தியாகி பகத்சிங்ன் 79வது நினைவுதினம் இந்த ஆண்டு சி.டபிள்யு.பி. மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளால் உரிய விதத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஆனைக்கூட்டம் மற்றும் மாதாங்கோவில் பட்டியிலும் மதுரை மாவட்டம் சமயநல்லூரிலும் மார்ச் 23 அன்று நினைவு ஸ்தூபி எழுப்பப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மார்ச் 28 அன்று சமயநல்லூரில் மிகுந்த கலை உணர்வுடன் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்கு மாணவர் ஜனநாயக இயக்கத்தைச் சார்ந்த தோழர்.ம.வினோத் குமார் தலைமை ஏற்றார். சி.டபிள்யு.பி. மற்றும் அதன் வெகுஜன அமைப்புகளின் தோழர்களான மாற்றுக் கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவக்குமார் , உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர்.வரதராஜ் , சி.டபிள்யு.பின் சமயநல்லூர் கிளை அமைப்பாளர் தோழர்.ராமநாதன் , அச்சகத் தொழிலாளர் சங்க செயலாளர் தோழர்.செல்வராஜ் , பட்டாசுத் தொழிலாளர் சங்க செயலாளர் தோழர்.தங்கராஜ் , ஆகியோருடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் தோழர்.பகத்சிங் மற்றும் அ.இ.அ.தி.மு.கவைச் சேர்ந்த திரு செ.மலையாளம் ஆகியவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மாணவர் ஜனநாயக இயக்கத்தின் அறிமுகம்
தோழர்.வினோத் குமார் தனது தலைமை உரையில் மாணவர் ஜனநாயக இயக்கம் என்றவுடன் அது ஏதோ புதிதாக திடீரென்று முளைத்த எந்த இயக்கப் பின்னணியும் இல்லாத ஒரு மாணவர் அமைப்பு என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது; ஏனெனில் அது சமீப காலத்தில் கல்வியை மட்டுமின்றி கல்வி வளாகத்தையும் காப்பதற்காக நடைபெற்ற மிக முக்கியமான கல்விக்கான இயக்கம் ஒன்றில் மிகமுக்கியப் பங்காற்றிய அமைப்பாகும்.
அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்கொண்டு மாணவர்களின் உள்ளார்ந்த சக்தியினையும் நீடித்துநின்று போராடும் தன்மையினையும் வெளிப்படுத்தும் விதத்தில் நடத்தப்பட்ட இயக்கத்தில் எந்த வகையான தன்னல நோக்குமின்றி அமெரிக்கன் கல்லூரி மாணவர் சங்கத்துடன் தன்னை அசலும் நகலும் ஐக்கியமாக்கிக் கொண்டு செயல்பட்ட இயக்கம் அது என்ற விசயத்தை எடுத்துரைத்தார்.
அடுத்து உரையாற்றிய சி.டபிள்யு.பி. சமயநல்லூர் கிளையைச் சேர்ந்த தோழர்.ராமநாதன் தனது உரையில் காலாவதியான மருந்துப் பொருட்களை விற்று மனித உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் போக்கினை இத்தனை ஆண்டுகளாக எவ்விதமான மன உறுத்தலும் இன்றி சகித்துக் கொண்டிருந்துவிட்டு இப்போது திடீரென்று அதற்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு செயல்படுவது போல் பாவனை காட்டும் அரசு நிர்வாகத்தின் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முதலாளித்துவ நலன் பேணும் நோக்கம் என்ன என்பதை வினவினார்.
அடுத்து உரையாற்றிய அ.இ.அ.தி.மு.க. வைச் சேர்ந்த திரு.மலையாளம் அவர்கள் தமிழகத்தில் இன்று நடைபெறும் மனித உயிருக்கு ஒரு மதிப்பும் அளிக்காத ஆட்சியில் நிலவும் கொடுமைகளுக்கு எதிராக பகத்சிங் போன்ற மாபெரும் தியாகிகளின் வழித்தடத்தில் மக்கள் இயக்கங்கள் தட்டியயழுப்பப்படுவது அவசியம் என்பதை எடுத்துரைத்தார்.
