சுருக்கமாகச் சொல்லப் போனால் வேத எதிர்ப்பு சங்கதி தோன்றியது இன்று நேற்றல்ல, “ஈரோட்டு இராமசாமி”யும், திராவிடர் கழகமும் தோன்றிய காலத்திலல்ல; புராண காலத்திலேயே வேதம் வெறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. மற்றபடி வேதத்தை ஏன் படித்தாய்? என்ன படித்தாய்? என்பது அக் காலத்தே தெரியாது. காரணம் அது ஒரு குறிப்பிட்ட வகுப்பாரிடையே வாய்மொழியாக உள்ளத்தில் ஒரு கருத்தளவிலேயே இருந்து வந்திருக் கிறது என்றாலும், இராவணன், இரணியன் ஆகியோர் வேதத்தினை முழுவதும் படித்ததினாலேயே அவர்கள் வேதத்திற்கும், யாகத்திற்கும், தேவர்களுக்கும், பிராமணர்களுக்கும் விரோதிகளானார்கள் என்பதாகத் தெரிகிறது.

எந்த மொழியில் வேதம் ஓதப்பட்டு வந்தது என்றே சொல்ல முடியாது. சமஸ்கிருத மொழியே வேதகாலத்தில் கிடையாது. சமஸ்கிருதம் என்று தனி மொழியே இருந்ததில்லை. அந்தக் காலத்திலே ஆரியர்கள் பேசிய மொழி பல மொழி, மலைவாசி மொழிகள். அப்படிப்பட்ட சகல மொழிகளையும் கிரமப்படுத்தி சமஸ்கிருதம் சகலத்தையும் ஒன்றாக்கிய மொழி என்றாக்கினார்கள். சமஸ்கிருதம் என்ற பதத்துக்கு அர்த்தமே அதுதான். அப்படிச் செய்யும்போது திராவிட மொழிகளிலிருந்தும் பல சொற்களை ஆரியர்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால், அச்சொற்களின் ஒலியை மட்டும் சிறிது மாற்றியமைத்துத் தனிமொழி போலத் தோன்றுமாறு செய்து விட்டனர் என்பதாக “என்சைக்ளோபீடியா” எனும் சர்வ பொருட் களஞ்சியம் கூறுகிறது.

இங்குள்ள நமது தமிழ்ப் புலவர்கள் எனப்படுவோர் தமிழைப் பிழைப்புக்காக கற்று வைத்துக் கொண்டு பாடுபடுகின்றனரே அன்றி, தமிழ்மொழி வளர்ச்சி, கலாச்சார வளர்ச்சிக்கென இம்மியும் காரியத்தில் இறங்கியது கிடையாது. தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் என்பதாகத் தமிழிலும் கடவுள் பாடல்கள் இருக்கின்றன. ஆனால் அவைகளுமே வேதத் தேவர்களைக் கடவுளாகக் கொண்டு பிரார்த்தனைப் பாடல்களாகப் பாடப்பட்டிருக்கின்றனவே அல்லாது, தமிழர்களுக்கான கடவுள்களைக் குறித்து ஒரு சொல்லும் சொல்வதில்லை.

- பெரியார் எழுதிய “புராணங்களை எரிக்க வேண்டும் ஏன்” நூலிலிருந்து