அடிமை முறைக்கு ஆதரவு
இளவேனில்
ராமராஜ்ஜியம் இன்றையதல்ல; மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது. இந்தியாவில் வெள்ளையர்கள் 1834-ம் வருடம் ராமராஜ்ஜியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அதாவது நமது நாட்டில் ராமராஜ்ஜியம் மறைந்து 125 ஆண்டுகள்தான் ஆகின்றன. ‘இந்து ராஜ்ஜியம் எனப்படும் நேப்பாளத்திலும் ராமராஜ்ஜியம் மறைந்து, 34 வருடங்கள் தான் ஆகின்றன. ஆனால் கரபாத்ரி சுவாமிஜி இன்றும் அடிமை முறையை வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் அங்கீகரிக்கப்பட்டதாகவே கருதுகிறார்.
“கிரேக்கச் சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் தனிச் சொத்துரிமையை ஆதரிக்கிறார். அவர் அடிமை முறையை இயற்கையான தென்றும், தார்மீகமான தென்றும், அவசியமான தென்றும் ஆதரிக்கிறார்'' (பக்கம் 40)
கரபாத்ரியின் கருத்தில், அடிமை முறை இந்தியாவுக்கு சாபக்கேடல்ல; வரப் பிரசாதமாகும்.
“அடிமை வழக்கத்தை எவ்வளவுதான் பயனற்றது, இயற்கைக்கு எதிரானது, முட்டாள்தனமானது என்று கூறினாலும், அது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது; இருக்கும். சோவியத் ரஷியாவிலேயே அங்குள்ள அரசை எதிர்ப்பவர்களை அடிமைகளைவிடக் கீழ்த்தர மாக நடத்துகின்றனர். இதுவும் அடிமை முறைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்'' (பக்கம் 244).
“இன்றைய ஜனநாயக, குடியரசு ஆட்சிகளைக் காட்டிலும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய அசோகர் காலத்தில் செல்வச் செழிப்பு அதிகமாக இருந்தது. அவருடைய ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தருமர் ஆட்சியிலோ தர்ம அரசே கோலோச்சியது, லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னாலிருந்த ராமராஜ்ஜியத்திற்கு இணையான ஆட்சி இதுவரை தோன்றியதில்லை; இனி தோன்றப் போவதுமில்லை.''
1834க்கு முன் இந்தியாவில் அடிமை முறை தொடர்ந்து நிலவி இருந்தது. அந்த முறையில் ஆண்களும் பெண்களும் ஆடு, மாடுகளைப் போல் விற்கப்பட்டு வந்தனர். எழுநூறு வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் ஒரு இளம் அடிமைப் பெண்ணை விற்ற விற்பனைப் பத்திரம் கிடைத்துள்ளது. அது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதன் மொழியாக்கம் கீழ் வருமாறு:
“விக்ரம் நூற்றாண்டு 1288 (கி.பி. 1231) வைகாசி 15-ம் நாள் வியாழக்கிழமை. இன்று இங்கே (ஸ்ரீ அன்ஹில் பாட்டனில்) கடவுளுக் கொப்பான ஸ்ரீ பீம தேவரின் வெற்றி ராஜ்ஜியத்தில் அடிமைப் பெண் விற்பனைப் பத்திரம் இவ்வாறு எழுதப்படுகிறது.
“ராணா ஸ்ரீ பிரதாப் சிங்கால் கொண்டு வரப்பட்ட சிவப்பு நிறமான பதினாறு வயது நிரம்பிய ‘பனுதி' என்னும் பெயருடைய அடிமைப் பெண், தலைமேல் புல்லை வைத்து, நகரத்தின் பஞ்சாயத்தார் அறியும்படி நாற்சந்தில் வைத்து விற்கப்பட்டாள். அவளை விலைக்கு வாங்கிய ஆஸ்தர் அடிமைப் பணியைச் செய்விப்பதற்காக ஸ்ரீ பிரதாப் சிங்குக்கு ஐந்நூற்றி நாலு பணங்கள் தந்து, நகர வாசிகளான நாலு வர்ண மக்களுக்கும் தெரியும்படி ‘பனுதி' அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கிக் கொண்டார்.
