மாவோயிஸ்டுகளை ஒழிக்க வான்படையைப் பயன்படுத்த வேண்டும் என்று சிபிஎம் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் எச்சூரி கூறியுள்ளாரே அது சரியா?

 காங்கிரஸ்காரர்கள், பா.ஜ.க.வினர் போன்ற இந்திய ஆளும் வர்க்க அரசியல் தலைவர்கள் கூட சொல்லாத வான்படைத் தாக்குதலை சி.பி.எம். கட்சி வலியுறுத்துகிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் தீவிர இடதுசாரிப் பிரிவுதான் சி.பி.எம் கட்சி என்று நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

 இந்தோனேசியப் பன்னாட்டு முதலாளி நிறுவனமான சலீம் பிரதர்ஸ்க்காக மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் உழவர்களின் நிலங்களைத் துப்பாக்கி முனையில் பறித்த ஆட்சிதான் சி.பி.எம் ஆட்சி. அங்கு பலரைச் சுட்டுக் கொன்றார்கள். காவலர் சீருடை அணிவித்து சி.பி.எம் குண்டர்களையும் காவல் துறையினருடன் சேர்த்து அனுப்பினார்கள்.

 அதே போல் டாட்டாவுக்காக சிங்கூரில் உழவர்களிடமிருந்து காவல்துறையை வைத்து விளைநிலங்களைப் பறித்த ஆட்சி சி.பி.எம் ஆட்சி.

 சத்தீஸ்கட், ஒரிசா போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களின் நிலங்களைப் பறித்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கும் நடுவண் காங்கிரசாட்சிக்கு தனது மேற்கு வங்க பாணியை சொல்லிக் கொடுக்கிறது சி.பி.எம்.

 வான்குண்டு போட்டால் எத்தனை ஆயிரம் பழங்குடி மக்கள் கொல்லப்படுவார்கள். இராசபட்சே ஈழத்தமிழர்களை வான்குண்டு வீசி இனப் படுகொலை செய்தது போல் பழங்குடி மக்களைக் கொல்லச் சொல்கிறது சி.பி.எம். இராசபட்சேயின் தமிழினப் படுகொலையை ஆதரித்த கட்சிகள் தானே காங்கிரசும் சி.பி.எம். கட்சியும்.

 காங்கிரஸ் ஆட்சி தனது வான்படைத் தாக்குதல் திட்டத்தை சீத்தாராம் எச்சூரி மூலம் வெளிப்படுத்தி வெள்ளோட்டம் பார்க்கிறது.

 நேப்பாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் புரட்சி செய்த போது அதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு தனது தூதராக எச்சூரியைத்தான் காட்மாண்டுக்கு அனுப்பியது என்பதை இணைத்துப் பாருங்கள். சி.பி.எம். கட்சியின் எதிர்ப்புரட்சிப் பாத்திரம் தெளிவாக விளங்கும்.

குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்துள்ளது பற்றி?

 அண்ணா மூன்றெழுத்து, அவர் தந்த கொள்கை மூன்றெழுத்து, கொள்கை பரப்ப வந்த குஷ்பு மூன்றெழுத்து! இதனால் குடும்பத்தில் வரப்போகும் சண்டை மூன்றெழுத்து!


பள்ளிக் கல்விக் கட்டணத்தை ஒரு வரம்புக்கு உட்படுத்தியிருப்பது பாராட்டிற்குரியது தானே?

 ஆண்டுக்கு 11 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு, சில பள்ளிக்கூடங்கள் 22 ஆயிரம் ரூபாய் வரை கறந்து கொள்ள அனுமதி அளிக்கிறது கோவிந்தராசன் குழு. அதுவும் போதாதென்றால் குழுவிடம் விண்ணப்பித்து மேலும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றார் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு. 3500 மெட்ரிக் பள்ளிகள் மேலும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள விண்ணப்பித்துள்ளன என்கிறார் கோவிந்த ராசன். அமைச்சர்கள் ஆளும் கட்சிப் புள்ளிகள் ஆகியோர் கல்வி வணிகம் செய்பவர்கள்தானே. குறைந்த கட்டணம் போல் காட்டி கூடுதலாக வசூலித்துக் கொள்ள வாய்ப்புகளை வைத்துள்ளார்கள். இதை எப்படிப் பாராட்ட முடியும்?

முள்ளிவாய்க்கால் முதலாண்டு வீரவணக்கம் தமிழ்நாட்டில் பரவலாக நடந்துள்ளதா?

 நடந்துள்ளது. தமிழினத் தலைவர் கட்சியும், தேர்தல் காலத்தில் ஈழத்தை அமைத்துத் தருவேன் என்று முழங்கிய தலைவி கட்சியும் முல்லைத் தீவிலும் முள்ளிவாய்க்காலிலும் சிங்களப் படையால் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் தமிழ் மக்களுக்கு ஒரு நிமிட அமைதி வணக்கம் செலுத்தவில்லை. ஈரமில்லா நெஞ்சினர்.