அவருக்குப்பின் உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்.பகத்சிங் தனது உரையில் மதத்தின் பெயரால் நடத்தப்படும் நிறுவனங்களில் நிலவும் ஒழுக்கக் கேடுகளை அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் சகிக்க முடியாத ஆபாசத்தை வெளிப்படுத்தும் ஊடகங்களின் போக்கை வன்மையாகக் கண்டித்தார். இத்தனை ஊழல் போக்குகள் நிலவுவதை அறிந்திருந்தும் நமதுநாட்டு மக்கள் மடாலயங்களின் பின்னால் அணிதிரள்வதையும் மக்கள் பிரச்னைகளுக்கான போராட்டங்களை புறக்கணிப்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறினார். எந்தவகை அறிவிப்பும் இன்றி மின்தடையை அமுல்படுத்தும் தமிழக அரசின் மின்வாரியம் மின்சாரம் வழங்குவதற்காக இருக்கிறது என்று கூறுவதைக் காட்டிலும் மின்தடையை அமுல்படுத்துவதற்காகவே இருக்கிறது என்று கூறினால் அது பொருத்தமுடையதாக இருக்கும் என்று கூறினார்.
அவருக்குப்பின் உரையாற்றிய தோழர்.செல்வராஜ் பகத்சிங்கின் மகத்தான மனோதிடத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு அவர் சிறைக்குள் நடத்திய உண்ணாவிரதம் என்று கூறினார். அடுத்து உரையாற்றிய தோழர்.வரதராஜ் தொழிலாளர் வர்க்கம் மேதினப் போராட்டத்தின் விளைவாக சாதித்த 8 மணி நேர வேலைநாள் கண்ணோட்டம் தற்போது பறிபோய்க் கொண்டுள்ள சூழ்நிலையை விளக்கினார்.
அடுத்து உரையாற்றிய தோழர். தங்கராஜ் தனது உரையில் மிக எளிமையாக விடுதலை போராட்ட காலத்தில் காந்தியடிகள் தலைமையில் உழைக்கும் மக்கள் பங்கினை நாசூக்காக தடைசெய்த காந்தியடிகளின் வழிமுறையையும் , சமூகத்தின் அனைத்துப் பிரச்னைகளிலிருந்துமான விடுதலைக்கு வழிவகுக்கும் தன்மையதாக விடுதலைப் போராட்டம் அமைய வேண்டும் என்று விரும்பிய பகத்சிங்கின் வழிமுறையையும் முன்வைத்து இரண்டிற்கும் இடையிலான வேறுபாட்டை அருமையாக விளக்கினார்.
தொழிலாளர் சட்டங்களின் வர்க்கப் பாரபட்சம்
அடுத்து உரையாற்றிய மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.சிவக்குமார் தனது உரையில் தொழிலாளர் சட்டங்களே எவ்வாறு தொழிலாளர் கண்ணில் சுண்ணாம்பையும் முதலாளிகள் கண்ணில் வெண்ணெய்யையும் வைப்பதாக உள்ளன என்பதை விரிவாக பல்வேறு தொழிலாளர் சட்டங்களை மேற்கோள்காட்டி எடுத்துரைத்தார். அத்துடன் இடதுசாரிகள் என்ற பெயரில் இங்கு செயல்படும் அமைப்புகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பெரும் புகை மண்டலத்தை ஏற்படுத்தி அதில் உள்நாட்டில் நடைபெறும் முதலாளித்துவச் சுரண்டல் மக்கள் கண்களுக்குத் தெரியாமல் மூடிமறைப்பதைச் சுட்டிக்காட்டினார்.
