2019 தேர்தல் களம் வடக்கு, தெற்காகப் பிரிந்து நிற்கிறது. பா.ஜ.க. வடநாட்டுக் கட்சியாகவே செயல்படுகிறது. தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது என்று திராவிடர் இயக்கத்தின் கருத்தை ராகுல் காந்தியும் ப.சிதம்பரமும் பேசி வருகின்றனர். இந்த ஆபத்தை டாக்டர் அம்பேத்கரே சுட்டிக் காட்டியிருந்தார். அம்பேத்கர் 128ஆவது பிறந்த நாள் நினைவாக அம்பேத்கர் கருத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.

வட மாநிலங்கள் தென் மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆபத்துகள் இந்தியாவில் உருவாகிவிடும் என்பதை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர் ‘மொழி வழி மாநிலங்கள் குறித்த சிந்தனை’ என்ற நூலில் அவர் எழுதியிருப்பதாவது:

மாநிலங்களின் பிரிவினைக்கான ஆணையம் மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியிருப்பது மட்டுமல்ல, தென்னாடு வடநாடு மோதல்களுக்கும் வழி வகுத்திருக்கிறது. உ.பி, பீகார் என்ற இரண்டு பெரிய மாநிலங்களையும் அப்படியே நீடிக்க அனுமதித்துவிட்டார்கள். இந்த வடமாநிலங்களுக்கு வலிமை சேர்ப்பது போல், மற்றொரு பெரிய மாநிலமாக மத்திய பிரதேசமும், ராஜஸ்தானும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது வடக்கு தெற்கு மோதலை உருவாக்கியிருக்கிறது. வடக்கு இந்தி பேசும் மாநிலங்கள், தெற்கு இந்தி பேசாத மாநிலங்கள், இந்தி பேசும் மாநிலங்களில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை அளவே பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 48 சதவீதம். இந்த உண்மையை உற்று கவனித்து ஆராய்ந்தால் ஒரு உண்மை நிச்சயமாக புரியும்.

இந்தி பேசும் பெரும்பான்மையோரை, ஒன்றாக்கி விட்டு, தென்னாட்டு மக்களை சிதறடித்திருக்கிறது, மாநிலங்களைப் பிரிக்கும் ஆணையம். தென்னாடு, வடநாட்டு ஆதிக்கத்தை எப்படி சகித்துக் கொண்டிருக்கும்? இந்தியை ஆட்சி மொழியாக அரசியல் சட்ட வரைவுக்குழு ஏற்றுக்கொண்ட போது காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நடந்த ரகசியங்களை நான் இப்போது வெளிப்படுத்த விரும்புகிறேன். ஆட்சி மொழி குறித்துப் பேசும் சட்டத்தின் 115ஆவது பிரிவு பற்றிய விவாதம்தான் ஏனைய பிரிவுகள் மீதான விவாதங்களை விட மிகவும் மோதல்களையும், கொந்தளிப்பையும் கொண்டிருந்தது. இந்தப் பிரிவுக்கு எழுந்த சூடு பறந்த எதிர்ப்புகள் வேறு எந்த பிரிவுக்கும் விவாதங்களில் எழவில்லை. மிக நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிர்ணய சபையில் இந்திக்கு ஆதரவாக 78 வாக்குகளும், எதிராக 78 வாக்குகளும் கிடைத்தன. முடிச்சை அவிழ்க்க முடியவில்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் இந்த ஆட்சி மொழி பிரச்சனை ஓட்டுக்கு வந்த போது ஆதரவாக 78 ஓட்டுகளும் எதிராக 77 ஓட்டுகளும் கிடைத்தன. இந்தி ஆட்சி மொழியாக ஏற்கப்பட்டது ஒரே ஓட்டு வித்தியாசத்தில் தான். என்னுடைய சொந்த நினைவுகளிலிருந்து நான் இந்த உண்மைகளைக் கூறுகிறேன்.

வரைவுக் குழு தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த விவாதத்தின் போது அந்தக் கட்சியின் கூட்டத்துக்குள் பங்கேற்கும் வாய்ப்பு இயல்பாகவே எனக்குக் கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே வடக்கு -தெற்கு மோதல் இருந்தது. தென்னாட்டவர்கள் வட நாட்டினரை விரும்பவில்லை என்ற உண்மையையே இது உணர்த்துகிறது.

விரும்பாத இந்த நிலை வெறுக்கும் எல்லைக்கு மாறும். வடநாடு தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டு, தென்னக அரசியல் மீது எல்லை மீறும் ஆதிக்கம் செலுத்தினால் அது வட நாட்டினர் மீதான வெறுப்பாகவே மாறும். ஒரு மாநிலம் மத்தியில் செல்வாக்கு செலுத்திட வாய்ப்பு தருவது ஆபத்தானது. வடக்கிற்கும் தெற்கிற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. வடக்கு பிற்போக்கானது தெற்கு முற்போக் கானது. வடக்கு மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பது, தெற்கு பகுத்தறிவு சிந்தனை கொண்டது. கல்வியில் தெற்கு முன்னேறிச் செல்வது, வடக்கு பின்தங்கிக் கிடப்பது. தெற்கின் கலாச்சாரம் நவீனமானது, வடக்கின் கலாச்சாரம் பழமையானது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் 1947 ஆகஸ்ட் 15இல் எப்படி பதவி ஏற்றுக் கொண்டார்? காசியிலிருந்து வந்த பார்ப்பனர்கள் யாகம் நடத்தி நாட்டை ஆளப்போகும் பிரதமரிடம் “ராஜ தண்டத்தை” அளித்து பார்ப்பனர் கையிலிருந்த புனித கங்கை நீரை குடித்துத்தானே பதவியை ஏற்றார்?

இறந்த கணவனை எரியூட்டிய நெருப்பில் அண்மைக் காலங்களில் எத்தனை பெண்கள் உடன்கட்டை ஏற்றப்பட்டிருக்கிறார்கள்?

நமது குடியரசு தலைவர் (ராஜேந்திர பிரசாத்) காசிக்குப் போய் பார்ப்பனர்களின் காலை கழுவி, அந்தத் தண்ணீரை குடிக்கவில்லையா?

வடக்கே இன்னும் “சதி” என்னும் உடன்கட்டை ஏறுதல் நடந்து கொண்டு தானே இருக்கிறது?

நாகா சாதுக்கள் வன்முறை வெறியாட்டம் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். கடந்த ஆண்டு அரித்துவாரா திருவிழாவில் இது நடந்ததே, உ.பி யிலிருந்து இதை எல்லாம் எவராவது எதிர்த்தார்களா?