``இதன் பின்னர் அவ்வடிமைப் பெண் மனது வைத்துச் செய்ய வேண்டிய வேலைகளாவன: அவளை விலைக்கு வாங்கிக் கொண்டவரின் வீட்டைக் கூட்டுவது, பெருக்குவது, தானியங்களைக் குத்துவது, மாவரைப்பது, சுள்ளி பொறுக்கி வருவது, தண்ணீர் காய்ச்சுவது, அசுத்தங்களைத் தூர எறிவது, ஆடு, மாடுகளைப் பால் கறப்பது, தயிர் கடைவது, வயலுக்கு மோர் கொண்டு செல்வது, பருத்திக் காட்டில் வேலை செய்வது, நூல் நூற்பது, விவசாய வேலைகள், வீட்டு வேலைகள் முதலியன. இவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கும் அடிமைப் பெண்ணுக்கு வீட்டுச் சொந்தக்காரர் (எஜமான்) நாட்டையும், காலத்தையும் பொருத்தும், அவருடைய சொத்தின் அளவுப்படியும் உணவு, உடை வழங்க வேண்டும். அவள் எஜமானின் வீட்டு வேலைகளைச் செய்யும் போது அவளுடைய தந்தையோ, சகோதரனோ, கணவனோ வந்து வேலைகளுக்குத் தடங்கல் ஏற்பட்டால், எஜமான் அவ்வடிமைப் பெண்ணை ஈவிரக்க மின்றிக் கட்டி வைத்து அடித்து விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா வேலைகளையும் செய்யும்படி செய்யலாம். பிறகு எஜமான் அவளுடைய தலைமுடியைப் பிடித்திழுத்து, காலால் உதைத்தும், தடியால் அடித்தும் அவள் இறந்துவிட்டால், எஜமான் குற்றவாளியல்ல; அவள் தன் தலையெழுத்தின் படி செத்தாள் என்பதை நான்கு வர்ண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தத் தீட்டிலிருந்து புனிதர்களாக்கிக் கொள்வதற்காக எஜமான் தனது மனைவி, மக்களுடன் கங்கை நதியில் மூழ்கி எழுந்தாலே போதுமானது. அந்த அடிமைப் பெண் குளம், குட்டையில் விழுந்தோ, விஷம் கலந்த உணவு சாப்பிட்டோ இறந்து விட்டால், அவளுடைய எஜமான் குற்றவாளியல்ல; அவள் தனது விதியின்படி செத்தாள் என்பதை ஊர் பஞ்சாயத்துக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எஜமான் தன் குடும்பத்தாருடன் கங்கை நீராட வேண்டும். இதில் எழுதப் பட்ட கடமைகளை ஆற்றுவதற்கு நகரக்காவலர்களும், நகர வாசிகளும் சாட்சிகளாவர். இந்த விஷயமான ராணா பிரதாப்சிங்கும், நான்கு காவலர்களும் தமது கையால் எழுதியிருக்கின்றனர். இந்த விற்பனைப் பத்திரத்தை இரு தரப்பாரும் கேட்டதன் பேரில் ஜயதா பாரதியால் எழுதப்பட்டது.''
மேற்கண்ட விற்பனைப் பத்திரத்தில் அடிமை வழக்கத்தின் எவ்வளவு மோசமான உருவத்தைக் கண்டோம்! ஆனால், கரபாத்ரி சுவாமிஜி இதை எவ்வளவு அழகாக சித்திரிக்கிறார், பாருங்களேன்;
“அடிமை முறை யுகத்தில்கூட அடிமை வேலை செய்ய இயலாமல் ஆகி விட்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பையும் எஜமானரே ஏற்றுக் கொண்டார்.''
“உண்மையில் இவ்வடிமைகள் பெயரளவுக்குத் தான் அடிமைகளே தவிர, அவர்கள் எஜமானரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். அதனால் தான் எஜமானர் அடிமைகளின் உணவு, உடை வசதியைக் கவனித்த பிறகே, தன் குடும்பத்தின் உணவு, உடை வசதியைக் கவனித்தார்.''