அணு உலைகளில் விபத்துகள் ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படும் சாதாரண மக்கள் அனைவருக்கும் தேவைப்படும் அளவிற்கானதாக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை இருக்க வேண்டும் என்ற மக்கள் ஆதரவுக் கருத்தை முன்வைப்பதற்குப் பதிலாக இழப்பீட்டுத் தொகையை முதலாளித்துவ நலனுக்குகந்த வகையில் வரையறைப்படுத்த வழிவகுக்கும் முதலாளித்துவ ஆதரவுக் கருத்தை இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகளின் முன்வைக்கும் போக்கை அம்பலப்படுத்தினார்.
இறுதியாக உரையாற்றிய தோழர்.ஆனந்தன் தனது உரையில் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்:
இந்திய ஆளும்வர்க்க அறிவு ஜீவிகளும் ஊடகங்களும் பகத்சிங் பின்பற்றிய வழியை இன்றைய இளைஞர்கள் பின்பற்றாமல் இருப்பதற்கு இரண்டு யுக்திகளை நாசூக்காகக் கையாளுகின்றன. “வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவர்களை நாட்டைவிட்டுத் துரத்துவதற்காக பகத்சிங்கும் அவரது தோழர்களும் பின்பற்றிய வழிமுறைகள் ஒருவகையில் சரியானவையாக இருந்திருக்கலாம்; அது குறித்த நமது பாராட்டுதல்களை அவர்களுக்கு நாம் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் விடுதலைபெற்ற இன்றைய இந்தியாவில் அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதுமில்லை; அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் இன்றைய நிலைக்கு பொருத்தமுடையவையும் அல்ல” என்ற வகையிலான சித்திரத்தை ஒருபுறம் தீட்டுகிறார்கள்.
மறுபுறம் பகத்சிங்கைப் போன்றவர்களின் குணங்கள் அவரைத்தவிர யாராலும் கடைப்பிடிக்க முடிந்தவையல்ல என்று பகத்சிங்கை ஒரு அவதார புருசராக்கி அவரது பாதை இன்றைய இளைஞர்களால் மட்டுமின்றி இனிமேல் என்றும் எங்கும் யாராலும் கடைப்பிடிக்கப்பட முடியாதது என்று காட்ட முயல்கிறார்கள்.
பகத்சிங்கும் மனிதரே
உண்மை அதுவல்ல. பகத்சிங் ஒன்றும் அவர்கள் முன்வைப்பது போல் அவதார புருசரல்ல. அவரும் ஒரு மனிதரே; இளைமைப் பருவத்தில் பல இளைஞர்களிடம் காணப்படும் அத்தனை குறும்புத்தனங்களும் அவரிடமும் இருக்கவே செய்தன. இதை அவர் பயின்ற தேசியக் கல்லூரியில் நூலகராக இருந்த அவரது நண்பர் ராஜாராம் மிஸ்ரா மிகத் தெளிவாக கே.சி.யாதவ் அவர்கள் தொகுத்த நூலில் வெளிப்படுத்துகிறார்.
அதாவது ஒரு காலகட்டத்தில் சமூகத்தில் நிலவும் அடிப்படையான முரண்பாட்டை சரியாக புரிந்துகொண்டு அதற்கு உரிய முறையில் அதனைப்போக்க எதிர்வினையாற்றும் ஈடுபாடும் அதற்கான அர்ப்பணிப்புத் தன்மையும் இருந்தால் பகத்சிங் போன்றவர்கள் பலர் உருவாவதும் சாத்தியமே.
பகத்சிங்ன் மேன்மை எதில் இருக்கிறது என்றால் அவர் சமூக முரண்பாடுகளை அவற்றின் வளர்ச்சிப் போக்கில் அந்த இளம் வயதிலேயே பார்க்க முடிந்தவராகவும் அதற்கு உகந்த விதத்தில் தனது அரசியல் வழியை மாற்றிக்கொள்ள முடிந்தவராகவும் இருந்தார் என்பதில்தான்.
