அறிவியல் போட்டி - ஆதிக்கப் போட்டியும்தான்
இளவேனில்
பெரும் ஆரவாரத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. தரையிலிருந்து கிளம்பிய அறுபதே நொடிகளில் மேலே செல்வதற்குப் பதில் திசைமாறியது. வெடித்துச் சிதறி கடலில் விழுந்தது. ‘இன்சாட் 4சி' என்று பெய ரிடப்பட்ட இந்த செயற்கைக் கோளை உருவாக்க ஆன செலவு ரூ.280 கோடி என்கிறார்கள்.
விஞ்ஞானப் பரிசோதனைகளில் வெற்றியைப் போலவே தோல்விகளும் பயனுள்ளவையே. இழப்பில்லாமல் வெற்றிகளும் இல்லை என்பதால், ரூ.280 கோடி இழப்பு என்பது பெரிதில்லைதான். ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இது பெரும் தொகைதான் என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தாகத்துக்கு நல்ல தண்ணீர் இல்லை. எப்படியாவது பணம் சேர்த்துக்கொள் என்று நிர்ப்பந்திக்கிற சமூக அமைப்பில், பணம் திரட்டும் வெறியில் வானும் மண்ணும் காற்றும் கூட நஞ்சாகிப் போனது.
“சாலையோரத்திலே வேலையற்றதுகள். வேலையற்றதுகளின் நெஞ்சிலே விபரீத எண்ணங்கள்.'' எல்லாம் தனியார் மயம். அதுவும் ‘வெளியார்' மயம்.
ஒரு ‘கிழக்கிந்தியக் கம்பெனி'யை விரட்ட நூறாண்டுகள் போராட நேர்ந்தது. இன்றோ அன்னியக் கம்பெனிகளுக்கு ஆரவார வரவேற்பு. இந்த நிலையில் ‘விண்வெளியில் ஆதிக்கம்' செலுத்தும் ஆசை இந்தியாவுக்கு வரலாமா? கேட்டால் சொல்வார்கள்: “இந்தியா ஏழ்மை நிறைந்த நாடல்ல. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?''
“எல்லா வளங்களும் இருந்தும் பஞ்சம் வாட்டுவது ஏன்? பட்டினிச் சாவுகள் இருப்பது ஏன்?''
“பஞ்சமும் பட்டினியும் ‘மகாபாரத'க் காலத்திலிருந்து வருவதுதான். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டித்தான் இந்தியா ஒளிர்கிறது; உலகம் வியக்கிறது. சோற்றுப் பானைக்குள்தான் உலகம் இருக்கிறது என்று நம்புகிறவர்களால் இந்தியா உருப்படாது!''
“கேட்பதற்குக் கொச்சையாக இருந்தாலும் மனிதன் சிந்திப்பதற்கு முன் சாப்பிட வேண்டும் என்பது இயல் பானதையா! பசியென்றால் என்னவென்று அறியாதவர்களுக்கு இந்தியாவின் அடித் தளத்தில் எரியும் நெருப்பும் தெரியாதுதான்.
பட்டினியும் பாமரத்தனமும், அறியாமையும் அறிவுக்கெதிரான மூட நம்பிக்கைகளும் மலிந்துள்ள நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட பொருளற்றவையாகிவிடும். அறியாமை நிறைந்த நாட்டில் விஞ்ஞானம் வெறும் கவர்ச்சிப் பொருள்தான். வர்த்தகச் சூதாடிகளுக்கு அது வசதிதான். ஒரு கொள்ளைக் கூட்டம் சவாரி செய்வதற்காக ஒரு தேசமே பணத்தைக் கொட்டி அழவேண்டுமா?''
“இம்மாதிரியான பேச்சுக்களெல்லாம் தேசபக்தியற்றவர்களின் பொறுப்பற்ற புலம்பல்கள். உலகம் இப்போது அறிவியல் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. இதில் இந்தியா பின்தங்கி விடக் கூடாது!''
“நடப்பது அறிவியல் போட்டியா? உலகைக் கொள்ளையிடும் ஆதிக்கப் போட்டியா? என்பதுதான் பிரச்னை. அறிவியல் என்பது மக்களிடமிருந்தும், நேர்மையுணர்ச்சியிலிருந்தும் விலகி விடக் கூடாது என்பதுதான் முக்கியம்!''
அறிவியல் போட்டி ஆதிக்கப் போட்டியாவது தவிர்க்க முடியாதது என்பது ‘மூலதன' வாதம். அறிவியல் கொடைகள் அனைத்தும் மக்களுக்கே என்பது சோஷலிச வாதம். இந்த வாதங்களுக்கு மத்தியிலே ஓசைப் படாமல், விஞ்ஞானிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வேலைகளோடும் கூலிகளோடும் கட்டுண்டு கிடக்கிறார்கள். விஞ்ஞானம் ஒரு தொழிலாகி விடும்போது எல்லாத் தொழில்களிலும் நடக்கும் ஊழல்களும் பேரங்களும் விஞ்ஞானத் தொழிலையும் விட்டுவைப்பதில்லை.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் புதிதாய் விடப்பட்ட எச்.எல்.வி.4சி வெடித்தது சாதாரண நிகழ்வுதான். அடுத்த முறை வெற்றி நிச்சயம் என்று சமாதானம் சொல்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும்போது புதிய கண்டுபிடிப்புகளில் முனையும் போது தோல்வி ஏற்படுவது இயல்பானதே என்று எண்ணத் தோன்றும்.
ஆனால் எச்.எல்.வி.4சி வெடித்தது இயல்பானது தானா? இந்தியத் தொழில்துறையில் அன்னியர் நுழைந்திருக்கிறார்கள். இந்திய அரசியல் ஆட்சியில் அமெரிக்கா நுழைந்திருக்கிறது. இந்திய ராணுவத்துக்குள்ளும் ‘உளவுத் துறை'க்குள்ளும் தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக இந்திய அரசே ஒத்துக் கொள்கிறது. இந்திய அறிவியல் துறைக்குள் அன்னிய சக்திகள் நுழைய முடியாதா?
இது யூகமல்ல; கசப்பான உண்மை.
இஸ்ரோவின் செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் தொழில் நுட்ப விற்பன்னர்கள் - “இப்போது ஏவப்பட்ட செயற்கைக்கோள் வெடிக்கும் என்பது இரண்டு மாதங்களுக்கு முன்பே எங்களுக்குத் தெரியும்'' என்கிற தகவலைக் கசிய விடுகிறார்கள். “இந்தியா விண்வெளி ஆய்வில் முன்னேறுவதை அமெரிக்கா விரும்பவில்லை.
அமெரிக்காவின் விருப்பத்துக்கு இசைவானவர்கள் இஸ்ரோவுக்குள் இருக்கிறார்கள்'' என்கிற தகவலும் கிடைக்கிறது. அறிவியல் போட்டி என்பது ஆதிக்கப் போட்டியும்தான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|