அரசியல் இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலைதான் உள்ளது. நடப்பு அப்படி இருக்க அரசியலைச் சாக்கடை என்று சொல்வதும் தேர்தலில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொள்வதும் சரியா? அதிகாரத்தைக் கைப்பற்றித் தானே எந்த நன்மையும் உரிமையும் வழங்க முடியும்?

 அரசியலைச் சாக்கடை என்று புரட்சியாளர்களோ தமிழ்த் தேசியர்களோ சொல்வதில்லை. நாடாளுமன்றம் சட்டமன்றம் ஆகியவற்றைத் தான் சாக்கடை என்கிறார்கள் அவர்கள். அரசியல் என்றாலே அது தேர்தல் அரசியல் தான் என்ற கருத்து பலரிடம் உள்ளது.

 சமூகப்புரட்சி, தேச விடுதலைப் போராட்டம் போன்றவை அரசியல் தான். தேர்தலில் நிற்பது பதவி பெறுவது என்பதும் அரசியல் தான். அரசியல் இரண்டு தளங்களில் செயல்படுகிறது. சமூக அமைப்பையே மாற்றிப் புரட்சி செய்தல், அடிமைப்பட்ட தேசத்தை விடுதலை செய்ய விடுதலைப் போராட்டம் நடத்துதல் என்பன புரட்சி அரசியல் வகையாகும்.

 நிலவுகின்ற ஆதிக்க சமூக அமைப்பைப் பாதுகாக்கின்ற சட்ட திட்டங்கள் வழங்கும் அரசியல் பதவிகளைப் பெறத் தேர்தல்களில் பங்கெடுப்பது போன்ற அரசியல் சமூகத்தின் மாமூல் நிலையைப் (குtச்tதண் கிதணி) பாதுகாக்கும் எதிர்ப்புரட்சி அரசியல் வகையாகும்.

 அண்ணல் அம்பேத்கர் சமூகப் புரட்சிக்கான சிந்தனைகளை வழங்கினார். ஆனால் அவர் காங்கிரசு அமைச்சரவையில் சேர்ந்து நடுவண் அமைச்சரானார். அவரால் அதில் இருக்க முடியவில்லை. வெளியேறிவிட்டார்.

 விடுதலைக்குப் போராடிய சேக் அப்துல்லா, லால் டெங்கா ஆகியோர் காங்கிரசுடன் உடன்பாடு கண்டு முறையே காசுமீரிலும், மிசோரமிலும் முதலமைச்சர் ஆனார்கள். விடுதலையைப் பலியிட்டு துரோகிப்பட்டத்துடன் மரணமடைந்தார்கள்.

 அவ்வளவு தொலைவு போவானேன்? தமிழ்நாடு பெறாத பாடமா? அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று முழங்கிய தி.மு.க. 1952 தேர்தலில் பங்கெடுக்கவில்லை. 1957 தேர்தலில் பங்கெடுத்தது. 1956 திருச்சி மாநாட்டில் தி.மு.க. தமிழக ஆட்சியைக் கைப்பற்றி, அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, தனிநாட்டுக் கோரிக்கையை வெல்வது என்று திட்டம் அறிவித்தது.

 அண்ணா காலத்திலேயே 1963-இல் தி.மு.க. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டது. இன்று தி.மு.க. காங்கிரசின் தமிழகக் கிளை என்றால் அது மிகைக்கூற்று அன்று.

 மராட்டியத்தில் இன, மொழி உரிமைகளுக்காக பால் தாக்கரே, ராஜதாக்கரே போராடுவது போல் தமிழ்நாட்டிலும் போராட முடியாதா என்று நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள்.

 அவர்களின் சேனாக்கள் மராட்டிய விடுதலையைக் கோரவில்லை. அவை இந்திய தேசியத்தை ஏற்றுக் கொள்பவை. வரம்புக்குட்பட்டு மொழி, மாநில மக்கள் உரிமைகளுக்காக போராடுபவை. (மத்தியப் பிரதேச பா.ஜ.க. முதல்வர் சௌகான் கூட அவரது மாநிலத்திற்குள் பீகாரிகள் வருவதை எதிர்க்கிறார்). அவை பார்ப்பனியக் கட்சிகள்; தீவிர இந்துத்துவாக் கட்சிகள். எனவே அவை இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகள். அவை தமிழக உரிமைப் போராட்டத்திற்கு முன்மாதிரியாக இருக்கமாட்டா. விடுதலை இயக்கத்திற்கென்று உலகெங்கும் முன்னோடி அமைப்புகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

 தமிழ்த் தேசியப் புரட்சியும் அரசியல் செயல்பாடுதான். இது புரட்சி அரசியல்; இந்திய அரசமைப்பில் நடக்கும் தேர்தல் அரசியல் எதிர்ப்புரட்சி அரசியல்.

Pin It