farmers protestஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளை எப்படிப் பாதிக்கிறது என்பது குறித்து சுருக்கமான விளக்கம்.

இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன் வரைவுகளை முன்வைத்து கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது. ஒன்று ‘உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரைவு 2020’ என்ற சட்டத் திருத்தம், அடுத்தது, ‘விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) ஒப்பந்த சட்ட முன்வரைவு’ அடுத்தது ‘பண்ணைச் சேவை முன்வரைவு’ என்று மூன்று வரைவுகள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்தகைய சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் ஏன் நடந்து வருகின்றன. அதன் பின்னணிதான் என்ன?

இந்தியாவில் 55 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். விவசாய சந்தையில் புரளும் தொகை 16.5 இலட்சம் கோடி ரூபாய். தேவைக்கு மட்டுமே இருந்த விவசாய உற்பத்தி, பசுமைப் புரட்சிக்குப் பிறகு சந்தையில் விற்பனைக்கான துறையாக மாறிப் போனது. அதற்காகக் கொள்முதல் நிலையங்கள் வந்தன.

ஆனால் பொதுத் துறை நிறுவனங்கள் எப்படி சீரழிக்கப்பட்டனவோ அதேபோல இவையும் சீரழிக்கப்பட்டன. இதையே காரணங் காட்டி அவற்றை மூடும் நடவடிக்கைகளும் நடந்தன. அத்தோடு அவற்றை தனியார்களிடம் ஒப்படைக்கவும் செய்தார்கள். குறிப்பாக பீகாரிலும் கேரளாவிலும் நடந்த முயற்சிகள் நமக்கு ஒரு பாடமாக மேற்கொள்ளப்பட வேண்டியன.

பீகார், கேரளாவில் என்ன நடந்தது ?

பீகாரில் விளைந்த நெல்லைக் குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து பல லட்சம் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போய் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலைக்கு (ஏனெனில் அங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்தது) விற்றுவிட்டார்கள்.

பஞ்சாப் மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் ஏறத்தாழ 5 லட்சம் நெல் மூட்டைகளைப் பறிமுதல் செய்த செய்திகள் வெளிவந்தன. கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் பீகாரில் நிறைய உழவர் குடும்பங்கள் புலம் பெயர்ந்தன. இன்று இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் உள்ள உடல் உழைப்பாளிகளில் கணிசமானவர்கள் அவர்களே.

கேரளாவில் கோவிட்-19 நெருக்கடியால் அரசு கூட்டுறவு பால் நிறுவனம் இலவசமாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பால் வழங்கியது. ஆனால் எந்த தனியார் நிறுவனமும் வழங்க முன்வரவில்லை. இந்த இரண்டு அனுபவங்களும் நம்முன்னால் வந்து செல்கின்றன.

அரசு வாதங்கள் சரியா?

• அரசு முன்வைக்கும் வாதம் என்ன? உழவர்கள் தங்களது விளைபொருளை எங்கும் கொண்டு சென்று விற்றுக்கொள்ளலாம் என்பதாகும். அதற்கு புதிய சட்டம் ஒன்றும் தேவையில்லை. ஏற்கனவே உழவர்கள் தங்கள் விளை பொருட்களை எங்கும் கொண்டு சென்று விற்பதை யாரும் தடை செய்ய முடியாது.

உண்மையில் இந்தச் சட்டத்தின் உட்பொருள், வணிகர்கள் எங்கும் சென்று வேளாண் விளைபொருட்களை வாங்கலாம் என்பதாகும். ஆக ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக, உழவர்களைக் காப்பாற்றப் போகிறோம் என்று கூறி பெருவணிகர்களைக் காப்பாற்றும் முயற்சி இது என்றே கூற முடியும்.

• அடுத்தாக நிறைய வாங்குவோர் சந்தைக்குள் வரும்போது போட்டி உருவாகி உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். உண்மையில் அப்படி நடக்கவில்லை என்பதற்கு பீகாரும், கேரளாவும் நல்ல எடுத்துக்காட்டுகள். பீகாரில் உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை.

