியத்தையும் அவர் எதற்கும் அஞ்சாமல் நடத்திமுடிப்பார்.
அன்று இரவு அய்யரால் செருப்படிபட்ட இளைஞனுக்கும், அய்யரின் மகளுக்கும் ஊரே பிரமிக்கும் வகையில் திருமணம் செய்து வைத்தார் அரிராம்.
அரிராம் இன்று இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
“ஜெயமாலா தொட்டதால் அய்யப்பன் தீட்டுப்பட்டான் என்றால், தீட்டுப்பட்ட அய்யப்பனை இனி யாரும் கும்பிடக் கூடாது. ஜெயமாலாவே அய்யப்பனை எடுத்துக் கொள்ள வேண்டும்!’’
என்ன தர்க்க ரீதியான தீர்ப்பு!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|