பழங்கால அடிமை முறை மீண்டும் திரும்பி வரப்போவதில்லை. இதை, கரபாத்ரியின் ‘ரிதம்பரா பிரக்ஞை'யும் அறியும் இருந்தாலும் முக்காலங்களையும் ‘அறிந்த' ரிஷிகளின் சாஸ்திரங்களை ஆதரிப்பது அவருடைய ‘கடமை'யாதலால், அடிமை வழக்கத்தையும் ஆதரிக்கிறார் பாவம்!
சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள்
சூத்திரனும் வினைப் பயன்படி தோன்றினான். அவன் தன் முற்பிறப்பின் வினைப்பயனாகவே பிறந் தான். பிராமணன் உடலிலும், கரபாத்ரி சுவாமிஜியின் உடலிலும் உள்ள பரமாணுக்கள் சூத்திரனின் உடலில் இல்லை போலும்! சூத்திர ஜாதியின் தலை மகனிலிருந்த பரமாணுக்களிலிருந்து இன்றைய சூத்திரன் உருவானான். சூத்திரன் தன்னில் உள்ள அந்தப் பரமாணுக்களை ஒழித்து விட்டால் அவனும் பிராமணனாகலாம் என்கிறார் கரபாத்ரி. அது எப்படியோ?
“வேள்விகளில் எப்போதும் பணி செய்து கொண்டிருக்கும் சூத்திரனிடமிருந்து அவனுடைய சேவை பெற்றுக் கொள்ளப்படுகிறது. பிராமணனுக்கு வேள்வியை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. கடைசியில் எல்லோருக்கும் பொருள் வழங்கப்படுகிறது.''
ஆமாம். சூத்திரனுக்குச் செப்புக் காசு தரப்பட்டது. பிராமணனுக்கோ, வெள்ளி அல்ல; தங்கமே தர வேண்டுமென்று கூறப்பட்டது.
பிராமணன் பிறப்பாலேயே பிராமணனாகிறான் என்கிறார் கரபாத்ரி சுவாமிஜி. அவனுடைய முற்பிறப்புக் காரியங்கள் வலுவானவையாக இருப்பதாலே, அவன் பிராமணப் பெண்ணின் வயிற்றுள் கருவாகிறாள். வெளியிலிருந்து பார்த்தால் பிராமணனிடத்தில் பிராமணீயம் தென்படா விட்டாலும், அவனுள் அந்தக் குணம் அவசியம் இருக்கும்.
“பிராமணனின் வெளித் தோற்றத்தில் எவ்வித விசேஷமும் தென்படாவிட்டாலும், சாஸ்திரப் பிர மாணங்களால் தோன்றும் குண நலன்களாலும், ரத்தத்தாலும் வித்தியாசத்தை ஒப்புக் கொண்டுதானாக வேண்டும்.''
மாபெரும் வேத விரிவுரையாளரான ‘பதஞ்சலி' வெள்ளை நிறமும், மஞ்சள் கூந்தலுமுடையோர் பிராமணர்கள் என்கிறார். இன்று எந்த பிராமணனும் இதை ஒப்புக் கொள்ள மாட்டான். உண்மையில், தம்மை ‘ஆரியர்கள்' என அழைத்துக் கொள்ளும் பலரில் கரு நிறத்தவர் இருக்கிறார்கள். அவர்களிலும் பழங்காலத்திய ‘நிஷாத, இனத்தின் (மலைவாழ் மக்கள்) ரத்தக் கலப்பு இருக்கிறது. ஆனால், கரபாத்ரி இவ்வுண்மையை ஒப்புக் கொள்ள மாட்டார். இதுவெல்லாம் இனவியலாளருக்கு சம்பந்தப்பட்ட விஷயமல்லவா!
நிறத்தை மூடி மறைத்து ‘வர்ணங்க'ளைப் பற்றி அவர் கூறுகிறார்:
``அவரவர் செய்த கர்மங்களைப் பொருத்து (காரியங்களைப் பொருத்தது) பிராமண, க்ஷத்திரிய ஜாதிகளில் பிறக்கின்றனர்.''
``வைதீகர்களின் கருத்தில், பிராமணர் முதலிய ஜாதிகள் செடி வகைகளைப் போல் பிரத்யட்சமாக நிரூபிக் கப்பட்டவையாகும்.''
