24-9-2017 ஞாயிறு, காலை 10-00 மணியளவில் திருச்சி, செய்ண்ட் ஜோசப் கல்லூரி நூலக அரங்கில், சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துவரும் தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழக்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை நடைபெற்றது.

இதனை தமிழகத்தில் தீண்டாமை வன் கொடுமை வழக்குகளில் முனைப்பாகத் தலையிட்டு உரிய நீதி பெறுவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நிவாரணம், ஈடுசெய் நீதி ஆகியவற்றுக்காகவும் சிறப்பாகப் பணியாற்றி வரும் எவிடன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

kolathurmani 600எவிடன்ஸ் முத்து வரவேற்புரையைத் தொடர்ந்து, எவிடன்ஸ் செயல் இயக்குநர் கதிர் பொது விசாரணையின் நோக்கம் குறித்தும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 தலித்துகள் கொலையானதையும் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தலித் செயல்பாட்டாளர்கள் 25 பேர் கொலை யுண்டுள்ளதையும் குறிப்பிட்டு உரையாற்றினார். மேலும் வன்கொடுமைத் திருத்தச் சட்டம் குறித்தும், அவற்றைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணம், மாதாந்திர குடும்ப உதவிநிதி பெற்றுள்ளது குறித்தும், பாதிக்கப்பட்ட தரப்பினர் துணிச்சலுடன் ஒத்துழைப்பது அதிகரித்து வருவதையும் எடுத்துரைத்தார்.

பொது விசாரணையில் பாதிக்கப்பட்டோர் நேரடியாய் சாட்சியம் வழங்கினர்.. எவிடன்ஸ் பொறுப்பாளர்கள் மேற்கொண்டுவரும் நட வடிக்கைகள்,  வழக்கின் நிலவரம் குறித்து விளக்கினர். பொது விசாரணை நடுவர்களாக, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எழுத்தாளர் பவா. செல்லதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வழ்க்கறிஞர் எழில் கரோலின், முனைவர் கல்பனா கருணாகரன், மருத்துவர் சதீஷ் முத்துராம், பத்திரிக்கையாளர் இரா.வினோத், வழக்கறிஞர் சவீதா ஆகியோர் இருந்தனர். சாட்சியங்களின். வாக்கு மூலங் களைத் தொடர்ந்து விளக்கங்கள் தேவைப்படும் போது நடுவர்கள் கோரிப் பெற்றனர்.

பொது விசாரணை மாலை 5.00 மணிவரை நீடித்தது. 18 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பொது விசாரணையை அறிய ஏராளமான மாணவர்களும், செயல் பாட்டாளர்களும், பல்வேறு இயக்கத்தினரும் வந்திருந்து பல அரிய செய்திகளை அறிந்து சென்றனர்.