20.9.2019 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

ஒரே நாடு - ஒரே வரி - ஒரே தேர்வு - ஒரே கல்வி - ஒரே குடும்ப அட்டை - ஒரே பண்பாடு என்பதன் தொடர்ச்சியாக ஒரே மொழி என்ற ஒற்றை இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படும் நடுவண் ஆட்சி, இந்தியை ஒற்றை அடையாளமாகத் திணிக்கத் தொடங்கி விட்டது. இந்தி எதிர்ப்பில் களம் பல கண்ட தமிழ்நாடு இந்தித் திணிப்பை ஒன்றுபட்டு எதிர்த்து வருவது பாராட்டுக்கும் பெருமைக்கும் உரியதாகும்.

அது போலவே இறை நம்பிக்கை கொண்ட தமிழர்கள் தங்கள் குடும்ப நிகழ்வுகளிலும்,  அவர்கள் நடத்தும் வழிபாடுகளிரும் ஒற்றை இந்து பண்பாடாக பார்ப்பனியத்தால் திணிக்கப்படும் சமஸ்கிருத புரோகிதத்தைப் புறம் தள்ள வேண்டும் என்று இம்மாநாடு இறை நம்பிக்கைக் கொண்ட பார்ப்பனரல்லாதாரை கேட்டுக் கொள்கிறது. குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களையும், சமுதாய புரட்சிக்கு உழைத்த தலைவர்களின் பெயர்களையும் சூட்டி தமிழர்கள் தங்களின் சுயமரியாதை அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.