கேரளாவில் அவசரகாலத்தில் கூட தனியார் நிறுவனங்களில் நிறைந்த பாலை புலம் பெயர் மக்களுக்குக் கொடுக்கவில்லை. நாம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் போட்டி ஏற்படுத்தினால் கட்டணம் குறையும் என்றார்கள். நடைமுறை என்ன? பல நிறுவனங்கள் வருவதுபோல் வந்தன. அவை ஒரே நிறுவனமான ரிலையன்சால் அடித்து நொறுக்கப்பட்டு சின்னாபின்னமாகியுள்ளன. இதுதான் நமது வேளாண் சந்தையிலும் நடக்கும்.

குறிப்பாக, கொரானா அச்சத்திற்குப் பின்னர் வெகு வேகமாக வளர்ந்துவரும் ஆன்லைன் சந்தைக்கு ஏராளமான கிடங்குகள் வேண்டும். பெருமளவு கிடங்குகளில் இருப்பு வைக்கும் சூழல் சட்டங்களின்படி இயலாது.

எனவே இதை மாற்றி யாரும் எவ்வளவு இருப்பு வேண்டுமாலும் வைத்துக் கொள்ளலாம் என்று இப்போது வந்துள்ள சட்டம் உறுதி செய்கிறது. எனவே இனி பதுக்கல் என்ற பேச்சே வராது, அதாவது அவர்கள் சட்டப்படி இருப்பு வைத்துக் கொள்வார்கள். பதுக்கல் என்று கூறி நடவடிக்கை எடுக்க முடியாது. விலையை எவ்வளவு வேண்டுமானாலும் கூட்டி விற்கலாம். யாரும் கேட்க முடியாது.

• ஒரே நாடு ஒரே சந்தை என்ற முழக்கம் அமெரிக்க நாட்டில் உருவான முழக்கம். அமெரிக்காவின் அந்த நடைமுறையை வெட்டி ஒட்டும் வேலையை இந்தியாவில் செய்து வருகிறார்கள். வேளாண்மையை அமெரிக்கமயமாக்கும் பணி என்றே கூறலாம்.

உண்மையில் அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்கு மேல் தனியார்மயம் நடைமுறையாக்கப்பட்டடு அங்கு பண்ணையாளர்கள் மிகப் பெரும் அளவில் மானியங்களில் உயிர் வாழ்கிறார்கள்.

அவர்களது வருமானம் ஆண்டுக்கு ஆண்டு கடுமையாகக் குறைந்து வருகிறது. ஏறத்தாழ 1.3 விழுக்காடு மக்கள் தொகையே வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் அங்கு ஈடுபடுகிறார்கள். கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு 42 விழுக்காடு மக்கள் வேளாண்மையை நம்பி இருந்தார்கள். அங்கு 9150 லட்சம் ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது.

இந்தியாவில் 3946 லட்சம் ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது. ஏறத்தாழ இந்தியாவில் 78 கோடி மக்கள் வேளாண்மையை நம்பி உள்ளார்கள். அமெரிக்காவில் 39 லட்சம் பேர் மட்டுமே வேளாண்மையில் உள்ளனர்.

அப்படியானால் அந்த மாதிரி எப்படி இந்தியாவிற்குப் பொருந்தும்? வேளாண்மையை நம்பிய பெருந் தொகை மக்கள் தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேறினால் எப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கும் என்பதை கோவிட்-19 நமக்குத் தெரிவிக்கவில்லையா? அப்படியானால் நமது வேளாண்மையை பரவலாக உயிரூட்டுவதன் மூலமாகத்தானே பெரும்பான்மையான உழைக்கும் மக்களைக் காக்க முடியும்.

• இந்திய அரசியல் சாசனம் வேளாண்மையை மாநிலப் பட்டியலில் வைத்துள்ளது. அந்த உரிமையை இந்த அவசரச் சட்டங்கள் முற்றிலும் மீறுகிறது. ஏற்கனவே சரக்குசேவைவரி (ஜிஎஸ்டி) மூலம் வணிக வரி உரிமை பறிபோன நிலையில் தேசிய நுழைவுத்தேர்வு மூலம் உயர்கல்வி உரிமை பறிபோன நிலையில் இப்போது இந்தச் சட்டங்கள் மாநிலங்களை மேலும் உரிமை யற்றவையாக மாற்றுகிறது.