அவரது தந்தையாரையும் சேர்த்து அவரது குடும்பத்தில் மூன்றுபேர் தேசிய அரசியலில் இருந்தார்கள். இருந்தாலும் அவர்களுடைய செயல்பாட்டின் ஒட்டுமொத்த நோக்கமே வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது.
சோசலிச ரீதியிலான தீர்வே சரியான தீர்வு
ஆனால் என்று பகத்சிங் சோசலிசக் கருத்துக்களின் பால் குறிப்பாக 1917 அக்டோபர் சோசலிசப் புரட்சிக்குப்பின் கவர்ந்திழுக்கப் பட்டாரோ அப்போதிருந்து இந்திய மக்களின் பிரச்னைகளுக்கு வெள்ளை ஏகாதிபத்தியம் மட்டும்தான் காரணமா என்று சிந்திக்கத் தொடங்கினார்.
அதன் விளைவாக வெள்ளையர்கள் நாட்டைவிட்டு வெளியேறினால்கூட அவர்கள் வெளியேறியபின் அமையும் ஆட்சியின் அதிகாரம் இந்திய முதலாளிகளின் கரங்களில் வந்து சேருமானால் அப்போதும் இந்திய மக்களின் பிரச்னைகளுக்கு உண்மையான தீர்வு ஏற்படாது என்பதைப் புரிந்து கொண்டார். எனவே அவர் உண்மையான விடுதலையாக இந்திய மக்களின் அனைத்துவகைச் சுரண்டல்களில் இருந்துமான விடுதலையே அதாவது சோசலிச ரீதியிலான தீர்வே சரியான தீர்வு என்பதைப் பார்த்தார்.
அதுவரை தேசியவாத அடிப்படையைக் கொண்டதாக இருந்த அவரது சிந்தனையின் தன்மை சர்வதேசத் தன்மை பொருந்தியதாக மாறியது. அந்த வகையில் இந்திய மண்ணில் தோன்றிய முதன்முதல் முழுக்க முழுக்க சுயசிந்தனை மூலம் இந்தியச் சூழ்நிலையை ஆய்வு செய்த , சோசலிசமே ஓரே தீர்வு என்ற முடிவுக்கு அந்த ஆய்வின் மூலமாக வந்துசேர்ந்த முதல் புரட்சியாளனாகவும் சிந்தனையாளனாகவும் அவர் விளங்கினார்.
அவரது சில வன்முறை சார்ந்த நடவடிக்கைகளை மட்டும் முதன்மைப்படுத்தி முன்னுக்கு நிறுத்தி அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதை இந்திய ஆளும்வர்க்கக் கருத்தோட்டங்கள் மூடிமறைக்கின்றன.
உருக்குப் போன்ற உழைக்கும் வர்க்கக் கட்சி
லெனினது நூல்களை மிக ஆழமாக கற்றுணர்ந்த அவர் எவ்வாறு அமைப்பு ரீதியாக ஒருங்குதிரண்டுள்ள ஒரு அரசு எந்திரத்தை எதிர்கொள்ள அமைப்பு ரீதியாக ஒருங்கு திரண்ட உருக்குப் போன்ற கட்டுப்பாடு கொண்ட ஒரு உழைக்கும் வர்க்க அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்திருந்தார். அத்தகைய அமைப்பை உருவாக்கவும் விரும்பினார்.
அத்தகைய கட்சியாக ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் அமைப்பை வளர்த்தெடுக்க அவர் விரும்பினார். ஆனால் அவரது சில கடந்தகால நடவடிக்கைகள் அவர் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்துச் செயல்பட முயன்ற வேளையில் அதனைத் தொடர விடாமல் அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் தடுத்துவிட்டன.
