விழித்தெழு
தரங்கை பன்னீர்செல்வம்
குவடுதொட வேண்டுமெனக்
குழந்தையரைப் பெற்றெடுத்துக்
கொடுந்தீயில் பொசுங்கலிட்ட தமிழா - முன்னோர்
சுவடுகளைக் கற்றாயா,
கணைப்புகளைப் பெற்றாயா,
சொக்கட்டான் காயோ, நீ தமிழா!
ஆங்கிலத்தில் கல்விகற்றால்
அறிவு மிகும் என்றெண்ணி
அன்புமக்கள் தமையிழந்த தமிழா - விலைக்கு
வாங்குதற்குக் கல்விவிற்கும்
வணிகர்களின் புரட்டுகளை
வாழ்வியலாய்க் கொள்ளலாமோ - தமிழா!
நடந்தவையும் நடப்பவையும்
நடக்கவுள எல்லாமே
நன்மைக்கே என்றாரே, தமிழா - நாம்
குடந்தையிலே கொடுந்தீயில்
குழந்தையரைக் காவுதந்த
கொடுமையுமே நன்மைக்கோ தமிழா!
ஆரியத்தால் மழுக்கலுற்றாய்
ஆங்கிலத்தால் வழுக்கிவிட்டாய்
அகடோம்பி அலைகின்றாய், தமிழா - தமிழ்ச்
சீரியத்தை இகழ்கின்றாய்
பூரியத்தைப் புகழ்கின்றாய்,
செக்கிழுத்தே குலைகின்றாய் தமிழா!
திரைப்படத்தைச் சாறாயத்
தெருக்கூத்தை வாழ்க்கையின்
தேவையாக்கி நீறாகும் தமிழா - தமிழகத்
தரைப்படத்தைப் பார்த்ததுண்டா
தள்ளாட்டத் தலைக்கொழுப்பைத்
தலையெழுத்தாய்க் கொள்ளலாமோ தமிழா!
ஆளுக்கொரு குலப்பிரிவு,
நாளுக்கொரு புதுக்கட்சி,
நாற்காலி தேடுகின்றாய் தமிழா - வானக்
கோளுக்குப் பொய்க்கணியன்
குறிப்புக்கு மதிப்பளித்துக்
கூப்பாடு போடுகின்றாய் - தமிழா!
தீண்டாமை நலமென்னும்
தீயோரை நடமாடும்
தெய்வமெனக் கொண்டாடும் தமிழா - நம்மைப்
பூண்டோடே யழித்திடற்குப்
பூட்கையுற்றார் கரவுகளைப்
பொடியாக்க வேண்டாமா தமிழா!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|