பிரத்யட்சமாக நிரூபிக்கப்பட்டதென்பது தவறு சுவாமிஜி! ஒரே சீருடையில் சூத்திரப் பிள்ளைகளையும் பிராமணப் பிள்ளைகளையும் ஒரே வரிசையில் நிற்க வைத்தால், உங்களுக்குள்ள ‘ரிதம்பரா பிரக்ஞை'யைக் கொண்டும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.
அவரவர் ‘வினை'ப்படி சூத்திரர் முதலிய ஜாதிகளில் பிறக்கினறனர் என வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் இந்த `வினை'யை நிர்ணயிப்பது யார்? இதற்குப் பதிலளித்து கரபாத்ரி கூறுகிறார்:
“மகான்களும், பரம வைராக்கியம் கொண்ட மகரிஷிகளும் பரம சூட்சும மான ரிதம்பர பிரக்ஞையைக் கொண்டு, தேவர்களால் அருளப்பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் முதலியவைகளை அடிப்படையாகக் கொண்டு வினையை நிர்ணயித்தனர்.''
சூத்திரர்களின் ‘தலைவிதி'யை ரிஷிகள் முடிவு செய்து விட்டனர். சூத்திரர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் அல்லது சமுதாயத்தில் அவர்களின் இடம் எது என்பதைப் பற்றி சுவாமிஜி சொல்கிறார்:
``பிறந்த வர்ணங்களைப் பொருத்து, வாழும் முறை இருக்கும்.''
``புராதன இந்தியாவில் சூத்திரர்கள் கல்வி கற்பது அநீதியாகும்.''
கரபாத்ரி போன்ற பிராமண வெறியர்களாலேயே இன்று நாட்டில் பிராமண வெறுப்பு பரவியுள்ளது. ஜனநாயக அமைப்பில் இன்று சூத்திர ஜாதிகளில் பிறந்தவர்கள் பலர் ஆட்சிப் பொறுப்பில் உள்ளதால், ‘சூத்திரர் ராஜ்ஜியம்' என்று வெறுப்பாகக் கூறுகிறார். சுரண்டப்படுபவர்கள் எந்த ஜாதியில் பிறந்தவர்களானாலும், அவர்கள் ஒரே வர்க்கத்தை - சுரண்டப்படும் வர்க்கத்தை - சேர்ந்தவர்களே! சுவாமிஜியின் ராம ராஜ்ஜியம் அமைந்தால், சூத்திரர்களுக்கு மற்றவர்களுக்குப் பணிவிடை செய்யும் உரிமை' மட்டுமே கிடைக்கும். பாத்திரம் துலக்குவது, விறகு வெட்டுவது, கழிவறைகளை சுத்தப்படுத்துவது ஆகிய வேலைகளைச் செய்து, கிடைத்ததை உண்டு, உறங்க வேண்டி இருந்திருக்கும் ராமராஜ்ஜியத்தில் சூத்திரர்களுக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை.
கரபாத்ரியின் ராம ராஜ்ஜியம் எதைப் பாவமாகக் கருதுகிறதோ - அதையே கலியுகம் புண்ணியமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இன்று ஆயிரக்கணக்கான பிராமணர்கள் வேலை கிடைக்காமல், தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருந்தாலம் வேலை கிடைத்திருக்குமே என்று அங்கலாய்க்கின்றனர். இன்று சூத்திரர்களும், பிராமணர்களும் சமபந்தியில் ஒன்றாகச் சாப்பிடுகின்றனர். ஆனால், இன்னும் திருமண உறவுகள் அதிகமாகவில்லை; எனினும் ஆரம்பமாகி விட்டன. பழங்காலத்தில் பிராமணர்கள் மற்ற மூன்று வர்ணங்களைச் சேர்ந்த பெண்களை மணம் புரிந்து கொண்டிருந்தனர். ஆனால், தமது பெண்களை மட்டும் மற்ற ஜாதியினருக்கு மணமுடிக்கவில்லை. கலியுகம் இதிலேயும் மாற்றம் ஏற்படுத்தி விட்டது. அண்மையில் வெவ்வேறு ஜாதியினரி டையே பரஸ்பரத் தொடர்புகள் அதிகமாகி, ஏற்றத் தாழ்வுகளும் மபெண்கள் அடிமைகளே!