பகத்சிங்கிடம் இருந்ததைப் போன்ற ஒரு சிந்தனைப்போக்கு கம்யூனிஸ்ட்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்களிடம் இன்று இல்லாதிருப்பதால்தான் இன்றும் அக்கட்சிகள் பகத்சிங் தொடங்கிவைத்த ஏகாதிபத்திய எதிர்ப்புப்போர் இன்றும் தொடர்கிறது என்று அவரது நினைவு தினங்களில் முழக்கமிடுகின்றனர்.
அதாவது ஏகாதிபத்திய அடிமைத் தளையிலிருந்த இந்திய நாடு விடுதலை பெற்று தேசிய முதலாளிகளின் தலைமையிலான ஆட்சியை அமைத்து முதலாளித்துவத்தின் விரைவான அதிக வேகத்திலான வளர்ச்சிக்கு அக்காலகட்டத்தில் செய்ய முடிந்த அனைத்து வேலைகளையும் செய்து அதனைப் பயன்படுத்தி தேசிய முதலாளிகள் ஏகபோகமாக உருவாகும் வாய்ப்பினையும் ஏற்படுத்தி இன்று பொருட்களுக்குப் பதிலாக மூலதனத்தை தன்னைச் சுற்றயுள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு ஏகாதிபத்தியத்தின் கூறுகளுடன் இருக்கக்கூடிய இந்தியாவை இன்றும் ஏகாதிபத்தியங்களினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு என்றே பார்க்கின்றனர்.
சி.டபிள்யு.பி. அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் தோழர்.சங்கர்சிங் அவர்கள் கூறியவாறு இன்று ஏகாதிபத்தியங்கள் உள்ளன. ஆனால் ஒரு காலத்தில் ஏகாதிபத்தியங்கள் இருப்பதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருந்த காலனிகள் இல்லை.
அதாவது பகத்சிங் பார்த்த விதத்தில் சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளை சுயமாக , துல்லியமாக அதன் நீரோட்டத்தில் கணிக்க முடிந்தவர்களாக இவர்கள் இல்லாமல் போனதால்தான் இத்தகைய இமாலயத் தவறான கண்முன் இருக்கும் இந்திய முதலாளிகளைப் பார்க்கத் தவறி அனைத்திற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பழிபோடும் இவர்களது போக்கு இவர்களிடம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதாவது உண்மையிலேயே லெனின் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரும் தலைவராக விளங்கிய காட்ஸ்கியை அவர் முதல் உலக யுத்தத்தின் போது ஜெர்மன் முதலாளித்துவத்தை முக்கிய எதிரியாகப் பார்க்கத்தவறி அதற்கு ஆதரவளிக்கும் விதத்தில் அது பிறநாடுகளின் மீது தொடுத்த போரை ஆதரித்து நிலை எடுத்ததனை மனதிற்கொண்டு அவரை ஓடுகாலி என்று வர்ணித்தார். இன்று இந்திய முதலாளிகள்தான் இந்திய மக்கள் அனுபவிக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என்பதைப் பார்க்கத்தவறி அந்நிய ஏகாதிபத்தியங்களைக் காரணம் காட்டி மக்கள் கவனத்தை திசைதிருப்பும் இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் லெனின் பாணியில் வர்ணிக்கப்பட வேண்டுமானால் கம்யூனிஸ்ட் லட்சியத்தைப் புறம்தள்ளி ஓடிப்போனவர்கள் என்றே வர்ணிக்கப்பட வேண்டும்.
வீணாகிப் போன நம்பிக்கை
பகத்சிங் உருவாக்க விரும்பிய கட்சி அவரது இன்னுயிர் இளமைப் பருவத்திலேயே பறிக்கப்பட்டு விட்டதனால் அவரால் உருவாக்கப்படாமல் போய்விட்டது. இருந்தாலும் அவர் தனது இன்னுயிரை புரட்சி பீடத்தின் முன் மனமுவந்து தானம் செய்ததன் மூலமாக உருவாகும் உணர்ச்சி வேகப் பின்னணியில் கவர்ந்திழுக்கப்பட்டு வந்த இளைஞர்களை அன்று கம்யூனிஸ்ட்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டவர்கள் பயன்படுத்தி அவர் உருவாக்க விரும்பிய கட்சியினை உருவாக்குவார்கள் என்று நம்பினார்.
