‘நாசா’ கூறியிருக்கிறது; ‘அமெரிக்க பேராசிரியர் கண்டுபிடித்திருக்கிறார்’ - இப்படி எல்லாம் சங்பரிவார் கூட்டம், தங்களது போலி அறிவியலுக்கு சான்று களைக் காட்டுவார்கள். ஆராயப் புகுந்தால் கடைசியில் இவை எல்லாம் போலிச் சான்றுகள் என்ற உண்மை வெளிச்சத் துக்கு வரும். கடந்த சில மாதங்களாக மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒரு கதையை கூறி வருகிறார்.

“சமஸ்கிருதத்தில், ‘சல்பாசூத்திரம்’ (Sulbasutras) என்று ஒன்று இருக்கிறது; கணிதத்தில் கிரேக்கர்கள், ‘பித்தகோரஸ்’ சூத்திரத்தை கண்டறிவதற்கு முன்பே, சல்பா சூத்திரத்தில் இந்தக் கணிதம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன” என்று கூறும் ஸ்மிருதி இராணி, அய்.அய்.டி. மாணவர்களின் அறிவியலுக்கு சமஸ்கிருதம் பயன்படும் என்றும் கூறி வருகிறார். இதன் காரணமாகவே அய்.அய்.டி. மாணவர்களுக்கு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக கற்பிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் நியாயப்படுத்துகிறார். ஸ்மிருதி இராணியின் கதை இத்துடன் முடியவில்லை.

அமெரிக்காவின் கோர்வெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், 1990இல் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்து ஒரு மாதகாலம் தங்கி ஆராய்ச்சி செய்தார் என்றும், சமஸ்கிருதம் தெரிந்த அவர், ‘சல்பா சூத்திரத்தை’ ஆராய்ச்சி  செய்தபோது, அதில் ‘பித்தகோரஸ் சூத்திரம்’, கட்டிடக் கலை நுட்பங்கள் இருந்ததை கண்டுபிடித்தார் என்றும் கூறி வருகிறார். ஆனால், அந்தப் பேராசிரியர் பெயரை மட்டும் அமைச்சர் வெளியிடவில்லை.

சல்பா சூத்திர ஆராய்ச்சி செய்த அந்த பேராசிரியர், “உலகின் முதன்மையான ‘வடிவ கணிதம்’ (Geomentry)  சமஸ்கிருதத்திலுள்ள சல்பா சூத்திரத் தில்தான் இடம் பெற்றிருக்கிறது” என்று ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியிருப்பதாகவும் ஸ்மிருதி இராணி கூறி வருகிறார். கோர்வெல் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் பணியாற்றும் அமெரிக்கர் பெயரை கூறாமல் தவிர்க்கும் அந்த பேராசிரியர் பற்றிய விவரங்களை ‘இந்து’ ஆங்கில நாளேடு (மே 25, 2016) கண்டறிந்து வெளியிட்டிருக்கிறது. அவர் பெயர் டேவிட் டபிள்யூ ஹென்டர்சன். அவரை மின்னஞ்சல் வழியாக அந்த ஏடு பேட்டி கண்டது. அதில் அவர் உண்மைகளை போட்டு உடைத்து விட்டார். 

“எனக்கு சமஸ்கிருதம் தெரியவே தெரியாது; ஆங்கில மொழி வழியாகவே சல்பா சூத்திரத்தில் என்ன கூறப்பட்டிருக் கிறது என்பதை சில சமஸ்கிருதம் தெரிந்த பண்டிதர்கள் வழியாக கேட்டறிந்தேன். என்னுடைய ஆராய்ச்சி கணிதத்தின் வரலாற்றைக் கண்டறிவதே ஆகும். அந்த வகையில் ‘சல்பா சூத்திரத்தில்’ கணிதம் பற்றி கூறப்பட்டிருப்பதாக சில வேத பண்டிதர்கள் கூறியதையொட்டி, அதில் ஆர்வம் காட்டினேன்” என்று கூறியுள்ளார். காஞ்சி மடத்தில் அவர் தங்கி நடத்திய ஆய்வுகளை நூலாக வெளியிட்டிருக்கிறார்.

சந்திரசேகரேந்திர சரசுவதிக்கு அந்த நூலை காணிக்கையாக்கியுள்ளார். அந்த நூலில் பித்தகோரஸ் சூத்திரம், சல்பா சூத்திரத்திலேயே இருக்கிறது என்றெல்லாம் அவர் கூறவில்லை. மாறாக, “பல சமஸ்கிருத சுலோகங்களை ஒன்றாக தொகுத்து, ‘சல்பா சூத்திரம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

கி.மு.600-லிருந்து வேத புரோகிதர்கள் இதை உச்சரித்து  வந்திருக்கிறார்கள். அதில் தீமூட்டியாகம்  வளர்ப்பதற்கும் மிருகங்களை பலியிடு வதற்குமானயாக பீடங்களை எப்படி அமைக்கலாம் என்பது குறித்த ‘வடிவமைப்பு கணிதம்’ மட்டுமே கூறப்பட்டிருக்கிறது.

வடிவ கணிதத்தில் இதை மிகப் பழமையானது என்று கூறலாம்” என்று மட்டுமே எழுதியிருக்கிறார். மற்றபடி அமைச்சர் கூறுவது போல பித்தகோரஸ் தத்துவம் பற்றியோ வடிவமைப்பு கணிதம் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை என்ற தகவலை  ‘இந்து’ ஆங்கில நாளேடு அம்பலப்படுத்தியிருக்கிறது.