• அதுமட்டுமல்ல அதைவிட பெரிய ஆபத்து குறைந்தபட்ச ஆதரவு விலை. சட்டத்தில் அது நிர்ணயிக்கப்படவில்லை. அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நீக்க மாட்டோம் என்று வாயால் உறுதி கூறுகின்றது. ஆனால் சட்ட வரைவில் ஏதும் இல்லை. உண்மையில் குறைந்தபட்ச ஆதார வேலையைவிடக் குறைவாக வாங்கும் வணிகர்களைத் தடை செய்ய எந்தச் சட்டமும் இல்லை.

உண்மையில் என்ன செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை நியாயமாக அறுதியிட வேண்டும். அதை ஆண்டுக்கு ஆண்டு விலைவாசிக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். குறைந்தால் குறைக்கட்டும், உழவர்கள் யாரும் அதை எதிர்க்கப்போவதில்லை. அதேபோல அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.

குறிப்பாக சிறுகுறு உழவர் குழுக்களை அதில் பயன்படுத்த வேண்டும். உழவர் மற்றும் உற்பத்தியாளர் கம்பெனி என்று ஆயிரம் உழவர்களைச் சேர்த்துக் குழு வைத்து போகாத ஊருக்கு வழிகாட்டும் கதையைத் தூக்கிப் போட்டு விட்டு, இருபது முதல் ஐம்பது பேர்களுக்குள் இருக்கும் குழுக்களை வலிமைப்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து இயங்க வைக்க வேண்டும்.

விலையை உறுதி செய்யும்போது (அதாவது உண்மையாக அவர்கள் விளைவித்த செலவை ஈடுகட்டும் முறையான விலை) அது சிறு மண்டியாக இருந்தாலும், பெரும் நிறுவனமாக இருந்தாலும் அதில் நடக்கும் குளறுபடிகளைக் களைய வேண்டும், அடுத்ததாக தரம் என்ற பெயரில் உழவர்களிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கும் போக்கு, முன்பணம் கொடுத்துவிட்டு அதற்கு வட்டி போட்டு வாங்குவது, அவர்களை மற்றவர்களிடம் விற்பனை செய்ய விடாமல் தடுப்பது, விலைப்பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல்
இருப்பது, குறிப்பாக எடையில் 'அடிப்பது' அதாவது எடைபோடுவதில் ஏமாற்றுவது, போன்ற குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் பொது விநியோக முறை என்ற நியாய விலைக்கடைகளை வலுப்படுத்த வேண்டும். ஆங்கங்கே விளையும் பொருள்களை மதிப்பேற்றி ஆங்கங்குள்ள நியாய விலைக் கடைகளுடன் இணைக்க வேண்டும்.

அதன் மூலம் தேவையற்ற பணச்செலவு குறைவும். இதனால் குறைந்த விலையில் நல்ல உணவு மக்களுக்குக் கிடைப்பதோடு உழவர்களுக்கும் நியாயமான விலை கிடைக்கும். உற்பத்தியையும், விநியோகத்தையும் பரவலாக்கி, மக்கள் மயப்படுத்துவதற்கு முயல வேண்டும்.

இந்த முறையில் ஒரு சில குறைகள் இருப்பதால் அவற்றை களைய வேண்டுமேயன்றி, அவற்றை மூடிவிட்டு பெருநிறுவனங்களிடம் ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது.

நடைவண்டியில் நடைபழகும் குழந்தை தவறிக் கீழே விழுந்துவிட்டது என்பதற்காக நடை வண்டியையே தூக்கி வீசும் கதையாக இன்றைய ஆட்சியாளர்கள் வலுவான அரசுக் கட்டமைப்புகளைச் சிதைப்பது நல்லதல்ல.

அதைவிட அவசியமான பணி, வேளாண் துறையில் உள்ள ஊழியர்களின் பங்கு. அவர்கள் இன்று அரசு தரும் திட்டங்களை கொண்டு செல்லும் தரகர்போல ஆக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக பெரும் நிறுவனங்களுக்க பொருள்களை விற்கும் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். உழவர்களுக்கு வேளாண்மை அறிவைப் பகிரவும், அவர்களுடன் சேர்ந்து கண்டறியவும் வழிவகை செய்ய வேண்டும்.

அவர்களுக்கு போதிய அதிகாரமும், சுதந்திரமும் கொடுக்கப்பட வேண்டும். அந்தத் துறையை முடக்கிப் போட்டுவிட்டு, பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு எப்படி வேளாண்மையை முன்னேற்ற முடியும்?

- பாமயன்

Pin It