சுயசிந்தனையின்றி இரவல் கருத்துக்களை மையமாக வைத்தே இயக்கம் நடத்திய அவர்கள் அதனை அறவே செய்யத் தவறிவிட்டனர். இந்நிலையில் அவரது வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் அவர் கையாண்ட சிந்தனைப் போக்கைக் கையாண்டு அவர் விரும்பிய கட்சியாக நமது சி.டபிள்யு.பி. அமைப்பினை மலரச்செய்ய வேண்டும்.
இன்று தோன்றியுள்ள மாறுபட்ட சூழ்நிலைகளைத் துல்லியமாகக் கணிக்கவேண்டும். தொழிலாளி வர்க்கத்தையும் விவசாயிகளையும் காந்தியடிகள் ஒருங்கிணைக்கத் தவறியதற்குக் காரணம் அவர்களது தலைமையில் விடுதலைப் பேரியக்கம் செல்லுமானால் அது வீறுகொண்டதாக மாறி முதலாளித்துவ நலனுக்குத் தேவைப்படும் வரம்பிற்குட்பட்ட விடுதலையோடு நின்றுவிடாது என்று அவர் அஞ்சியதே என்று பகத்சிங் கூறினார்.
மாறிய சூழ்நிலை
ஆனால் இன்று எந்த உழைக்கும் வர்க்கம் மிதமிஞ்சிய புரட்சிகர உள்ளடக்கம் கொண்டதாக பகத்சிங்சினால் கருதப்பட்டதோ அந்த உழைக்கும் வர்க்கத்தின் தார்மீக முதுகெலும்பும் ஒழுக்க , நீதி , நேர்மை உணர்வுகளும் இலவசத் திட்டங்களாலும் வாக்கிற்குப் பணம் வழங்கும் போக்கினாலும் முறிக்கப்பட்டுக் கொண்டுள்ளன.
புதிதாக உருவாகி வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப தொழில்களில் பல்லாண்டுகால தொழிலாளி வர்க்கப் போராட்டங்களின் விளைவாக பெறப்பட்ட வேலைப் பாதுகாப்பும் 8 மணிநேர வேலைநாள் கண்ணோட்டமும் பறிபோய்க் கொண்டுள்ளன.
சுமங்கலித் திட்டத்தின் கீழ் சுரண்டல்
இளம் பெண்களை தாங்கள் அமைத்துத்தரும் விடுதிகளை விட்டு வெளியேறாமல் செய்து காட்டுத்தனமாகச் சுரண்டும் சுமங்கலித்திட்டச் சுரண்டல்கள் எவ்வகை எதிர்ப்பும் இன்றி நடைபெற்றுக் கொண்டுள்ளன. சமூகம் முழுவதுமே அனைத்து மக்களிடமும் ஒருவகை வியாபாரத்தனம் புகுத்தப்பட்டு முதலாளித்துவக் கலாச்சாரமே சமூகத்தின் ஒட்டுமொத்தக் கலாச்சாரம் என்ற சூழல் காரிருள் என கவ்விப் பரவியுள்ளது. கிராம மற்றும் நகர்ப்புறங்களின் உதிரித் தொழிலாளராக விளங்கியவர்கள் அனைவரும் இன்று கமிசனுக்கு ஏங்கும் தன்மை வாய்ந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். பகத்சிங்கின் பாதையில் இந்த வளர்ச்சிப் போக்குகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு அவர் கனவுகண்ட அடிப்படை சமூகமாற்றத்தைக் கொண்டுவர உறுதி கொண்ட கம்யூனிஸ்ட் அமைப்பாக நமது சி.டபிள்யு.பி. வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அது மேலே விவரித்த மாறுபட்ட வளர்ச்சிப் போக்குகளை மனதிற்கொண்டு மக்கள் இயக்கங்களை ஆக்கபூர்வமாக வளர்த்தெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே பகத்சிங்கிற்கு உண்மையான அஞ்சலியினை நாம் செலுத்த முடியும். அதாவது இன்று பகத்சிங் உயிருடன் இருந்தால் அவர் எதைச் செய்வாரோ அதை செய்வதன் மூலமே அவருக்கு உண்மையான அஞ்சலியினைச் செலுத்த முடியும். மார்க்ஸின் ஒரு மேற்கோள் பகத்சிங்கிற்கு மிகவும் உகந்ததாக எப்போதுமே அவரால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. அதாவது Greats are the great because they stand on their knees என்பதே அது. அவர் கூறிய அத்தகைய உயர்ந்தவர்களாக நம்மை உருவாக்கிக் கொள்ள அயர்வின்றி முயல்வோம் என்று கூறி தனது உரையினை தோழர் ஆனந்தன் நிறைவு செய்தார்.