முக்காலமும் உணர்ந்த மகரிஷிகளானாலும், தவச் செம்மல்களான மகாபுரு ஷர்களானாலும் அனைவருமே பெண்களிலிருந்து தான் பிறக்கிறார்கள். ஆனால், “பெண்கள் சுதந்திரம் பெறத் தகுதியுள்ளவர்களல்ல'' என்பதுதான் அவர்கள் எல்லோருடைய கருத்துமாகும். கரபாத்ரி இதைக் கடவுள் வகுத்த மாபெரும் விதியாகவே நினைக்கிறார்.
``அனாதி காலத்திலிருந்து வேதம் முதலிய சாஸ்திரங்களின்படி பெண்கள் ஆண்களைச் சார்ந்துதான் இருக்கிறார்கள். அவர்கள் பதி விரதைகளாகக் கற்பு நெறியை ஒழுகி வாழ்கிறார்கள்.''
``இன்றும் கன்னிப் பெண் தாய், தந்தையர், சகோதரர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பதைக் காண்கிறோம். அவளுக்கு ஒன்பது அல்லது பத்து வயதாகும் போதே திருமணம் செய்யப்பட்டு விடுகிறது. அவள் கணவன் வீட்டிற்குச் சென்று முக்காட்டில் இருக்கிறாள். கணவனின் அண்ணனுடனோ, மாமனாருடனோ கூட அவள் பேசுவதில்லை. முக்காடு வழக்கம் இல்லாத இடங்களில் அவள் பார்வையைத் தாழ்த்தியே இருக்கிறாள். குடும்பத்தாரின் துணை இல்லாமல் அவள் எங்குமே சென்று வரமுடியாது. வெளியாளுடன் பேசவே முடியாதென்றால், சுதந்திரம் பற்றிப் பேசுவானேன்? இந்த நிலையில் குடும்பத்திலுள்ளவர்களுடன் விபச்சாரம் நடக்கலாமே தவிர, அயல் ஜாதியாருடன் தொடர்பு ஏற்படவே முடியாது. பெண் பருவமடைந்த பிறகு, அவள் மனத்தில் கோரிக்கை பெண்களுக்குப் பூப்பெய்துவதற்கு முன்பே திருமணம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. பழங்கால குடும்பப் பெண்கள் கற்பு நெறி பிறழாமல், விதவையானால் மனக் கட்டுப்பாட்டுடனும், கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறியும் புனிதவதிகளாக வாழ்ந்தார்கள்... பஞ்சாப் - பீகார் - வங்கம். தமிழக பிராமணர்கள் நிறத்திலும், உருவத்திலும் வித்தியாசப் பட்டாலும், அவர்கள் எல்லோரிலும் பிராமணீயம் நிறைந்தே இருக்கும்.'
வெள்ளை நிறமும், மஞ்சள் கேசமும் கொண்ட பிராமணர்களுக்குக் கருத்த குழந்தைகள் பிறந்ததற்கு மானிட இனவியலாளர்கள் காரணம் கூறுகிறார்கள். அந்தப் பிராமணர்களின் ஒரு தலைமுறையில் நிஷாத ரத்தக் கலப்பு ஏற்பட்டி ருக்கலாம். அடிமை யுகத்தில் நிஷாத அடிமைகள் பிராமணக் குடும்பங்களில் இருந்து வந்தார்கள் அல்லவா!
கரபாத்ரி சுவாமிஜி பெண்ணை அசையும் சொத்தைவிட அதிகமாகக் கருதவில்லை.
“கன்னிப்பெண் பெற் றோரின் உரிமையாவாள் - தந்தை அவளை யாருக்குக் கொடுக்கிறானோ, அவனே அவள் கணவனாகிறான்.''
``ராமராஜ்ஜிய திட்டத்தில் சிறுமிகளுக்குக் குழந்தைப் பருவத்திலேயே மண முடிக்கப்படும். ஆண்களின் வேலை வீட்டுக்கு வெளியேயானால், பெண்களின் வேலை வீட்டுக்குள்ளேயே இருக்கும்.''