கூட்டம் நிறைவுறும்வரை மிகுந்த அமைதியுடன் தீவிரக் கவனத்துடன் உரையாற்றியவர்களின் உரை வீச்சுக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உள்வாங்கிய விதம் சராசரி பொதுக் கூட்டங்களில் இருந்து இக்கூட்டத்தை பெரிதும் வேறுபடுத்திக் காட்டியது. இந்திய விடுதலைக்கு மட்டுமின்றி உலகத் தொழிலாளி வர்க்கம் முழுவதன் ஒட்டுமொத்த விடுதலைக்காகவும் பாடுபட்ட தியாகி பகத்சிங்கை அவர் தன்னிடமிருந்த சீக்கிய அடையாளமான நீண்ட முடியையையும் , தலைப்பாகையையும் 1929ம் ஆண்டே முற்றாகத் துறந்துவிட்ட நிலையில் அவரது நாத்திகவாத மதசார்பற்ற கருத்துக்களுக்கு நீங்காத களங்கத்தையும் அநீதியையும் இழைக்கும் விதத்தில் சீக்கிய அடையாளங்களுடன் அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை எழுப்பப்பட்டுள்ளதையும் , அந்த அநீதியை அவரது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறெந்த இடதுசாரிக் கட்சியினரும் கண்டிக்காததைக் கண்டித்தும் ஒரு கண்டன தீர்மானம் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் முழுமையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
Abhay Singh Sandhu, son of Bhagat Singh's younger brother Kulbir, believes the Congress has tried to play down the contribution of freedom fighters like his uncle to promote the Nehru-Gandhi family.
Sandhu (52) told MiD DAY from his hometown Chandigarh, "Bhagat Singh was always projected as a terrorist who hurled bombs and fired bullets, which is not true. I feel this is a conspiracy of the Congress to give mileage to the Nehru-Gandhi family and marginalise the freedom fighters like Bhagat Singh and Subhash Chandra Bose as they were against the ideology of Congress."
He added that the Congress has only lately recognised Bhagat Singh, in keeping with popular sentiment. "In a recent issue of a national magazine, Bhagat Singh was rated on top in a survey while Mahatma Gandhi was number six. This shows how angry people are with the policies of the Congress," Sandhu added.
Sandhu is planning to bring out a book, which will have a collection of Singh's letters, so that "people are made aware about the pain and struggle of his friends in the war of independence".
Mukhtar Abbas Naqvi, national vice president, BJP, said, "I completely agree with the family of Bhagat Singh. The Congress Party with a malafide intention has deliberately done a heinous crime by marginalising leaders like Bhagat Singh and Ashfaqulla Khan. They have misused the government machinery for the publicity of the Nehru-Gandhi family."
RSS feed for comments to this post