கலியுகம் பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்து கொண்டிருக்கிற தென்பதில் கரபாத்ரி சுவாமிஜிக்கு மெத்த வருத்தம்!
``பெண்களுக்குச் சுதந்திரம், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்தல் போன்ற கவர்ச்சிகரமான கோஷங்களால் பெண்களை ஏமாற்றி அவர்களைப் பல தொழில்களில் ஈடுபடுத்துவதும், விபச்சாரத்தில் சிக்க வைப்பதும், அவர்களுக்கு அநீதி இழைப்பதேயாகும். மனித வாழ்விற்கும், இல்லத்திற்கும் சுவை கூட்டி, இனிமையாக்கும் பெண்ணின் தலையில் சம்பாதிக்கும் சுமை இருக்கக் கூடாது.''
``சோஷலிச சமுதாயத்தில் பெண்ணும் சமுதாயத்திற்காக உழைப்பவளாகக் கருதப்படுகிறாள். அங்கே அவள் வெறும் ஆணுக்கு இன்பமூட்டும் சாதனமாக நினைக்கப்படுவதில்லை... ராமராஜ்ஜிய திட்டத்தில் பெண் இல்லத்தரசியாக விளங்குவாள்.''
``புதிய ராமராஜ்ஜியத்தில் பெண் கூலி வேலை செய்ய தொழிற்சாலைக்குப் போக வேண்டியதில்லை... மார்க்சியத்தில் பெண்கள் அரசுக்கு அடிமைகளாக இருப்பதையும், கூலி வேலை செய்வதையும் நல்லதென்று கருதப்படுகிறது. ஆனால், தனது குடும்பத்தாருக்குச் சேவை செய்வதைப் பொறுத்துக் கொள்வதில்லை.''
கரபாத்ரி சுவாமிஜி ஒற்றைக் கண் ஆசாமிபோல் தெரிகிறது. 90 சதவீதப் பெண்கள் முக்காட்டுக்குள்ளேயே இருக்க முடியாதென்பதும், அவர்கள் வீட்டுக்கு வெளியே சென்று வேலை செய்ய வேண்டுமென்பதும் அவருக்குத் தெரியாது; இன்று சூத்திரர் வீட்டுப் பெண்கள் மட்டுமல்ல; கரபாத்ரியின் பிராமண வீட்டுப் பெண்களின் நிலைமையும் இதுதான்! பெண்களை முக்காடிட்டு மூலையில் உட்கார்த்தி வைக்க ஒவ்வொரு வீட்டையும் அந்தப்புரமாக்க வேண்டியதுதான்! சோஷலிஸ சமுதாயத்தில் மட்டுமே பெண்கள் உற்பத்திக்கு உதவுபவர்களாகக் கருதப்படுவதில்லை. அனாதி காலந் தொட்டே அவர்கள் உற்பத்திக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்கள் ஒரு சிலராகத்தான் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.
பெண்கள் குடும்பத்திலுள்ளவர்களுக்குச் சேவை செய்வதை எவரும் எதிர்க்கவில்லை; ஆனால், இது ஒரு சார்பானதாக இருக்கலாகாது. ஆணும் வீட்டு வேலைகளில் பெண்ணுக்கு உதவி புரிய வேண்டும். ‘இல்லத் தரசி' என்று பெண்ணுக்குப் பட்டம் சூட்டிவிடுவதாலேயே அவளுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. ‘பெண் ஆணுக்குச் சமம்' என்று கூறுவதால் மென்மையானவளான அவள், ஆண் செய்யும் முரட்டு வேலை களையெல்லாம் செய்ய வேண்டுமென்பதல்ல. அறிவில் கார்க்கி, மதாலஸா, லீலாவதி போன்ற பெண்கள் ஆண்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல. பெண்கள் சுதந்திரமாக வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள்.
பத்தாம் பசலிகளின் இந்த வாதத்தை இன்று பண மூட்டைகளைத் தவிர வேறு யாரும் ஒப்புக் கொள்ளத் தயாராயில்லை. பழைய சமஸ்தான ராஜாக்களே அந்தப்புரத்திற்குள் முக்காட்டிலே இருந்த தம் பெண்களைப் பரந்த வானத்திற்குக் கீழே கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்; மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|